(கவிஞாயிறு தாராபாரதி 9 & 10 தொடர்ச்சி)

கவிஞாயிறு தாராபாரதி 11 & 12

 

மண்ணதற்குள் அழிந்தொழியும் மனிதம் என்னும்
மறைகின்ற இலக்கணத்தை மாற்றிக் காட்டு!
திண்மையினைக் கொண்டுயர்ந்த திறனால் என்றும்
திரும்பாத சரித்திரத்தில் திளைத்து வாழ்நீ!
உண்மையிதே! உன்னளவில் உயர்வு வேண்டி
உடைமைதேடி உலகுழல்தல் உயர்வே அன்று!
திண்ணைதனை இடித்தங்கோர் தெருவை ஆக்கு!
தெருவாங்கே விரியுமதில் தேசம் காண்பாய்! (11)

பள்ளத்து மண்புழுவைப் பாம்பாய் மாற்றிப்
படமெடுக்க வைக்குமவர் பாக்கள்! பூக்கள்
அள்ளித்தான் அவர்தெளித்தார்! அனைத்தும் தீமை
அழிப்பதற்காய்த் தீயுமிழும் நாக்கள்! தீக்குள்
தெள்ளுந்தேன் அவர்கவிதை! தெறிக்கும் போதே
சிந்தனையின் சுடரேற்றும் தீக்கள்! மக்கள்
உள்ளத்தை உலுக்கும்பொய் உதறச் செய்தே
உயர்வுக்காய் வழிகாட்டும் ஊக்கப் பூப்பே! (12)

 

– சந்தர் சுப்பிரமணியன்

கவிஞாயிறு தாராபாரதி கவிமலர்