இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 13 

(இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  12–  தொடர்ச்சி)

அரசாள்வோன் மகன் அரசனாக அமரும் வழிமுறைக் கொள்கை பிற்காலத்தே நிலைத்துவிட்ட போதிலும் பண்டைத் தமிழகத்தில் அரசமரபு என ஒரு மரபு இருந்திலது. அரசாள்வோர் அரசர் எனப்பட்டனரே யன்றி அரசாளும் மரபிற் பிறந்தோர்க்குத்தான் அரசு உரியது எனக் கருதினாரிலர். வடநாட்டில் இராசனுக்குரியது இராச்சியம் எனக் கருதப்பட்டதேயன்றி ‘இராச்சியம்’ புரிவோன் ‘இராசன்’ என்று கொள்ளப்பட்டிலது.  அங்கு அரசாளுவதற்குரிய மரபு எனச் சத்திரியர் மரபு தோன்றியதுபோல் தமிழகத்தில் தோன்றிலது.  தமிழ்ச்சொல்லாம் ‘அரசன் ’ என்பதே வடமொழியில் ‘இராஜன்’ ஆக உருப்பெற்றது.  சிலர் கருதுவதுபோல் ‘இராஜன்’  ‘அரசன்’ ஆகவில்லை.

ஆளும் முறையால் அரசர் எனப்பட்டோர் தாமே தம் உளம் சென்ற வழி நாட்டை ஆண்டிலர்.  ஐம்பெருங்குழுவும், எண்பேராயமும் அரசர்க்குத் துணைபுரிந்தன.  புலவர்கள் அவ்வப்போது வேண்டும் அறிவுரை கூறி அறநெறி கோடாது ஆளும் முறையில் அரசரைச் செலுத்தினர்.

“ இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

 கெடுப்பார் இலானும் கெடும்”         (குறள்-448)

என்பது நாடறிந்த நல்மொழியாகும்.

அரசாளும் உயர்நிலையை எய்துவோர் அரசியல் துறைகளிலும் பிற துறைகளிலும் கற்றுத்துறைபோகிய வல்லுநராய் இருந்தனர்;  அஞ்சாமை, ஈகை, தூங்காமை, துணிவுடைமை உடையராய்க் காட்சிக்கு எளியராய், கடுஞ்சொல்லற்று விளங்கினர்; இயற்றலிலும், ஈட்டலிலும், ஈட்டியவற்றைக் காத்தலிலும், காத்தவற்றைப் பல்வகைத் திட்டங்கட்கு உரிய முறையில் வகுத்தலிலும் திறம் பெற்றிருந்தனர்.  மக்கள் முறையீடு செவிகைப்ப இருப்பினும் அதனைப் பொறுமையாகக் கேட்டு மக்கள் குறை போக்கும் மாண்புறு பண்பு பெற்றிருந்தனர். இவ்வாறு நன்முறையில் நாட்டையாண்ட அரசர் மக்கட்கு இறையென்று போற்றப்பட்டனர்.

“உலகம் மழையை நோக்கி வாழ்வது போல் நாடு அரசனின் செங்கோன்மையை நோக்கி வாழ்கின்றது” என்று தெளிந்த அரசர் செங்கோன்மை வழுவாது ஆண்டனர். அறம் நிலைத்தலும் அறவோர் அகமகிழ்வுடன் வாழ்ந்து நன்னெறி பரப்பலும் அறிவியல் நூல்கள் பெருகுவதற்கேற்ற சூழ்நிலை அமைதலும் செங்கோன்மை ஆட்சியில் சிறக்க நிகழ்ந்தன.

அரசர் நாட்டை நன்முறையில் காத்தனர்; அவரை அவருடைய நல்லாட்சி காத்தது. நாட்டு மக்கட்குத் தீங்கு செய்து தீநெறியில் சென்றோரை இரக்கமின்றி ஒறுத்து, விளைநிலத்தில் தோன்றிய களையைப் போக்குவது போல் போக்கினர். குடிபுறங்காத்து ஓம்ப மக்கள் குற்றத்தைக் கடிதல் அரசரின் ஆளும் தொழிலுக்குரியதே  என உலகம் கருதியது.

அரசாட்சி முறையை நன்கு ஆராய்ந்து ஆளவில்லையேல் நாடு கெடும் என்பதை அரசர் அறிந்திருந்தனர். நல்லாட்சி நிலவாத நாட்டில் மழை பெய்யாது என்று மக்கள் நம்பினர். கொடுங்கோன்மை நிலவும் நாட்டு வாழ்க்கையினும் கடும் புலி வாழும் காட்டு வாழக்கையே மேலெனக் கருதினர். அரசர் நாட்டை ஆளுவதற்கு வேண்டும் வரிப் பொருளை உளம் உவந்து கொடுத்தனர். ஆனால், அளவுக்குமேல் வரி வேண்டிய காலத்து, வேலொடு நின்று வழிப்பறி செய்யும் திருடராக அரசரை மதித்தனர். புலவர்கள் அறிவுரை கூறி அரசரைத் தெருட்டினர். பாண்டியன் அறிவுடை நம்பியிடம் சென்ற பிசிராந்தையார், வரி பெறும் முறைபற்றிக் கூறியுள்ள அறிவுரை எக்காலத்துக்கும் பொருந்துவதாகும். “யானை வளர்ப்போர் நிலத்தில் விளைந்த நெல்லை அறுவடை செய்து வைத்துக்கொண்டு அளவோடு யானைக்கு உணவிடின் ஒரு மா அளவு நிலத்தில் விளைந்ததும் பல நாள்களுக்குப் போதுமானதாகும். யானையைக் கட்டவிழ்த்துவிட்டுத் தானே உண்ணுமாறு விட்டுவிடின் நூறு மா அளவு நிலத்தில் விளைந்ததும் சில நாள்களுக்குக் கூடப் போதுமானது ஆகாது. யானை உண்ணுவதினும் அதன் கால்களால் அழிவது மிகுதியாக இருக்கும். அது போல அரசர், பெறும் நெறியறிந்து வேண்டிய அளவு மக்களிடம் இறை பெற்றால் செல்வம் பெருகி நாடு மிகவும் முன்னேற்றம் அடையும் நெறியில் செல்லும். அரசர் இவ் வரசியல் அறிவற்றுத் தீயோர் அறிவுரைக்குச் செவிமடுத்து மக்கள் வருந்துமாறு மிகுந்த பொருளை வரியாகப் பெற நினைந்தால், யானை புகுந்த வயல் போல நாடு அழியும்;  அரசரும் பயன் பெறார்.”

“காய்நெல் லறுத்துக் கவளங் கொளினே

 மாநிறை வில்லதும் பன்னாட் காகும்

 நூறுசெறு வாயினும் தமித்துப்புக் குணினே

 வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்

 அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே

கோடி யாத்து நாடுபெரிது நந்தும்

மெல்லியன் கிழவ னாகி வைகலும்

வரிசை யறியாக் கல்லென் சுற்றமொடு

பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்

யானை புக்க புலம்போலத்

தானும் உண்ணான் உலகமும் கெடுமே.”

(புறம்-184)

இவ் வறிவுரைக்கேற்பவே அக்கால அரசர்கள் வரிபெறும் நெறியறிந்து மக்களிடம் வரி வேண்டிப் பெற்று மக்களுக்கு வேண்டும் நல்லாட்சி புரிந்தனர்.  ஆட்சி  முறைபற்றிப் புலவர் கூறும் பொன்மொழிகளைச் செவி மடுத்து ஆளுவது அக்கால அரசரின் இயல்பாக இருந்தது.

(தொடரும்)

சங்கத்தமிழறிஞர் முனைவர் சி.இலக்குவனார்