போர்க்களத்தில் நெடுஞ்சேரலாதன் :neducneralathan

உயிர் பிரியும் தறுவாயிலும் கொடை வழங்கிய

வள்ளல்  சேரவேந்தர் நெடுஞ்சேரலாதன்

  நெடுஞ்சேரலாதன் சேரநாட்டில் இருந்துகொண்டு ஆட்சி புரிந்து வருகையில் கொங்குநாட்டுக் கருவூரைத் தலைநகராகக் கொண்டு அந்துவஞ்சேரல் இரும்பொறை ஆட்சி செலுத்தி வந்தான். இவர்கள் காலத்தில் சோழநாட்டை ஆண்டு வந்த வேந்தன் வேல்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி என்றும் பெரு விறற்கிள்ளி என்றும் அழைக்கப்பட்டான்.

  நெடுஞ்சேரலாதனுக்கும் இந்தச் சோழ அரசனுக்கும் போர் மூண்டது. அந்தப் போரானது ‘போர்’1 என்னுமிடத்தில் நடைபெற்றது. சோழன் அவனைப் ‘போர்’ என்ற நகரத்திற்கு வெளியே எதிர்த்துப் போராடினான். போரில் இருதிறத்துப் படைகளும் அழிந்தன. இறுதியில் வேந்தர் இருவரும் நேரில் வேற்போரில் ஈடுபட்டனர். கிள்ளியானவன் வேற்போரில் வல்லவன் என்பது அவனது பெயரிலேயே விளங்கும். இருபெருவேந்தரும் போரில் சாய்ந்தனர்.2

  நெடுஞ்சேரலாதன் உயிர் நீங்குகின்ற நிலையில் நெடுநேரம் போர்க்களத்திலேயே கிடந்தான். அப்போது கழாத் தலையார் என்னும் புலவர் அவனைக் கண்டு பாடி அவனது கழுத்தில் இருந்த ஆரத்தைப் பரிசிலாகக் கேட்டார். அவனும் வழங்கினான்; பின்னர் மாண்டான்.

  இவனுக்குப் பின் சேரநாட்டின் தலைமைப் பொறுப்பினைச் செங்குட்டுவன் ஏற்றான் என்பதைச் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் வரலாறு உணர்த்துகிறது.

  1. அகநானூறு 326 : 10 -11
  2. புறநானூறு 62 : 7- 8, 63 : 10

தமிழ் வரலாற்று அறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி :

பண்டைத் தமிழக வரலாறு : சேரர், சோழர், பாண்டியர்

அட்டை-தமிழகவரலாறு, சேர சோழ பாண்டியர் : attai_pandaithamizhagavaralaaru_chera,chozha,paandiyar

பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் : peyar_e.bhu.gnanaprakasan