மாநிலக் கல்விக் கொள்கைக் குழுவில்

 தமிழறிஞர்களுக்கு இடந் தருக!

கல்வித்துறை என்பது மாநில அரசுகளின் வரம்பிற்குட்பட்டது. அதனைப் பொதுப் பிரிவாக மாற்றிய ஒன்றிய அரசு நாளடைவில் ஒன்றிய அரசின் அதிகார வரம்பிற்குட்பட்டதாக மாற்றி வருகிறது. இதனால் தேசிய மொழிகள், தேசிய இனங்கள் பாதிப்புறும் வண்ணம் கல்விக்கொள்கையை வகுத்துக் கொண்டு புதிய கல்விக்கொள்கை என்ற பெயரிலும் வேறு பெயர்களிலும் மாநில மக்களின் கல்விகளில் அதிகாரம் செலுத்தி அல்லல் படுத்தி வருகிறது. எனவே, இச்சூழலில் தமிழ்நாடு அரசு மாநிலக் கல்விக் கொள்கைக் குழு என ஒன்றை அமைத்திருப்பது பாராட்டிற்குரியது. இத்தகைய செயற்பாடு மாநிலத் தன்னாட்சிக்கு வலு சேர்ப்பதாகவும் அமைகின்றது.

அந்தவகையில், கடந்த 2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் “தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள், வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை இந்த அரசு அமைக்கும்” என அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக,  முதல்வர் மு.க.தாலின், தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைப்பது குறித்து ஆய்ந்து கருத்துரைக்க, மாநிலக் கல்விக் கொள்கைக் குழுவை அமைத்து தலைவர் உறுப்பினர்கள் விவரங்களை அறிவித்துள்ளார்.

 தில்லி உயர்நீதிமன்ற மேனாள் தலைமை நீதிமான் த.முருகேசன் தலைமையில் இக்குழு அமைந்துள்ளது. இக்குழுவின் வல்லுநர்கள் குறித்த எதிர்மறைக் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால், தமிழ்நாட்டின் கல்விக்கொள்கையை வகுக்கும் குழுவில் தமிழறிஞர்களுக்கு இடம்தர வேண்டுமல்லவா?

தமிழர்க்கு எல்லாம் தமிழாக இருக்கும் நாள்தான் தமிழர் முன்னேறும் நாளாகும்; முழு உரிமை பெற்ற நாளாகும் என்று தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் கூறுகிறார். அதற்குக் கல்விப்பொறுப்பு முழுவதும் மாநில அரசின் பொறுப்பில் – தமிழ்நாட்டரசின் பொறுப்பில் இருக்க வேண்டும். அதனை ஆற்றுப்படுத்துநர், தமிழ்நலம் நாடும் தமிழாய்ந்த தமிழறிஞர்களாக இருக்க வேண்டும். தமிழ்க்கல்வியையும் தமிழ்வழிக்கல்வியையும் செம்மையாகச் செயல்படுத்த வழி வகை காண்பவர்களாக இருக்க வேண்டும்.  எனவே, கல்விக்குழுவில் தமிழறிஞர்கள் இடம் பெற வேண்டும்.

பொதுவாக எந்தக்குழுவை அமைத்தாலும் அதில் தமிழாய்ந்த தமிழ்ப்பற்று மிக்க தமிழறிஞர்களுக்கு இடம் தர வேண்டும். அதுபோல் தமிழகத்தின் கல்விக்கொள்கையை வலியுறுத்தும் இக்குழுவில் தமிழறிஞர்கள் இருவரேனும் இடம் பெற வேண்டும். பள்ளிக்கல்வி வல்லுநராக ஒருவரும் உயர்கல்வி வல்லுநராக மற்றொருவரும் இருத்தல் சிறப்பாகும்.

தமிழ் படித்து விட்டுத் தமிழால் வயிறு வளர்த்துக் கொண்டு தமிழுக்கு எதிராகச் செயல்படும் பலர் தமிழறிஞர்கள் என்ற பெயரில் உலா வருகின்றனர். தமிழன்னைக்குக் கேடு விளைவிக்கும் இவர்களுக்கு விளம்பரப் புகழ் அடிப்படையில் முதன்மை கொடுக்கக் கூடாது. பேச்சுவழக்கையே பரப்பித் தமிழைச் சிதைக்கும் சிறுகதை எழுத்தாளர்களை அவர்கள் தமிழில் எழுதுகிறார்கள் என்பதற்காகவே தமிழறிஞர்களாகக் கருதுவதும் தவறு. வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் அவர்களைப் பாராட்டலாம். ஆனால் இவர்களைத் தமிழாய்ந்த தமிழ்ப்பற்று மிக்க தமிழறிஞர்கள் வரிசையில் சேர்ப்பது தவறு. தமிழறிஞர்களில்  தமிழுணர்வு மிக்க கதைப்படைப்பாளர்களும் உள்ளனர். அவர்களைக் குறை சொல்லவில்லை. சிதைவு வழக்கிற்கும் கொச்சை வழக்கிற்கும் உயிர் கொடுத்துத் தமிழை அழிப்பவர்களைத்தான் கூறுகிறோம்.  எனவேதான், தமிழ்ப்பற்று மிக்க தமிழறிஞர்கள் எனக் குறிப்பிட்டுள்ளோம்.  சிறப்பான தமிழ்வழிக் கல்விக்கும் தமிழ்ப் பாடத்திட்டத்திற்கும் பிற துறைத் தமிழ்வளர்ச்சிக்கும் இவர்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும்.

நம் நாட்டில் வாய்ப்பும் வசதியும் கிடைப்பின் உலகப்போட்டிகளில் வாகைசூடும் இளைஞர்கள் உள்ளனர். எனவே, பள்ளிநிலையிலேயே அத்தகையவர்களை அடையாளங்கண்டு ஊக்கப்படுத்தும் வகையில் கல்விக்கொள்கை இருத்தல் வேண்டும். எனவே, உடற்கல்வி வல்லுநர் ஒருவரையும் குழுவில் சேர்க்க வேண்டும்.

பார்வையற்றோர் பள்ளி, காது கேளாதோர் பள்ளி முதலிய சிறப்புப்பள்ளிகளில் தமிழ் வழிக்கு இடம் தராத வகையில் கல்வி உள்ளது. இக்கல்விக்கொள்கைக் குழு, சிறப்புப்பள்ளிகளிலும் தமிழ் வழிக்கல்விக்கும் தமிழுக்கும் முதன்மை அளிக்கப் பரிந்துரை அளிக்க வேண்டும். சிறப்புப்பள்ளி ஆசிரியர்களுக்கான பட்டங்கள், மேனிலைப் பட்டங்களும் தமிழ் வழி இருக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்போது ஒன்றியப் பட்டியலில் 100, மாநிலப்பட்டியலில் 61,  பொதுப்பட்டியலில் 52 துறைகள் உள்ளன. இவை மாற்றப்பட வேண்டும். ஒன்றியப் பட்டியலில் பாதுகாப்பு, அஞ்சல் துறை முதலிய 10 துறைகள் இருந்தால் போதும். வெளியுறவு என்பது ஒன்றியப்பட்டியலில் இருப்பதால்தான் ஈழம் முதலிய நாடுகளில் தமிழர்கள் இன்னலுறும் பொழுது, நம் கருத்தைத் தெரிவிப்பதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. எனவே, அதனைப் பொதுப்பட்டியலில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அதிகாரப் பட்டியல்கள் சீரமைக்கப்பட வேண்டும்.

இந்தியாவில் நெருக்கடி நிலை நடைமுறையில் (1975 – 1977) இருந்தபோது, கல்வித்துறை மாநிலப்பட்டியலில் இருந்து பிடுங்கப்பட்டுப் பொதுப்பட்டியலாக மாற்றப்பட்டது. இதனை மீண்டும் மாநிலப்பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதைத் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுமே தத்தம் தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிட்டிருந்தன. தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் எழிலன், தனது ‘அறம் செய்ய விரும்பு’ என்னும் தொண்டு நிறுவனம் மூலம் அரசியல் யாப்புப் பிரிவு 57 (42-ஆவது சட்டத் திருத்தம்) செல்லாது என்று அறிவித்து, மாநிலப்பட்டியலுக்குக் கல்வித்துறையை மாற்ற வேண்டும் என்று பொதுநல வழக்கும் கடந்த ஆண்டு தொடுத்துள்ளார்.

 தேசிய அளவில் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் முதல்வர் மு.க.தாலின், அனைத்து மாநில அரசுகளும் இவ்வழக்கில் இணைய நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வித்துறையை மாநிலப்பட்டியலுக்கே மாற்றச் செய்ய வேண்டும்.

மாநிலக்கல்விக் கொள்கைக் குழுவும் இது குறித்து உரிய பரிந்துரை அளிக்க வேண்டும். ஒன்றிய அரசின் பிடியில் அதிகாரத்தைக் கொடுத்து விட்டு இக்குழுவினர் என்னதான் பரிந்துரைத்தாலும் பயனில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மழலை நிலையிலிருந்தே தமிழ் அறமொழிகளைக் கற்பித்தல்

தமிழ் மரபு விளையாட்டுகளிலும் ஈடுபடச் செய்தல்

தமிழ் மரபுக் கலைகளில் பயிற்சி அளித்தல்

தமிழில் பிழையின்றி எழுதவும் பேசவும் பயிற்சி அளித்தல்

பிறமொழிக்கலப்பின்றித் தமிழில் பேசவும் எழுதவும் கற்பித்தல்

பிற மொழி பயிலுநர்க்கு அவரவர் மொழி வாயிலாகத் தமிழ், தமிழர், தமிழ்நாட்டுச் சிறப்பை அறியச் செய்தல்

உயர்நிலைகளில் பன்மொழி கற்பித்தல்

முதலியவற்றை நடைமுறைப்படுத்தும் வகையில் கல்வி அமைவதற்கான பரிந்துரைகளை அளிக்குமாறு இக்குழுவிற்கு அறிவுறுத்த வேண்டும். இல்லையேல் மாநிலக்கல்விக்கல்விக் கொள்கை அமைத்துப் பயனில்லை.

– இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை, அகரமுதல, சித்திரை 11, 2053 / 24.04.2022