அடுத்தவன் வாயில் உண்பான் உண்டோ?  

அவனவன் வாயா லன்றிப்
பிறனெவன் உண்ண வல்லான்
அவனவன் கண்ணா லன்றிப்
பிறனெவன் காண வல்லான்
அவனவன் செவியா லன்றிப்
பிறனெவன் கேட்க வல்லான்
அவனவன் மொழியினத்தைப்
பிறனெவன் காப்பான் வந்தே!

 

தன்னினம் காப்ப தற்கே
தகவிலான் தன்னி னத்தின்
திண்ணிய நெறியைப் போற்றுந்
திறனிலான் தேர்வார் தம்மை
அன்னிய ரென்றே யெண்ணி
ஆழ்குழி வெட்டி யதனுள்
கண்ணிலா னாய் வீழும்
கதையிவன் கதையாய்ப் போயிற்றே!


பட்டங்கள் பெற்றா லென்ன?
பதவிகள் பெற்றா லென்ன?
கற்றவர்க் கூடி யொன்றாய்
கலந்துரை யாடி யென்ன?
உற்றதோ ரினத்தால் மொழியால்
ஒற்றுமை யாகா நெறிபால்
பற்றுதல் கொண்டு விட்டால்
பாரினில் உண்டோ மேன்மை

 

பாவலர் அ.பு.திருமாலனார்

http://tamilaalayam.blogspot.in/2008/