இளந்தமிழனுக்கு நாமக்கல் கவிஞர் வேண்டுகோள் : ilanthamizhan-naamakkal-kavignar

3,4 / 6

இளந்தமிழனுக்கு

அன்பி னோடும் அறிவு சேர்ந்த
ஆண்மை வேண்டும் நாட்டிலே;
அச்ச மற்ற தூய வாழ்வின்
ஆற்றல் வேண்டும் வீட்டிலே.
இன்ப மான வார்த்தை பேசி
ஏழை மக்கள் யாவரும்
எம்மு டன்பிறந்த பேர்கள்
என்ற எண்ணம் வேண்டும்.
துன்ப மான கோடி கோடி
சூழ்ந்து விட்ட போதிலும்
சோறு தின்ன மானம் விற்கும்
துச்ச வாழ்வு தொட்டிடோம்!
என்ப தான நீதி யாவும்
இந்த நாட்டில் எங்கணும்
இளந்த மிழா! என்றும் நின்றே
ஏடெ டுத்துப் பாடுவாய்!       3

 

பணமி ருந்தார் என்ப தற்காய்ப்
பணிந்தி டாத மேன்மையும்
பயமு றுத்தல் என்ப தற்கே
பயந்தி டாத பான்மையும்
குணமி ருந்தார் யாவ ரேனும்
போற்று கின்ற கொள்கையும்
குற்ற முள்ளார் யாரென் றாலும்
இடித்துக் கூறும் தீரமும்
இனமி ருந்தார் ஏழை யென்று
கைவி டாத ஏற்றமும்
இழிகு லத்தார் என்று சொல்லி
இகழ்ந்தி டாமல் எவரையும்
மணமி குந்தே இனிமை மண்டும்
தமிழ்மொ ழியால் ஓதி நீ
மாநி லத்தில் எவருங் கண்டு
மகிழு மாறு சேவை செய்.       4

(தொடரும்)

நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை