eezham-genocide08jayawithtears

அமெரிக்கத் தீர்மானம் ஏமாற்றத்தையும்,

மன வருத்தத்தையும் அளிக்கிறது:

தமிழ்நாட்டு முதல்வர் செ.செயலலிதா

  “தமிழ்நாட்டுச் சட்டப்பேரவையில் ௧௬-௦௯-௨௦௧௫ (16.9.2015) அன்று ஒருமனமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்குச் செயல் வடிவம் கொடுக்க நடுவண் அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதையே தற்பொழுது ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எடுத்துரைக்கிறது.

  ஒட்டுமொத்தத் தமிழினத்தின் குறிக்கோளுக்கும், இலங்கை வடக்கு மாகாண அவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு வலுச் சேர்க்கும் வகையிலும், இலங்கை வாழ்தமிழர்களுக்கு நீதி கிடைக்கச் செய்யும் வகையிலும், இலங்கையில் உள்நாட்டுப் போர் நடைபெற்றபொழுது பன்னாட்டுச் சட்டம் மற்றும் செனீவா ஒப்பந்தத்தில் உள்ள போர் நெறிமுறைகளை முற்றிலும் மீறிப் போர்க் குற்றங்கள் மற்றும் இனப் படுகொலை நிகழ்த்தியவர்கள் அனைவர் மீதும் பன்னாட்டு உசாவல் (விசாரணை) நடத்தும் வகையிலான வலுவான தீர்மானத்தை இந்தியா ஐக்கிய நாடுகள் அவையில் மனித உரிமைக் குழு முன்பு அமெரிக்கா முதலான மற்ற நாடுகளுடன் இணைந்து கொண்டு வர வேண்டும் என்றும், இலங்கைக்குச் சார்பான நிலையை அமெரிக்கா எடுத்தால், அதனை மாற்ற அரசார்ந்த வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடுவண் அரசைக் கேட்டுக் கொள்ளும் தீர்மானம் தமிழ்நாட்டுச் சட்டப்பேரவையில் ஒரு மனமாக ௧௬-௦௯-௨௦௧௫ (16.9.2015) அன்று நிறைவேற்றப்பட்டது.

  ௧௬-௦௯-௨௦௧௫ (16.9.2015) முதல் ௨-௧௦-௨௦௧௫ (2.10.2015) வரை நடைபெறும் ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைக் குழுவின் ௩௦ (30)ஆவது கூட்டத்தில் இலங்கையில் ‘இணக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் பொறுப்புடைமை பற்றிய மனித உரிமைக் குழு’வின் ஆணையரது அறிக்கை கருதிப்பார்க்கப்பட்டு, வரைவுத் தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்பொழுது இலங்கையே போர்க் குற்றங்கள் பற்றி உசாவல் மேற்கொள்ளலாம் என்ற வகையில் தீர்மானம் நிறைவேற்றக்கூடிய சூழல் உள்ளது என்பதையும், அதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமை இந்தியப் பேரரசுக்கு உள்ளது என்பதையும் நான் தெளிவாகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தேன்.

  அப்போது ௧-௯-௨௦௧௫ (1.9.2015) அன்று இலங்கை வடக்கு மாகாண அவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் சுட்டிக் காட்டினேன். அந்தத் தீர்மானத்தில் பன்னாட்டுக் குற்றங்கள் புரிந்தவர்கள் மீது இலங்கையிலேயே உசாவல் மேற்கொள்வது என்பது நீதியைப் பகடிக்குள்ளாக்குவது போன்ற செயல் என்றும், இலங்கை மக்களைக் காத்து, அவர்களுக்குச் சேவை புரிய வேண்டிய இலங்கை நாட்டின் முதன்மைத் தூண்கள் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைச் சுட்டிக் காட்டி நீதி வழங்கத் தவறி விட்டன என்றும் தெரிவித்து, இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பன்னாட்டுக் குற்றங்கள் குறித்து உசாவல் மேற்கொள்ளப் பன்னாட்டுத் தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும் என்று பன்னாட்டுக் குமுதாயத்தை (சமுதாயத்தை) இலங்கை வடக்கு மாகாண அவை கேட்டுக் கொண்டுள்ளதைப் பற்றி எடுத்துக் கூறினேன்.

  அந்தத் தீர்மானத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில், இனப் படுகொலை நிகழ்த்தியவர்கள் மீது பன்னாட்டு உசாவல் நடத்தப்பட்டால்தான் நீதியும், நியாயமும் நிலைநிறுத்தப்படும் என்பதால்தான் தமிழ்நாட்டு மக்கள் மட்டும் இன்றி ஒட்டுமொத்தத் தமிழர்களின் உணர்வு மதிக்கப்பட வேண்டும் எனில் பன்னாட்டு விசாரணைதான் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெளிவாக எடுத்துக் கூறியிருந்தேன். ‘தமிழ்நாடு சட்டப்பேரவை’யால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொண்டு மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு நான் ௧௬-௦௯-௨௦௧௫ (16.9.2015) அன்றே ஒரு மடல் எழுதினேன்.

  அதனுடன் ‘தமிழ்நாடு சட்டப்பேரவை’த் தீர்மானத்தின் படியையும் அனுப்பியிருந்தேன். எனினும், நடுவண் அரசு இது தொடர்பாக எவ்வித நேர்முக நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது ஆறா மனப் புண்ணை ஏற்படுத்தியுள்ளது.

  அமெரிக்கா, இங்கிலாந்து, இலங்கை முதலான நாடுகளால் கொண்டு வரப்பட்டு, ௧-௧௦-௨௦௧௫ (1.10.2015) அன்று ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தத் தீர்மானம் இலங்கைத் தமிழர்களுக்கு எந்த விதத்திலும் நியாயம் வழங்குவதாக அமையாது. இது இலங்கை அரசுக்கு ஏற்பாகவும், இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகவும் அமைந்துள்ள தீர்மானம்தான். மனித உரிமை மீறல், மனிதநேயம் பற்றிய பன்னாட்டுச் சட்டங்கள் மீறல் குறித்த நம்பகத்தன்மை உடைய நீதி முறைமை, விடுதலையன நீதி – வழக்குத் தொடுப்பு நிறுவனங்களை உள்ளடக்கி இருக்க வேண்டும் என்றும், இலங்கையின் நீதிமுறைமையில் பொதுநலநாடுகள், பிற வெளிநாட்டு நீதியாளர்கள், எதிர்த்தரப்பினரின் வழக்குரைஞர்கள், ஒப்புதலளிக்கப்பட்ட வழக்குத் தொடுப்போர் மற்றும் உசாவல் செய்வோர் ஆகியோரின் பங்கேற்பு முதன்மையானது என்பதையும் இந்தத் தீர்மானம் வலியுறுத்துகிறது. எனினும், இஃது எந்த வகையிலும் பன்னாட்டு நீதி உசாவலுக்கு ஈடானது இல்லை.

  இலங்கை அரசிடம் மன மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கருதி நிறைவேற்றப்பட்டுள்ள இந்த வலுவற்ற தீர்மானம் இலங்கை வாழ் தமிழர்களுக்கு எவ்வித நன்மையையும் பயக்காது.”

-முதல்வர் செ.செயலலிதா

– செய்தியாளர் இ.பு.ஞானப்பிரகாசன்

[தகவல்கள்: நன்றி மாலைமலர், ஒன்இந்தியா – தமிழ், தினமணி]

eezhaththaay02