bharathidasan07

தாயின்மேல் ஆணை! தந்தைமேல் ஆணை!

தமிழகமேல் ஆணை!

துாயஎன் தமிழ்மேல் ஆணையிட்டே நான்

தோழரே உரைக்கின்றேன்;

நாயினும் கீழாய்ச் செந்தமிழ் நாட்டார்

நலிவதை நான் கண்டும்,

ஓயுதல் இன்றி அவர் நலம் எண்ணி

உழைத்திட நான் தவறேன்.

தமிழரின் மேன்மையை இகழ்ந்தவ னைஎன்

தாய்தடுத் தாலும் விடேன்!

எமைநத்து வாயென எதிரிகள் கோடி

இட்டழைத் தாலும் தொடேன்!

தமக்கொரு தீமை. என்று நற்றமிழர்

எனைஅழைத்திடில் தாவி

இமைப்பினில் ஓடித் தரக்கடவேன் நான்

இனிதாம் என் ஆவி!

மானமொன்றே நல்வாழ்வெனக் கொண்டு

வாழ்ந்த என் மற வேந்தர்

பூனைகள் அல்லர்; அவர்வழி வந்தோர்

புலிநிகர் தமிழ் மாந்தர்!

ஆனஎன் தமிழர் ஆட்சியை நிறுவ

அல்லல்கள் வரின் ஏற்பேன்!

ஊனுடல் கேட்பினும் செந்தமிழ் நாட்டுக்

குவப்புடன் நான் சேர்ப்பேன்!

– பாவேந்தர் பாரதிதாசன்