வெருளி நோய்கள் 1321 -1325 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1316 -1320 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1321 -1325
- துருக்கிய வெருளி – Turcophobia
துருக்கியர் தொடர்பான அளவுகடந்த வெறுப்பும் தேவையற்ற பேரச்சமும் துருக்கிய வெருளி.
துருக்கியர், துருக்கிய மொழி, துருக்கியர் கலை, துருக்கியர் பண்பாடு, துருக்கிய நாடு, தொழில், விளை பொருள்கள், துருக்கிய அரசியல் முதலானவற்றைப் பேரிடர் தருவதாக எண்ணிப் பெரு வெறுப்பும் மிகு அச்சமும் கொண்டிருப்பர் இத்தகையோர்.
00
- துழாவு வெருளி-Cunniphobia
கருவாய் துழாவுதல்(cunnilingus) தொடர்பான காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் துழாவு வெருளி.
cunnus என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் பெண்குறி.
lingere என்னும் இலத்தீன் சொல்லின் பொருள்கள் துழாவுதல், நக்குதல் என்பன.
00
- துளை வெருளி – Trypophobia
துளை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் துளை வெருளி.
உடலில் தோலில், துளைகள் அல்லது புடைப்புகள் அல்லது ஒழுங்கற்ற வடிவங்கள் கொத்தாகக் காணப்படுவது குறித்த அளவுகடந்த பேரச்சம் கொள்கின்றனர்.
தாமரை விதை,செம்புற்றுப் பழம் ()முதலியவற்றில காணப்படும் துளைகள்கூட இத்தகையோருக்குப் பேரச்சம் தருகிறது. இந்நோய் கற்பனை சார்ந்தது எனக் கூறி மேலும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
trŷpa என்னும் கிரேக்கச் சொல்லிற்குத் துளை எனப் பொருள்.
00
- துறவி பேட்டிரிகன் வெருளி – Patricophobia
துறவி பேட்டிரிகன் அல்லது தூய பேட்டிரிகன் (St. Patrick) மீதான அளவுகடந்த பேரச்சம் துறவி பேட்டிரிகன் வெருளி.
துறவி பேட்டிரிகன்(பதிரீசியார்) 5ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த உரோம-பிரித்தானிய கிறித்தவ மறைப்பணியாளரும், அயர்லாந்தின் அர்மாகின் ஆயராக இருந்தவருமான திருத்தூதர். கிறித்துவத்தை அயர்லாந்தில் அறிமுகப்படுத்திய இவர் மீதான பேரச்சம் பலரிடம் உள்ளது.
அயர்லாந்து (ஐரீசு) மக்களில் பலருக்கு இவ்வெருளி உள்ளது. இவர்களில் பலருக்குப் பேய்கள்(leprechauns) தங்களைத் தாக்கும் என்ற அச்சம் உள்ளது.இவர்களிடம் பச்சை வெருளியும்(prasinophobia) உள்ளது.
00
- துறவியர் வெருளி – Hierophobia / Hermitphobia
தூய பொருள், தூய் ஆள் முதலான தூய நிலைகுறித்தும் சமயப் பொருள் குறித்தும் அளவுகடந்த பேரச்சம் துறவியர் வெருளி.
Hierophobia/hermitphobia, hagiophobia இரண்டிலும் தூய பொருள்களும் தூய ஆட்களும் பேரச்சத்திற்குரிய நிலையில் இருந்தாலும் தமிழில் தனித்தனியே துறவியர் வெருளி, தூய நிலை வெருளி என நாம் வகைப்படுத்திக் கொள்ளலாம்.
hiero என்னும் கிரேக்கச்சொல்லிற்குத் தூய அல்லது புனித என்று பொருள்.
புனிதம் என்பது தமிழ்ச்சொல்லே! பிறந்ததும் உள்ள மகவு நிலையைப் புனிறு என்கின்றனர்.
புதல்வற் பயந்த புனிறுசேர் பொழுதின் (தொல்.பொ.146)
புனிற்றிளங்குழவி (மணிமேகலை 29.5.)
புன்றலை நாய்ப்புனிற்றும் (பெரியபுராணம், திருநாளைப் போவார் 8)
முதலானவற்றின் மூலம் சொல்லப்படும் நிலையும் தூய்மைதான்.
இளமதியைப் புனிற்று மதி என்கின்றனர்.
இவற்றைப்போல் களங்கம்படியாத புதிய தூய நிலையைக் குறிக்கப் புனிறு என்னும் சொல்லில் இருந்து உருவானதுதான் புனிதம் என்னும் சொல்.
நாம் தவறு ஏதும் செய்தால் தூய உள்ளம் கொண்ட துறவியர் கண்டிப்புரை அல்லது தண்டிப்புரை கூறுவரோ என்று முன்பு அஞ்சினர். ஆனால், காஞ்சி சங்கரமடம் முதலான மடத் தலைவர்களின் கூடா ஒழுக்கம், வல்லுறவு, கொலை முதலான செய்திகளை அறிந்து போலித்துறவியரிடம் நாம் மாட்டிக் கொள்வோமோ, நம் குடும்பத்துப் பெண்கள் சிக்கிச் சீரழிவரோ என அஞ்சும் நிலை வந்து விட்டது.
தவம்மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த்து அற்று (திருவள்ளுவர், திருக்குறள் 274)
என்பதற்கு இலக்கணமாகத்தான் இன்றைய போலித்துறவியர் மிகுதியாக உள்ளனர். “கதவைத் திற! காற்று வரட்டும்!” என்று சொல்லி விட்டு அவர்களின் கீழ்மையை உள்ளே வர வைத்து விடுகிறார்கள்.
hermit என்றால் துறவி எனப் பொருள்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5







Leave a Reply