தமிழ்மக்களின் தமிழீழப் போராட்டத்துக்குக் குந்தகம் விளைவிக்கின்றது : தலைமையர்

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தடைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடுத்திருந்த மேன்முறையீட்டு விசாரணை !

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பென்று நியாயமற்ற விதத்தில் பிரித்தானிய உள்துறை அமைச்சு முத்திரையிடுவதானது, தற்சார்பு உரிமையின் அடிப்படையில் விடுதலை தமிழீழ அரசுக்கான ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பினை வெளிப்படுத்துவதற்குக் குந்தகம் விளைக்கின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்து தடைசெய்யப்பட்டிருப்பதற்கு எதிராக தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை நீக்கும்படி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடுத்திருந்த மேன்முறையீட்டு விசாரணை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் நியாயமற்ற விதத்திலான பயங்கரவாத முத்திரையினைச் சிறிலங்கா அரசு தனது தமிழினஅழிப்பைப், பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வைக்குள் மறைத்துக் கொள்ளும் உபாயமாகக் கைக்கொள்கின்றது எனவும் தலைமையர் வி.உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்து தடைசெய்யப்பட்டிருப்பதற்கு எதிராக இந்த சட்டநடவடிக்கையானது தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பென்று நியாயமற்ற விதத்தில் முத்திரை குத்துவதற்கு எதிரான முதன்மையான அறைகூவல் ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஓர் அமைப்பு நிகழ்நடப்பில் (பிரித்தானிய பயங்கரவாதச் சட்டம், 2000 தந்துள்ள வரைவிலக்கணப்படி) ”பயங்கரவாதத்தில்’ தொடர்புடையது’ என்று பிரித்தானிய உள்துறை ‘நியாயமாக நம்பினால்’ மட்டுமே அந்த அமைப்பைத் தடைசெய்ய முடியும். ஆனால் தடைக்கான சட்டச் சோதனை தொடர்ந்து நிறைவு செய்யப்படுவதை உறுதி செய்ய தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலை அரசினர் மீளாய்வு செய்வதற்கு எவ்விதப் பொறிமுறையும் இல்லை. அஃதாவது தடைநீக்கத்துக்காக உள்துறைச் செயலருக்குத் தரப்படும் விண்ணப்பம் வெற்றிபெறா விட்டால் தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற அமைப்புகள் காலவரையின்றி தடைப்பட்டியலில் இருந்து வரும் என்று பொருளாகும்.

” தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பென்று நியாயமற்ற விதத்தில் பிரித்தானிய உள்துறை அமைச்சு முத்திரையிடுவதானது, தன்வரையறை உரிமையின் அடிப்படையில் தமிழீழ அரசு விடுதலைக்கான ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பினை வெளிப்படுத்துவதற்குக் குந்தகம் விளைக்கின்றது “

-தலைமையர் வி.உருத்திரகுமாரன்

தொடர்பான மேல் விவரங்கள் வருமாறு:

பிரித்தானியாவின் உள்துறைச் செயலர் சயித்து சாவித்து நா.உ.க்கு, 2018 ஆம் ஆண்டு திசம்பரில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எழுதிய விண்ணப்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடைநீக்கம் செய்யக் கோரியிருந்தது.

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பயங்கரவாதத்தில் தொடர்பில்லை என்ற அடிப்படையிலும், அதன் மீதான தடை நீடிப்பது (நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உட்பட) தமிழ்மக்களின் பேச்சுரிமைக்கும், ஒன்றுகூடும் உரிமைக்கும் இடையூறாக உள்ளது என்பதோடு, தமிழர் தன்வரையறை உரிமையை விடுதலை அரசின் வடிவத்தில் பயன்படுத்துவதற்குத்கு தடையாக உள்ளது என்ற அடிப்படையிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் தடைநீக்கம் கோரப்பட்டிருந்தது.

2018 சூன் மாதம் இலங்கை ஒட்டுசுட்டானில் மூன்று தனியாட்கள் ஆயுதங்களையும் விடுதலைப்புலிகளது கொடிகளையும் தமது வாகனங்களில் எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் ஒரே நிகழ்வுபற்றிய இலங்கையின் பத்திரிகைச் செய்திகளை ஆதாரமாகப் பிரித்தானிய உள்துறைச் செயலருக்கான சட்டத்தரணிகள் வாதுரைத்திருந்தன். இதன் பொருள் ‘தமிழீழ விடுதலைப் புலிகளைச் சார்ந்த ஆட்களும் குழுக்களும்’ ‘பயங்கரவாதத்தில் தொடர்புடையவர்களாக’ இருக்கக் கூடும் என்பது இந்தப் பகுப்பாய்வுக் குழுவின் கருத்தாகும்.

இதனை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மறுதலித்திருந்ததோடு, குறித்த பத்திரிகைச் செய்திகள் உண்மையானதாக என்பதற்குப் போதியளவு சான்றுகள், ஆதாரங்கள் பிரித்தானிய உள்துறை அமைச்சு வழஙகவில்லை என்றும், மேலும் இந்த நிகழ்வினை விடுதலைப்புலிகளுடன் தொடர்பு படுத்த முடியாது என்றும் வாதிட்டிருந்தது.

இதனை 2019 மார்ச்சில் பிரித்தானிய உள்துறைச் செயலர் மறுத்த நிலையிலேயே அதற்கு எதிராகவே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இப்போது மேல்முறையீடு செய்திருந்தது.

நடந்த விசாரணையில் பிரித்தானிய உள்துறைச் செயலருக்கான சட்டத்தரணிகள் வாதுரைத்த போது ‘தமிழீழ விடுதலைப் புலிகள் இப்போது பயங்கரவாதத்தில் தொடர்புடையவர்கள் என்று பிரித்தானியா அரசாங்கம் ‘நம்புவதற்கு நியாயமான காரணங்கள்’ இருப்பதாகக் கூறினார்கள்.

குறித்த ஒட்டுசுட்டான் நிகழ்வு இலங்கை அரசாங்கத்தின் திட்டமிட்ட ஒரு சதியாக நாடகமாக இருக்கலாம் அதே பத்திரிகையில் இருந்த செய்தியினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியிருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்குப் ‘பயங்கரவாதத்தில் தொடர்புண்டு’ என்று முடிவுசெய்திருந்தாலும், புலிகளைத் தொடர்ந்து தடை செய்வது குறித்த தற்துணிவு அதிகாரத்தைப் பிரித்தானிய உள்துறைச் செயலர் சட்டமுறைப்படிப் பயன்படுத்தவில்லை எனவும் வாதிப்பட்டப்பட்டது. ஏன்எனில் விடுதலைப் புலிகள் மீது தொடரும் தடையினால் தமிழர்கள் விடுதலை அரசின் வடிவில் தனியரசுக்கு ஆதரவு திரட்டவும் தெரிவிக்கவும் பிரித்தானியாவில் தமிழர்களுக்குள்ள உரிமைகள் மீது தாக்கம் கொளவதை அவர் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தவறி விட்டார் என்பதும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வாதுரையாக அமைந்திருந்தது.

கடந்த சூலை 31 இல் இடம்பெற்றிருந்த கமுக்கச் சான்றுரைகளின் அடிப்படையில் கமுக்க விசாணை இடம்பெற்றிருந்தது. இந்த ஆணையத்தின் விசாரணை என்பது பிரித்தானிய நீதித்துறையினால் மறைவான வழக்கு நடவடிக்கையில் கமுக்கச் சான்றாளரை ஆணையம் விசாரித்தது ஆகும்.

இந்த விசாரணையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமோ, அவர்களது சட்டத்தரணிகளோ கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. ஆயினும் பிரித்தானிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சட்டவாளர்கள் பட்டியலில் இருந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் தேர்ந்தெக்கபட்ட சட்டவாளர் அங்கசு மெக்குள்ளோக்கு அ.வ.( Angus McCulloch Q.C) பங்கெடுத்திருந்தார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்ககத்தின் இந்த சட்ட நடவடிக்கையில் இங்கிலாந்து பேரரசியாரின் அ.வ.(QC) மாண்பைப்பெற்ற மாயா இலெசுட்டர் அ.வ.(Maya Lester QC),  பிரிக்கு வழக்காளர் மன்றத்தின் மால்கம்  (Malcolm Birdling of Brick Court Chambers), இயாமி பாட்டர்(Jamie Potter),  கரோலின் இராபின்சன் Caroline Robinson of Bindmans LLP.) முதலான பல முதன்மைச் சட்டவாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.