(அதிகாரம் 033. கொல்லாமை தொடர்ச்சி)

arusolcurai_attai+arangarasan

01.அறத்துப் பால்

02.துறவற இயல்

அதிகாரம் 034. நிலையாமை  

வாழ்வும், செல்வமும், நிரந்தரம்

அல்லஎன ஆராய்ந்தும் உணர்தல்.

 

  1. நில்லாத வற்றை, “நிலையினஎன்(று),உணரும்

     புல்அறி(வு) ஆண்மை கடை.                        

 

       நிலைக்காத அவற்றை, ”நிலைக்கும்என

       உணரும் அறிவு, கீழ்அறிவு.

 

  1. கூத்தாட்(டு) அவைக்குழாத்(து) அற்றே, பெரும்செல்வம்

   போக்கும், அதுவிளிந்(து) அற்று.

 

       நாடகத்தைப் பார்க்க வருவார்,

       போவார்போல், செல்வமும் வரும்;போம்.

 

  1. அற்கா இயல்பிற்றுச் செல்வம்; அதுபெற்றால்,

   அற்குப ஆங்கே செயல்.

 

         நிலைஇல்லாச் செல்வம் பெற்றபோதே,

         நிலைக்கும் அறச்செயல்கள் செய்க.

 

  1. நாள்என ஒன்றுபோல் காட்டி, உயிர்ஈரும்

     வாள்அது, உணர்வார்ப் பெறின்.

 

       நிலைப்பனபோல் தோன்றும் நாள்கள்

       அவைதாம் உயிர்அறுக்கும் வாள்கள். .

 

  1. நாச்செற்று, விக்குள்மேல் வாராமுன், அறவினை

   மேற்சென்று செய்யப் படும்.

 

  சாகுநாள் வருமுன்பே, சாகாஅறச்

       செயல்களை உயிர்ப்புடன் செய்க.

 

 

  1. நெருநல் உளன்ஒருவன், இன்(று)இல்லைஎன்னும்,

   பெருமை உடைத்(து),இவ் உலகு.

 

         நேற்[று] இருந்தவன், இன்[று]இல்லை

         ஞாலத்தின் பெருமையே இதுதான்.

 

  1. ஒருபொழுதும், வாழ்வ(து) அறியார்; கருதுப,

    கோடியும் அல்ல, பிற.

 

   வாழும்நாள் அறியார்; ஆசைப்படுவதோ,

       கோடிகள் அல்ல, அதற்கும்மேல்.

 

  1. குடம்பை தனத்(து)ஒழியப், புள்பறந்(து) அற்றே,

   உடம்பொ(டு) உயிர்இடை நட்பு.

 

  கூடுவிட்டுப் பறக்கும் பறவைபோல்,

       உடல்விட்[டு] உயிரும் பறக்கும்.

 

  1. உறங்குவது போலும், சாக்கா(டு); உறங்கி

     விழிப்பது போலும், பிறப்பு.

 

  தூங்குவது போன்றது, இறப்பு;

       விழிப்பது போன்றது, பிறப்பு..

 

  1. புக்கில் அமைந்(து) இன்று கொல்லோ? உடம்பினுள்,

     துச்சில் இருந்த உயிர்க்கு.

 

        உடலில் தங்கிச்செல்லும் உயிர்க்கு,

       நிரந்தர வீடே இல்லையோ?

-பேராசிரியர் வெ. அரங்கராசன்

(அதிகாரம் 035. துறவு)