இலங்கை நாடாளுமன்ற தேர்தலில்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு

பன்னாட்டுத் தளத்தில் தமிழர் அரசியலை அரசதந்திரத்துடன் மேற்கொள்வதற்கு மக்கள் ஆற்றல்களை வலுவாக அணிதிரட்டக் கூடிய, தமிழ்த் தேசியத்தைத் தமது சொல்லாலும் செயலாலும் உண்மையாக வலுப்படுத்துக்கூடியர்களை மக்கள் தேர்வு செய்யவேண்டும் !

இணக்கஅரசியல் என்ற பெயரில் தமிழர்களின் நலன்களைப் பலி கொடுக்காமல், பன்னாட்டு அரசுகளின் நிலைப்பாடுகளிடையே அரசுகளின் நலன்களையும் தமிழர்களின் நலன்களையும்  இணைக்கும் அரசதந்திரம் கொண்டு, தமிழ்த் தேசியத்தைத் தமது சொல்லாலும் செயலாலும் உண்மையாக வலுப்படுத்துக்கூடியர்களை இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்மக்கள் தமது சார்பாளர்களாகத் தேர்வு செய்யவேண்டும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழர் தேசியச் சிக்கலுக்குத் தீர்வினைக் காண முடியாது என்ற போதும், அத் தளத்தினைத் தமிழர் தேசத்தின் விடுதலை வேட்கையினை வெளிப்படுத்தும் ஒரு மேடையாக, களமாக, கருவியாகக் கையாளக் கூடிய வாய்ப்பைத் தமிழர் தேசம் முடிந்த அளவு பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இத்தேர்தலில் மக்கள் தமது சார்பாளர்களைத் தேர்தவு செய்யும் முன் கீழ் வரும் செய்திகளில் அவர்களுக்கு உள்ள உறுதிப்பாட்டை கவனத்தில் கொள்ளுமாறு கோரியுள்ளது.

1 – ஈழத்தமிழர்களின் தேசிய இனச்சிக்கலுக்கான தீர்வு தமிழர் தேசம் என்ற அறிந்தேற்புடன் –  தாயகத்திலும் புலம்பெயர்ந்தும் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் நடத்தப்படும் ஒரு பொதுவாக்கெடுப்பு மூலமே காணப் படவேண்டும். இவ் விடயம் கசேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணி, முன்னாள் நீதியரசர், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேசுவரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ஆகிய கட்சிகளது தேர்தல் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருப்பது நம்பிக்கையையும், உற்சாகத்தையும் தருவதாக உள்ளது.

2 – இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் புரிந்த இலங்கை அரசும் அதன் அரசியல், படைத்துறைத் தலைவர்களும் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்.

3 – நடந்தேறிய பன்னாட்டுக் குற்றங்கள் முறைப்படுத்தப்பட்ட குற்றங்கள்(‘Systemic Crime‘) என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தமிழர்களுக்கு எதிராகப் புரியப்பட்ட குற்றங்கள் எனும்போது அவை தனிப்பட்டவர்களாலோ, ஒரு குறிப்பிட்ட படைப் பிரிவினாலோ புரியப்பட்டவை அல்ல. மாறாக இவை இலங்கை என்ற ‘அரசு’ செய்த குற்றங்களாகவே உள்ளன. எனவே இலங்கை அரசைப் பன்னாட்டு நீதிமன்றத்தின் முன்னால் இனஅழிப்புக்கு எதிரான பன்னாட்டுச் சட்டத்தின் கீழ்க் கொண்டு செல்லத் தமிழர் சார்பாளர்கள் பாடுபடவேண்டும்.

4 – பன்னாட்டுத் தளத்தில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கான ஆதரவை வலுப்படுத்துவதற்கான செயற்பாடுகளில் உறுதியாக ஈடுபடவேண்டும்.

5 – தாயகத்தில் தமிழர் தேசக் கட்டமைப்பை உறுதியாக மேற்கொள்ளக் கூடியவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

பன்னாட்டுக் குமுகத்தை நோக்கி எமது அரசியல் பெருவிருப்புகளை வெளிக்காட்டுவதற்கான ஒரு கருவியாக நாடாளுமன்றத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற தகுதியையும் தமிழர் தேசம் கையாள வேண்டும் எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.