தலைப்பு-சிறகுகள்தேவையில்லை, மரு.பாலசுப்பிரமணியன் ; thalaippu_sirakukaltheavaiyillai_maru-bala

பறக்கத் துணிந்தவர்க்கு
இறகுகள் பாரமில்லை
சிறக்கத் துணிந்தவர்க்கு
சிறகுகள் தேவையில்லை

இறக்கத் துணிந்தவர்க்கு
மரணமொரு அச்சமில்லை
துற‌க்கத் துணிந்தவர்க்குத்
துணியுமொரு மானமில்லை

மறக்கத் துணிந்தவருக்குப்
தோல்வியொரு துக்கமில்லை
நடக்கத் துணிந்தவர்க்குப்
பாதையொரு தூரமில்லை

அடக்கத் துணிந்தவர்க்குக்
காமமொரு கடினமில்லை
மடக்கத் துணிந்தவர்க்கு
நாவுமொரு நீளமில்லை

படிக்கத் துணிந்தவர்க்கு
வறுமையொரு விலக்கில்லை
முடிக்கத் துணிந்தவர்க்கு
யுத்தமொரு சத்தமில்லை

அகழத் துணிந்தவனுக்கு
அடர்பாறையொரு தடையில்லை
பழகத் துணிந்தவனுக்கு
மொழியுமொரு தடங்கலில்லை

கொடுக்கத் துணிந்தவனுக்கு
பொருளொரு குறையில்லை
தடுக்கத் துணிந்தவனுக்குப்
புனலுமொரு பொருட்டில்லை

வாழ்த்தத் துணிந்தவனுக்கு
வார்த்தையொரு பஞ்சமில்லை
வாழத் துணிந்தவனுக்கு
வாழ்வுமொரு துக்கமில்லை

balasubramaniyam_mananalamaruthuvar02

அருத்தமுள்ள இனியமனம் மரு.பாலசுப்பிரமணியன்