Thamizhannai02

நிறைவினில் மலர்ந்தொளிரும் தமிழே – என்

நெஞ்சத்தில் அமுதாகும் தமிழே!

உறவினில் உயிரான தமிழே –  என்

உணர்வினில் கவிபேசும் தமிழே!

ஒழுக்கத்தின் மணம்வீசும் தமிழே –  வீர

உருவத்தில் கூத்தாடும் தமிழே!

விழுப்பத்தின் நலமுரைக்கும் தமிழே –  நீதி

மேவியே கோலோச்சும் தமிழே!

நிலவின் குளிர்பெற்ற தமிழே –  கதிர்

நிரப்பும் ஒளிபெற்ற தமிழே!

மலரின் மெதுவேற்ற தமிழே –  தேன்

வழங்கும் சுவை கொண்ட தமிழே!

மின்னின் விசைகொண்ட தமிழே –  கடல்

விரிக்கும் திரைமுழக்கத் தமிழே!

கன்னி நிறைபொலியுந் தமிழே –  எங்கள்

கவிஞர் நிதியான தமிழே!

சங்கப் புலவர்களின் தமிழே –  வையம்

தழைக்கக் குறள் தந்த தமிழே!

துங்க மணிச்சிலம்பின் தமிழே –  கம்பன்

சோதி மகுடமொளிர் தமிழே!

நான்பேச மெய்குளிரும் தமிழே –  என்

நாவெல்லாம் தித்திக்கும் தமிழே!

வான்தேசு கொட்டுகின்ற தமிழே –  தென்றல்

வாசம் அளைந்துவருந் தமிழே!

அன்புக்கு வித்தூன்றும் தமிழே –  தெய்வ

அருளுக்கு வழிகாட்டுந் தமிழே!

துன்பமாம் முகிலொழிக்கும் தமிழே –  வாழ்வைச்

சுவையாக்கும் தெய்வீகத் தமிழே!

அகிலமெல்லாம் ஒன்றென்னும் தமிழே –  வாழ்வில்

அனைவர் நலம் விழைகின்ற தமிழே!

பகையொழித்தே யமைதிதரும் தமிழே –  இந்தப்

பாரெல்லாம் போற்றுகின்ற தமிழே!

– குறள்நெறி: மாசி 3, தி.ஆ.1995,  பிப்.15, கி.ஆ.1964