Thiruma01

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சனநாயக முற்போக்குக் கூட்டணியின் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளருமான திருமாவளவன் செயங்கொண்டம், தா.பழூர் ஒன்றியத்தில் மோதிரம் சின்னத்திற்கு வாக்கு  திரட்டினார்.

“தா.பழூர் ஒன்றியத்தில் சிலால், கோடங்குடி, பொற்பதிந்த நல்லூர், நாயகனைப்பிரியாள், சிங்கராயபுரம், பாண்டி அங்காடி, அழிசுக்குடி, சுத்தமல்லி, நாச்சியார்பேட்டை, ஆதிச்சனூர், நத்தவெளி, விக்கிரமங்கலம், முட்டுவாஞ்சேரி, அருள்மொழி, தா.பழூர்  முதலான ஐம்பதுக்கும் மேற்பட்ட  ஊர்களிலும்  வாக்கு கேட்டார். சிலால் என்னுமிடத்தில்  பரப்புரையைத் தொடங்கி வைத்து திருமாவளவன் பேசியதாவது:–

இந்தத் தேர்தல்  சமயவாதத்திற்கும், மக்கள்நாயகத்திற்கும் இடையே நடக்கின்ற போர் தலைவர் கலைஞர் சமயவாதத்திலிருந்து நாட்டு மக்களைக் காப்பாற்றப் போராடிக் கொண்டு இருக்கிறார். சமயவாதிகளின் கைகளில் நாடு சிக்கிக் கொள்ளக்கூடாது; ஆட்சி சிக்கிக் கொள்ளக்கூடாது; நாட்டையும், மக்களையும் காப்பாற்ற வேண்டுமானால் சமூக நீதியை காப்பாற்ற வேண்டுமானால் இட ஒதுக்கீட்டுக் கொள்கையைக் காப்பாற்ற வேண்டுமானால், இசுலாமிய, கிறித்துவ சிறுபான்மை சமூகத்தை பாதுகாக்க வேண்டுமானால் சமயவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்கிற அக்கறை தலைவர் கலைஞருக்கு மட்டுமே உண்டு.

அப்படிப்பட்ட தலைவர் கலைஞர் அடுத்த  தலைமையாளரைத் தீர்மானிக்க வேண்டும். அவர் அடுத்த  தலைமையாளரைத் தீர்மானிக்க வேண்டுமானால் அவருடைய கரத்தை வலுப்படுத்த வேண்டும். அவருடைய கரத்தை வலுப்படுத்துவதற்கு நீங்கள் மோதிரம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

தலைவர் கலைஞர் மட்டும்தான் இட ஒதுக்கீட்டின் பாதுகாவலராக விளங்குகிறார்.”

இவ்வாறு அவர் பேசினார்.