திருக்குறள் அறுசொல் உரை – 081. பழைமை : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 080. நட்பு ஆராய்தல் தொடர்ச்சி)
02. பொருள் பால்
11. நட்பு இயல்.
அதிகாரம் 081. பழைமை
பற்பல ஆண்டுகளாய்த் தொடரும்
பழம்நட்பின் சிறப்புஉரிமை, பெருமை.
- பழைமை எனப்படுவ(து) யா(து)?எனின், யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.
எதனாலும் கீழ்மைப்படா நட்புஉரிமை
பெற்ற நட்பே, பழைமை.
- நட்பிற்(கு) உறுப்புக் கெழுதகைமை; மற்(று)அதற்(கு)
உப்(பு)ஆதல், சான்றோர் கடன்.
உப்புபோல், அமையும் உரிமைச்
செயல்தான் நட்பிற்கு உறுப்பு.
- பழகிய நட்(பு)எவன் செய்யும்? கெழுதகைமை
செய்(து),ஆங்(கு) அமையாக் கடை.
உரிமையோடு செய்ததை ஏற்காவிட்டால்,
பழைய நட்புதான், எதற்கு?
- விழைதகையான் வேண்டி இருப்பர், கெழுதகையான்,
கேளாது நட்டார் செயின்.
உரிமையால் நண்பர் கேளாது
செய்தாலும், பழம்நண்பர் விரும்புவார்.
- பேதைமை ஒன்றோ? பெரும்கிழமை என்(று)உணர்க,
நோதக்க நட்டார் செயின்.
பழம்நண்பர் செய்த துன்பமும்,
அறியாமையால், உரிமையால் என்க.
- எல்லைக்கண் நின்றார் துறவார், தொலைஇடத்தும்,
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.
நெடுந்தொலைவில் இருந்தாலும், உச்சநிலை
நண்பர் நட்பை மறவார்.
- அழிவந்த செய்யினும் அன்(பு)அறார், அன்பின்
வழிவந்த கேண்மை யவர்.
நண்பர் அழிவே செய்தாலும்,
அன்புவழி நண்பர், அன்பர்தான்.
- கேள்இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு,
நாள்இழுக்கம் நட்டார் செயின்.
நண்பரின் தவற்றைக் கேளார்க்கு,
அந்நண்பர் தவறுநாளும் நல்நாளே.
- கெடாஅ வழிவந்த கேண்மையார், கேண்மை
விடாஅர்; விழையும் உலகு.
கெடாது தொடரும் பழம்நட்பை
விடாதாரை, உலகும் விடாது.
- விழையார் விழையப் படுப, பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்
நெடுநாள் நண்பரைப் பண்பால்
பிரியாரை, விரும்பாரும் விரும்புவார்.
பேராசிரியர் வெ. அரங்கராசன்
Leave a Reply