வட்டுவாய்க்கால் : vattuvaaykkalbridge

அகம் கனக்க அகன்று போனேன்!

முல்லைத்தீவு போயிருந்தேன் – அந்த
முள்ளிவாய்க்கால் தாண்டிப் போனேன்
இறங்கி நின்று படமெடுக்க – என்
இதயம் ஒன்றும் இரும்பால் ஆனதில்லை

விசுமடு தாண்டிப் போக நான் தொழுத
வீரர் புதைந்த குழி மேடாய் கண்ட பின்னர்
வீதி வழி விடுப்புப் பார்த்து மனம் கனக்க
விருப்பம் இன்றி பூனை போல ஆகி நின்றேன்

ஆனந்தபுரமும் மாத்தளனும் பெயர்ப் பலகையிலே
அருகிருந்த தம்பி தட்டி அதன் கதை சொல்லிக் காட்ட
ஆவி அடங்கி அத்தனை உயிர் கொடுத்த இடத்தை
ஆர்வம் இன்றி அகம் கனக்க அகன்று போனேன்

வட்டு வா ய்க்கால் பாலம் தாண்ட, தேக்கி வைத்த
மீதிக் கண்ணீர் விழி உடைத்து வழி தேட,
வார்த்தைகள் வாய் திறந்து உதிர்க்க மறுத்து
வரலாற்றில் பதிந்த அந்தத் தடம் கடந்தேன்

இந்த ஏரிதான் எங்கள் உறவுகள் உடலங்கள் மிதந்த ஏரி
இரத்த ஆறாய் செங்குழம்பாய்த் திடப் பொருளாய் மிதந்த ஏரி
மறு கரை இருந்து மிதக்கும் உடலங்களை விலத்தி விட்டு
முற்றும் மறந்து நீர் பருகினோமென மச்சான் சொன்னான்

வாழ்க்கையிலே நான் போக விரும்பா இடம் – தமிழ்
வரலாற்றின் முடிவுரையும் முகவுரையும் சொல்லுமிடம்
எதிர்பாரா பயணம் அது எதிர் கொண்டு வந்து விட்டேன்
இனி ஒருக்காலும் வேண்டாம் என் வாழ்வில் அது

வீழ முடியாத வீரம் வஞ்சித்து வீழ்த்தப்பட்ட வரலாற்றை
விடுதலைக்காய் உயிர் தந்த வீரியம் கொண்ட அந்த
வித்துகளின் பெயரால் கேட்கிறேன் யாரும் பிழைப்புக்காய்
வீர காவியம் என்று விலை பேசி விற்று விடாதீர்.

#‎ஈழத்துப்பித்தன்

(படம்: வட்டு வாய்க்கால் பாலம். யுத்தத்தின் இறுதி மையப் புள்ளியாகச் சொல்லப்படும் இடம். இந்த நீரேரி இறுதி நேரத்தில் உடலங்கள் நிறைந்து செந்திறத்தில் ஓடியதாம்)