(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 5 தொடர்ச்சி)

பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி

களம் : 5 காட்சி : 6
கொலைக்களம் – அதிகாரிகள், கொலைஞர், உதாரன், அமுதவல்லி, பொதுமக்கள்
கலி விருத்தம்

அதிகாரி: சாவிலும் பிரியா இன்பம் காண
ஆவிநீர் துறக்குமுன் அந்நாள் தொட்டுப்
பூவுலக மரபினைப் போற்றும் படியாய்
மேவுஞ் சொல்சில மேன்மையீர் சொல்வீர்

எண்சீர் விருத்தம்

உதாரன் : பேரன்பு கொண்டோரே
பெரியோ ரேஎன்
பெற்றதாய் மாரேநல்
லிளஞ்சிங் கங்காள்
நீரோடை நிலக்கிழிக்க
நெடும ரங்கள்
நிறைந்தபெருங் காடாகப்
பெருவி லங்கு
நேரோடி வாழ்ந்திருக்கப்
பருக்கைக் கல்லின்
நெடுங்குன்றில் பிலஞ்சேரப்
பாம்புக் கூட்டம்
போராடும் பாழ்நிலத்தை
அந்த நாளில்
புதுக்கியவர் யார்அழகு
நகருண் டாக்கி

            சிற்றூரும்          வரப்பெடுத்த
                வயலும்          ஆறும்
                தேக்கியநல்          வாய்க்காலும்
                வகைப்ப          டுத்தி
            நெற்சேர         உழுதுழுது
                பயன்வி          ளைக்கும்
                நிறையுழைப்புத்      தோள்களெல்லாம்
                எவரின்          தோள்கள்
            கற்பிளந்து          மலைபிளந்து
                கனிகள்          வெட்டிக்
                கருவியெலாஞ்     செய்துதந்த
                கைதான்          யார்கை
            பொற்றுகளை       கடல்முத்தை
                மணிக்கு         லத்தைப்
                போயெடுக்க       அடக்கியமூச்
                செவரின்         மூச்சு

            அக்கால          உலகிருட்டைத்
                தலைகீ           ழாக்கி
                அழகியதாய்           வசதியதாய்ச் 
                செய்து          தந்தார்
            இக்கால          நால்வருணம்
                அன்றி           ருந்தால்
                இருட்டுக்கு         முன்னேற்றம்
                ஆவ              தன்றிப்
            புக்கபயன்           உண்டாமோ
                பொழுது          தோறும்
                புனலுக்கும்         அனலுக்கும்
                சேற்றி          னுக்கும்
            கக்கும்விடப்            பாம்பினுக்கும்
                பிலத்தி         னுக்கும்
                கடும்பசிக்கும்      இடையறாத
                நோய்க           ளுக்கும்

            பலியாகிக்           கால்கைகள்
                உடல்கள்         சிந்தும்
                பச்சைரத்தம்         பரிமாறி
                இந்த                நாட்டைச்
            சலியாத          வருவாயும்
                உடைய            தாகத்
                தந்ததெவர்           அவரெல்லாம்
                இந்த                நேரம்
            எலியாக          முயலாக
                இருக்கின்           றார்கள்
                ஏமாந்த          காலத்தில்
                ஏற்றங்          கொண்டோன்
            புலிவேஷம்           போடுகிறான்
                பொதுமக்         கட்குப்
                புல்லளவு            மதிப்பேனுந்
                தருகின்         றானா ?  

கலி விருத்தம்

இளையோன் : கஞ்சிக்கு வழிதேடிக்
கதிரவன் வெயில்காய்ந்து
பஞ்செடுக்கும் கொட்டைதான்
படும்பாடு யாம்பட்டும்
நெஞ்சத்தின் நினைவைநீள்
வேந்தன்தன் எதிருரைக்கக்
கொஞ்சமேனும் எமக்குரிமை
இலையிந்த நாள்மட்டும்

எண்சீர் விருத்தம்

உதாரன் : அரசனுக்கும் எமக்குமொரு
வழக்குண் டாக
அவ்வழக்கைப் பொதுமக்கள்
தீர்ப்ப தேதான்
சரியென்றேன் ஒப்பவில்லை
இவளும் நானும்
சாவதென்றே தீர்ப்பளித்தான்
சாக வந்தோம்
ஒருமனிதன் தேவைக்கே
இந்தத் தேசம்
உண்டென்றால் அத்தேசம்
ஒழிதல் நன்றாம்
இருவர்இதோ சாகின்றோம்
நாளை நீங்கள்
இருப்பதுமெய் யென்றெண்ணி
இருக்கின் றீர்கள்

மோனை: காதலில்லா உயிரொன்று
மண்ணி லில்லை
கற்பனைதான் மறுதியானுக்
கென்று யில்லை
பேதத்துடன் மனிதர்தாம்
பிறப்ப தில்லை

பெரும்புலவோர் நெஞ்சத்தில்
வஞ்ச மில்லை
வாதத்தால் இயற்கைநிலை
யறிவா ரில்லை
வஞ்சனையாற் பொருளீட்டி
மகிழ்வா ரில்லை
பேதத்தால் தமிழழிந்தால்
அழிவ தல்லால்
பெருமைமிகு தமிழர்க்கு
மீட்சி யில்லை

உதாரன்: தன்மகளுக்கு எனையழைத்துக்
கவிதை சொல்லித்
தரச்சொன்னான் அவ்வாறு
தருங்கா லிந்தப்
பொன்மகளும் எனைக்காதல்
எந்தி ரத்தால்
புலன்மாற்றிப் போட்டுவிட்டாள்
ஒப்பி விட்டேன்
என்னுயிருக் கழவில்லை
அந்தோ என்றன்
எழுதாத சித்திரம்போ
லிருக்கு மிந்த
மன்னுடல்வெட் டப்படுமோர்
மாப ழிக்கே
மனநடுக்கங் கொள்ளுகின்றேன்
இன்னுங் கேளீர்

            தமிழறிந்ததால்       தார்வேந்தன்
                எனைய            ழைத்தான்
                தமிழ்க்கவிஎன்       றெனையவளுங்
                காத             லித்தாள்
            அமுதமென்று      சொல்லுமிந்தத்
                தமிழ்என்            னாவி
                அழிவதற்குக்     காரணமா
                யிருந்த         தென்று
            சமுதாயம்            நினைத்திடுமா
                ஐய                கோஎன்
                தாய்மொழிக்குப்      பழிவந்தால்
                சகிப்ப          துண்டோ
            உமையொன்று       வேண்டுகின்றேன்
                மாசில்          லாத
                உயர்தமிழை       உயிரென்று
                போற்று          மின்கள் 

மோனை: உமிகுத்தி வீண்பொழுது
போக்கு வாரும்
உயர்தமிழை அழியவிட்டு
வாழா ரென்றும்
தமியளாகத் தாள்நீக்கத்
தயங்கு வாளும்
தமிழுக்குக் கேடென்றால்
சீறிப் பாய்வாள்
நமையாளும் மன்னவனுக்
கிந்த உண்மை
நனிசிறிதுந் தோன்றாமை
விந்தை யன்றோ
இமைகாக்கும் விழியைவிட
எமக்கு மிந்நாள்
எழில்வாய்ந்த தமிழ்காத்தல்
முதன்மை யாகும்

            பெண்ணாசை        பெரிதென்பார்
                அறியார்         பெண்தான
                பேரிளமைப்           பெண்ணானால்
                திரும்பிப்          பாரார்
            மண்ணாசை         பெரிதென்பார்
                அறியார்         மண்தான்
                மாற்றாருக்          காட்பட்டு
                மதிப்பி         ழக்கும்
            பொன்னாசை        பெரிதென்பார்
                அறியார்         பொன்தான்
                பொதியாகக்           குவியுமெனில்
                மதிப்பே         யில்லை
            என்னாசை         மொழியான
                தமிழ                மிழ்தே
                எந்நாளும்           எவ்வளவுங்
                களிப்பே         நல்கும்

(தொடரும்)

புலவர் சா.பன்னீர்செல்வம், புதிய புரட்சிக்கவி