தலைப்பு-பாடுமனமே பாடு, அம்பாளடியாள் ; thalaippu_paadumaname_paadu_ambaladiyaal

பாடு மனமே பாடு !

 

எங்கள் கவியரசர் இயற்றித்  தந்தபொருள்
ஏந்தும் இசையளிக்கும் இன்பம்!
பொங்கும் மனத்துயரைப்  பொசுக்கி வாழ்வளிக்கும்
போதும் இனியெதற்குத் துன்பம் !

இன்னல் வரும்பொழுதும்  இனிய கானமழை
என்றும் மனச்சுமையைப் போக்கும் !
அன்னை மொழியழகும் அரும்பும் அசையழகும்
அமுதச் சுவையழகைத் தேக்கும் !

பாடும் குயிலுடனே பருவ மங்கையவள்
ஆடிக் கழித்திடுவாள் தினமே !
நாடி வரும்துயரும்  நகரும் இன்னிசையால்
நல்ல மருந்திதுதான் மனமே !

காதல் உணர்வுகளைக் கலந்து வந்தஇசை
ஆளும் எமதுயிரை  இதமாய் !
பாழும் மனத்திரையில் படியும் இன்னிசைகள்
பாசம் வளர்த்திடுமே  பதமாய் !

ஓலைக் குடிசையிலே  ஒடுங்கி வாழ்கையிலும்
ஊக்கம் அளித்த தமிழ்ப்  பாடல் !
வேலை தரும்சுமையை  விரட்டி அடித்திடுமே
விந்தை விழைந்த  தமிழ்க் கூடல் !

காடு மணப்பதுபோல் கன்னல் கவியனைதும்
காந்தம் எனஇழுத்து ஓடும் !
பாடும் பொருள்புதிதாய் படரும் போதினிலே
பாரில் இல்லையொரு ஈடும் !

சுற்றம் இருந்துமொரு சுகமும் இல்லையெனச்
சுற்றி அலைந்தகதை போதும் !
வற்றும் நினைவலையில் வசந்த கானமழை
வந்து உதிக்கஇன்பம் மோதும் !

பற்று அறுந்துமனம் பதறும் வேளையிலும்
பாடி வைத்தகவி கோடி !
அற்றைக் கனவுபல அகத்தில் தோன்றநிதம்
ஆன்மா மகிழ்ந்திருக்கும்  பாடி !

கவிஞர் அம்பாளடியாள்