padam-puthuceri-muthirai03 thamizh valarppeer01

  புதுச்சேரி முதல்வர் மாண்புமிகு ந.அரங்கசாமி எளிமையானவர் என்ற பெயர் பெற்றுள்ளார். எனினும் தமிழ்நலப்பணிகளில் கருத்து செலுத்துவதில்லை என்றும் தமிழ்நலனுக்குக்கேடு தரும் வகையில் நடந்து கொள்கிறார் என்றும் தமிழன்பர்கள் கூறுகின்றனர். அவர், எக்கட்சியில் இருந்தால் என்ன தமிழ்ப்பகையான பேராயக்கட்சி(காங்.)-இல் ஊறியவர்தானே என்றும் விளக்குகின்றனர். தம்மீதுள்ள அவப்பெயரை நீக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஐப்பசி 11, 2032 (27 அக்டோபர் 2001) – வைகாசி 3, 2037(17 மே 2006) காலத்தில் முதல் முறையும், வைகாசி 4, 2037 (18 மே 2006)– ஆவணி 20 4, 2039 (செப்டம்பர் 2008) காலத்தில் இரண்டாம் முறையும் முதல்வராக ஆட்சி செய்தவர், வைகாசி 2, 2042 (16 மே 2011) முதல் மூன்றாம் முறையுமாக முதல்வராக உள்ளார். முதல்வராக இருந்து இதுவரை செய்யத் தவறியவற்றை, இப்போதைய முதல்வர் பதவி மூலம்ஆற்றித் தமிழ்ப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

புதுச்சேரியில் ஆட்சிமொழியாகத் தமிழை முழுமையாக நடைமுறைப்படுத்தவும் தமிழ்நலம் சார்ந்த பணிகளுக்காகவும் தமிழ் வளர்ச்சித்துறை ஒன்றை அமைக்கவேண்டும் என்பது புதுச்சரேி மக்களின் நீண்ட கால வேண்டுதலாகும். குறிப்பாகத் தனித்தமிழ் இயக்கத்தலைவர் முனைவர் க.தமிழமல்லன் 32 ஆண்டுகளுக்கும் மேலாகப், பிற தமிழ் அமைப்புகளையும் இணைத்து, இதற்காகப் போரிட்டு வருகிறார்.

1992இல் கல்வித்துறையில் இருந்து பிரித்துத் தனியாகக் கலைபண்பாட்டுத்துறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இத்துறை சார்பில் திருவள்ளுவர், ஔவையார், பாரதியார், பாரதிதாசன், புதுவை சிவம், சங்கரதாசு சாமிகள், முதலான தமிழ்ப்புலவர்களுக்கும் கலைஞர்களுக்கும் விழா எடுப்பதும் கலைவிழாக்கள் நடத்துவதும் கலைமாமணி விருதுகள் வழங்குவதும் அறிஞர்களுக்கு நிதியுதவி வழங்குவதும் பாராட்டிற்குரியது.

இத்துறை நூலகங்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவற்றின் துறையாகவும் செயல்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையான அலுவலக மொழி மேம்பாட்டிற்கான துறையும் இதுதான். எனினும் தமிழ் ஆட்சி மொழிக்கெனவும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கெனவும் 90% தமிழ்மக்கள் வாழும்மாநிலத்தில் தனித்துறை இல்லாதது பெருங்குறையே! இதற்கு முந்தைய ஆட்சியாளர்களும் இதற்குப் பொறுப்புதான். மத்திய அரசும் இதற்கு முட்டுக்கட்டையாக இருக்கலாம். எனினும் மூன்றாம்முறை முதல்வராக இருக்கும் மாண்புமிகு ந.அரங்கசாமி உடனடியாக நடவடிக்கை எடுத்துத் தமிழ்வளர்ச்சித்துறையை உருவாக்க வேண்டும்.

அவ்வாறு உருவாக்கும் பொழுது தமிழ்நாட்டைப் பின்பற்ற வேண்டா. தமிழ்நாட்டில் 1971 இல் ‘தமிழ்வளர்ச்சி இயக்ககம்’ என்னும் புதிய துறை உருவாக்கப்பட்டது. அவ்வாறு உருவாக்கும் பொழுது தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர்களை அமர்த்த வேண்டும் எனக் கலைஞர் திட்டமிட்டார். ஆனால்நாவலர், அவர்களுக்கு அலுவலகப் பட்டறிவு கிடையாது எனப் பணியில் உள்ளவர்களை அமர்த்த வேண்டும் என்று நடைமுறைப்படுத்திவிட்டார்.இதனால், இளங்கலை முதலான ஏதேனும் ஒரு பட்டத்தில் ஒரு பிரிவில் தமிழில் தேர்ச்சி பெற்றவர்கள், இத்துறை அலுவலர்பதவிகளுக்குத் தகுதியானவர்கள் என விதி வரையறுக்கப்பட்டது. இதனால் பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்று எழுத்துப் பணி பார்த்தவர்கள், தாங்கள் பட்ட வகுப்பில் தேர்ச்சி பெறும் வரை உரிய அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்குத் தடையாக இருந்தனர். (முதலில் தனி அலுவலர் என்றும் பின்னர், உதவி இயக்குநர் என்றம் இப்பணியிடப் பெயர்கள் அழைக்கப்பெற்றன.) இது தமிழ் வளர்ச்சித்துறையில்பணித்தேக்கத்தை உண்டாக்கியது. 1990 இல் கலைஞர் முதலமைச்சராகவும் பேராசிரியர் கல்வி அமைச்சராகவும் இருந்த பொழுது தமிழில் முதுகலை பட்டம் பெற்றவர்களைச்சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெரும்பாலும் முனைவர் பட்டங்கள் பெற்றவர்களைத் தமிழாய்வு அலுவலர்களாக அமர்த்தினார். (இவர்கள் பின்னர்த் தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநா்களாக மாற்றப்பட்டனர்.) இதனால் தமிழ் படித்தவர்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டது. எனினும் இன்னும் எழுத்துப்பணியினர் பதவி உயர்வில் இப்பதவியில் அமருவதற்குப் பட்ட வகுப்பில் ஒரு பிரிவு தமிழில் தேர்ச்சி இருந்தால் போதும் என்றுதான் உள்ளது. அதே நேரம் மத்தியஅரசிலும், வங்கிகள், அரசு நிறுவனங்கள், பிற மாநிலங்களிலும் இந்தி அலுவலர் பதவிக்கான கல்வித் தகுதி என்பது இந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இந்திவழியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என உள்ளது. எனவே, மத்திய அரசைப் பின்பற்றிக் கல்வித்தகுதிகளை வரையறுக்க வேண்டும்.தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு முதன்மை அளிக்க வேண்டும். நிதி ஒதுக்கீடு என்று பார்த்தாலும் கடைசியில் இருந்து முதலாவதாகத்தான் தமிழ்வளர்ச்சித்துறை இருக்கும். ஆனால், மத்திய அரசில் போதிய நிதி ஒதுக்கீடு வழங்கப்பெறுகிறது. எனவே, தமிழ்ப்புலமையாளர்களை மதிக்கும் வகையிலும் தேவையான அளவிற்கான முழு நிதியை வழங்கியும் திட்டங்கள் தீட்டி, விதிமுறைகள் வகுத்துப் புதிய தமிழ்வளர்ச்சித் துறையை அமைக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழி ஆய்வு என்பது உரிய அலுவலகம் தரும் புள்ளிவிவரத்தை, ஒரு கடைநிலை ஊழியர் பெற்றுவந்து குறிப்புரையைத் தட்டச்சிட்டு அளிக்கும் அளவிற்குத்தான் உள்ளது. அவ்வாறில்லாமல் செம்மையான நடைமுறைகளைப் பின்பற்றும் வகையில் பணித்திட்டம் இருக்க வேண்டும்.

நூல் வெளியீடுகளுக்கு நிதியுதவி என்பது ஆண்டுவருவாய் வரம்பு25,000 என இருந்து 2011-12 ஆம் ஆண்டு ரூ.50,000/- ஆக உயர்த்தப்பட்டுள்ளதுஇந்தி நூல்கள் வெளியீட்டு உதவிக்குவருவாய் வரம்பு இல்லை. இங்கும் மத்திய அரசே பின்பற்றக்கூடியதாக உள்ளது. எனவே, மத்திய அரசின் இந்தி வளர்ச்சித் திட்டங்களைப் போன்றசிறப்பான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். அதே நேரம், தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வரும் நல்ல திட்டங்களை அங்கும் அறிமுகப்படுத்த வேண்டும்.

 news-puthucheri-tha.va.thu.01

அரசு முத்திரையில் தமிழ் இடம் பெறச்செய்வீர்!

தமிழ் வளர்ச்சித்துறையை உருவாக்குவதுபோல் புதுச்சேரி மாநில முத்திரையில் இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றை அகற்றி, ‘வாய்மையே வெல்லும்’ என்றும் ‘புதுச்சேரி அரசு’ என்றும் தமிழில் குறிக்க வேண்டும். ஒன்றியப் பகுதி என்பதால் இந்தியில் இருக்க வேண்டும் என்பது தவறு. பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழக ஆட்சிப் பொறுப்பேற்றதும் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் அரசு முத்திரையில் சத்தியமேவசெயதே என உள்ளதை வாய்மையே வெல்லும் எனத் தமிழில் மாற்ற வேண்டினார். மூதறிஞர் இராசாசி சத்தியம் வேறு, வாய்மை வேறு என அவ்வாறு மாற்ற எதிர்ப்பு தெரிவித்தார். எனினும் வாய்மையே வெல்லும் என்பதையே பேரறிஞர் அண்ணா நடைமுறைக்குக் கொணர்ந்தார்.

மாநிலத்தகுதி கேட்கும் புதுச்சேரி மக்கள் முதலில் மாநில அரசு முத்திரையில் தமிழ் இடம்பெற அரசை வலியுறுத்தி வெற்றி பெற வேண்டும். மாநில மக்களின் நலனுக்காகத்தான் மத்திய அரசே தவிர, மத்திய அரசின் நலன்களுக்காக மாநில அரசு அல்ல என்பதை அவர்கள் உணரவேண்டும். எனவே, புதுச்சேரி முதல்வர் அரசு முத்திரையை உடனடியாகத் தமிழ் முத்திரையாக்க ஆவன செய்ய வேண்டும்.

எனவே, தமிழ் வளர்ச்சிக்கெனத் தனித்துறை அமைத்தும் அரசு முத்திரையில் தமிழ்மட்டும் இடம்பெறச்செய்தும் புதுச்சேரி முதல்வர் வரலாற்றில் இடம் பெற வேண்டும்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை

ஆவணி 8, 2045 / ஆக.24, 2014  http://www.akaramuthala.in/wp-content/uploads/2013/12/AkaramuthalaHeader.png