(அதிகாரம் 016. பொறை உடைமை தொடர்ச்சி)

 arangarasan_thirukkural_arusolurai_attai

 01. அறத்துப் பால்

02.இல்லற இயல்

அதிகாரம்  017. அழுக்காறாமை

 

பிறரது வளநலங்களைப் பார்த்துப்  

பொறாமை கொள்ளாத அறப்பண்பு..

 

  1. ஒழுக்(கு)ஆ(று)ஆக் கொள்க, ஒருவன்,தன் நெஞ்சத்(து),

     அழுக்கா(று) இலாத இயல்பு.

 

       மனத்தாலும், பொறாமை இல்லாத,

       இயல்பை ஒழுக்கநெறியாக் கொள்க.

 

  1. விழுப்பேற்றின் அஃ(து)ஒப்ப(து) இல்லை,யார் மாட்டும்,

     அழுக்காற்றின் அன்மை பெறின்.

 

       யாரிடத்தும், பொறாமை கொள்ளாமையே,

       ஈ[டு]இல்லாத சிறப்புப் பே[று]ஆகும்.

 

  1. அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான், பிறன்ஆக்கம்,

     பேணா(து) அழுக்கறுப் பான்.

 

       வளர்ச்சியை வேண்டாதானே, மற்றவர்

       வளர்ச்சிமீது பொறாமை வளர்ப்பான்.

 

  1. அழுக்காற்றின் அல்லவை செய்யார், இழுக்(கு)ஆற்றின்,

     ஏதம் படுபாக்(கு) அறிந்து.

 

   பொறாமை தருதீமைகளை அறிந்தார்

   பொறாமையால் தீமைகள் செய்யார்.

 

  1. அழுக்கா(று) உடையார்க்(கு) அதுசாலும், ஒன்னார்,

     வழுக்கியும் கே(டு)ஈன் பது.

 

       பொறாமையார் கெடுதற்குப் பொறாமையே

       போதும்; வேறுபகையே வேண்டாம்.

 

 

 

  1. கொடுப்ப(து) அழுக்கறுப்பான் சுற்றம், உடுப்பதூஉம்,

     உண்பதூஉம் இன்றிக், கெடும்.

 

       கொடுப்பதைத் தடுப்பானின், உறவார்க்கும்,

       உணவும், உடையும் கிடைக்கா.

 

  1. அவ்வித்(து) அழுக்கா(று) உடையானைச், செய்யவள்,

     தவ்வையைக் காட்டி விடும்.

 

       சீதேவி, பொறாமை உடையானை

       மூதேவியிடம் காட்டிக் கொடுப்பாள்.

 

  1. “அழுக்கா(று)” எனஒரு பாவி, திருச்செற்றுத்,

     தீஉழி உய்த்து விடும்.

 

       “பொறாமைப் பாவி” செல்வத்தையும்

       அழிக்கும்; தீவழியிலும் செலுத்தும்.    

 

  1. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும், செவ்வியான்

     கேடும், நினைக்கப் படும்.

 

       பொறாமையான் செல்வமும், பொறாமை

       மறந்தான் வறுமையும், மறையும்.

 

  1. அழுக்கற்(று) அகன்றாரும் இல்லை;அஃ(து) இல்லார்,

     பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல்.

 

       பொறாமையால் வளர்ந்தாரும் இல்லை;

     பொறுமையால் தளர்ந்தாரும் இல்லை.

 – பேராசிரியர் வெ. அரங்கராசன்

(அதிகாரம் 018. வெஃகாமை)