திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 050. இடன் அறிதல்
(அதிகாரம் 049. காலம் அறிதல் தொடர்ச்சி)
02. பொருள் பால்
05. அரசு இயல்
அதிகாரம் 050. இடன் அறிதல்
வலிமையை, காலத்தை, ஆய்ந்தபின்,
உரிய இடத்தைத் தேர்ந்துஎடுத்தல்.
- தொடங்கற்க எவ்வினையும், எள்ளற்க முற்றும்,
இடம்கண்ட பின்அல் லது.
எந்தச் செயலையும் இகழற்க;
இடத்தைக் கண்டபின், தொடங்குக.
- முரண்சேர்ந்த மொய்ம்பின் அவர்க்கும், அரண்சேர்ந்(து)ஆம்
ஆக்கம், பலவும் தரும்.
வலியார்க்கும், கோட்டையின் பாதுகாப்பும்
நன்மையும் நல்இடம்தான் தரும்.
- ஆற்றாரும், ஆற்றி அடுப; இடன்அறிந்து,
போற்றார்கண் போற்றிச் செயின்.
உரியதோர் இடம்தேர்ந்து செய்யின்,
மெலியாரும், வலியாரை வெல்வார்.
- எண்ணியார், எண்ணம் இழப்பர்; இடன்அறிந்து,
துன்னியார், துன்னிச் செயின்.
இடம்அறிந்து, நெருங்கிச் செயல்ஆற்றின்,
பகைவர் வெற்றியை எண்ணார்.
- நெடும்புனலுள் வெல்லும் முதலை; அடும்,புனலின்
நீங்கின், அதனைப் பிற.
தண்ணீருக்குள் முதலை வெல்லும்;
தரையினில் மற்றவை வெல்லும்.
- கடல்ஓடா கால்வல் நெடும்தேர்; கடல்ஓடும்
நாவாயும், ஓடா நிலத்து.
பெரும்தேரும் கடலில் ஓடாது;
பெரும்படகும் தரையில் ஓடாது.
- அஞ்சாமை அல்லால் துணைவேண்டா, எஞ்சாமை
எண்ணி, இடத்தால் செயின்.
இடம்ஆய்ந்து சிந்தித்துச், செய்வார்க்கு,
அஞ்சாமைஆம் துணையே போதும்.
- சிறுபடையான், செல்இடம் சேரின், உறுபடையான்,
ஊக்கம் அழிந்து கெடும்.
சிறுபடையான் பொருந்துஇடம் சேர்ந்தால்,
பெரும்படையான் ஊக்கம், கெடும்..
- சிறைநலனும், சீரும், இலன்எனினும், மாந்தர்
உறைநிலத்தோ(டு) ஒட்டல், அரிது.
காப்பும், படைச்சிறப்பும், இல்லானையும்,
வாழ்இடத்தில் வெல்ல முடியாது.
- கால்ஆழ் களரின் நரிஅடும், கண்அஞ்சா,
வேல்ஆள் முகத்த, களிறு.
சேற்றுநிலத்தில் சிக்கிய பெரிய
யானையைச் சிறுநரியும் வெல்லும்.
– பேராசிரியர் வெ. அரங்கராசன்
(அதிகாரம் 051. தெரிந்து தெளிதல்)
Leave a Reply