திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கம் நடத்திய

கல்வி  இரவு 2018

  திருகோணமலை மாவட்டத்திலிருந்து பல்கலைக் கழக இசைவு  பெற்றுப்  பண வசதியின்மையால்  படிப்பைத் தொடரமுடியாத நிலையில் மாணவர் பலர் உள்ளனர். இவர்கள் கல்வியைத் தொடர  நிதி சேர்க்கும் நோக்கோடு திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கம் நடத்திய கல்வி  இரவு 2018 என்னும் பெயரிலான நிதிசேர் விருந்து  ஆவணி 08, 2049 – 2018.08.24ஆம் நாள் மாலை 6.3௦மணி முதல் இரவு 9.௦௦ மணிவரை  நடைபெற்றது. திருகோணமலை நகருக்கு  அண்மையில் அமைந்துள்ள இலட்சுமி நாராயணன் கோவில்  விருந்து மண்டபத்தில்  இந்நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரம் உரூபா நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டு ஐந்நூற்றுவருக்கும் மேற்பட்டோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

  புனித சூசையப்பர் கல்லூரி முதல்வர் வண. அல்பிரட் அடிகளார், கிழக்குப் பல்கலைக் கழகத் திருகோணமலை வளாக முதல்வர் முனைவர் வ. கனகசிங்கம், குச்சவெளி பகுதிச் செயலாளர் திரு பொ தனேசுவரன், வெருகல் பகுதிச் செயலாளர் கு.குணநாதன், திருகோணமலை நகரசபைத் தலைவர் திரு நா. இராசநாயகம், பட்டினமும் சூழலும் பகுதி அவைத் தலைவர் மருத்துவர் எ. ஞானகுணாளன், வெருகல்  பகுதி அவைத் தலைவர் திரு க சுந்தரலிங்கம் ஆகியோர் மங்கல விளக்கேற்றினர்.   இசை ஆசிரியர் திருமதி கனகேசுவரி தமிழ் மறை ஓத, இசை ஆசிரியர் திருமதி சித்திரா தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்க, அவையோர்  அமைதி வணக்கம் செலுத்த நிகழ்ச்சிகள் தொடங்கின.

  முதலாவது நிகழ்ச்சியாக உவர்மலை விவேகானந்தாக் கல்லூரி மாணவியரின் வரவேற்பு நடனம் இடம் பெற்றது. நீராரும் கடலுடுத்த நிலமடைந்தை என்னும் மனோன்மணியம் சுந்தரனாரின் பாடலுக்கு  அவர்கள் காட்டிய மெய்ப்பாடுகள் அனைவரையும் வியக்கவைத்தது.

 அதனைத் தொடர்ந்து, செல்வநாயகபுரம் இந்து மகா வித்தியாலய மாணவர்கள் தமிழ்ப் பண்பாட்டுப் பெட்டகமான சிலப்பதிகாரக் கதையை  வில்லிசை மூலம் அவையோரின் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தினார்கள்.

 இதைத் தொடர்ந்து திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் திரு சண்முகம் குகதாசன் தலைமை உரை ஆற்றினார்.அவர் தனது உரையில், பண வசதியின்மையால்  படிப்பைத் தொடரமுடியாத நிலையில் உள்ள முப்பது  மாணவருக்கு இப்பொழுது திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கம் நிதியுதவி வழங்கி வருகின்றமைபற்றியும்   இன்னும் மாணவர் பலர் உதவி கேட்டுக்  காத்திருக்கின்றமைபற்றியும் எடுத்துரைத்தார்.

  மேலும் அவர், திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கமானது, பல்கலைக் கழக  மாணவர் ஒன்றியத்தோடு இணைந்து திருகோணமலை மாவட்டத்தின் பின்தங்கிய   பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் 9,10, 11,12,13 ஆம் வகுப்புகளில் கற்கும்   மாணவருக்குக்   கணிதம், அறிவியல், ஆங்கிலம்    ஆகிய பாடங்களை மாலை வேளைகளிலும் சனி, ஞாயிற்றுகிழமைகளிலும்  கற்பிக்கும் திட்டதை நடத்தி வருகின்றமைபற்றிக் கூறினார்.

  திருகோணமலை மாவட்டத்தின் வடக்கு எல்லையில் அமைந்துள்ள தென்னன் மரவடி ஊர்  1984  ஆம் ஆண்டில் முழுமையாக அழிக்கப்பட்டமைபற்றியும், இப்பொழுது இவ்வூரில்  87 குடும்பங்கள் மீளக் குடி யமர்ந்துள்ளமைபற்றியும்,  இவர்களுக்குத் தொழில்வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும் நோக்கோடு இருபத்து நான்கு  பேராயிரம்(மில்லியன்) உரூபா செலவில் ஒரு பண்ணையை செட்டம்பர் முதலாம் நாள் தொடங்கவுள்ளமைபற்றியும்  இதன் மூலம் தென்னன் மரவடி மக்களுக்கு வருவாய் கிடைப்பதோடு தென்னன் மரவடியின் இருப்பும்  உறுதிப் படுத்தப்படும் என்றும் கூறினார்.

  திருகோணமலை மாவட்டத்தில்  உள்ள பெண்கள் தலைமை தாங்கும்  குடும்பங்களுக்கு   வருவாய் தரும் தொழில் முயற்சிகளை உருவாக்கிக்கொடுக்கும் திட்டத்தின்  முதற் கட்டமாகச் சாம்பல்தீவு, தம்பலகமம், வெருகல் ஆகிய மூன்று இடங்களில் சத்துமா உற்பத்தித் திட்டத்தை தொடக்கி உள்ளதாகவும் கூறினார்.

  திருகோணமலை மாவட்டப் பாடசாலை மாணவரது  தமிழ்மொழி ஆற்றலையும் மனனத் திறனையும் உயர் எண்ண வளத்தையும்  மேம்படுத்தும் நோக்கோடு  கிழக்கு மாகாணக் கல்வித் திணைக் களத்தோடு இணைந்து 2018 ஐப்பசித் திங்களில் பாடசாலை மாணவரிடையே   திருக்குறட் போட்டி ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் திருக்குறள் போட்டிக்கான பணிகள்  நடைபெற்றுவருவதாகவும்  இறுதித் தேர்வில்  ஒவ்வொரு பிரிவிலும்  முதலாம்  இடத்தைப் பெறும் மாணவர்க்கு உரூபா  25,000.00 பணப்பரிசிலும் இரண்டாமிடத்தினைப் பெறும் மாணவர்க்கு உரூபா 15,000.00 பணப்பரிசிலும் மூன்றாமிடத்தினைப் பெறும் மாணவர்க்கு உரூபா 10,000.00 பணப்பரிசிலும் மாகாணக் கல்வித் திணைக்களத்தின் சான்றிதழும் வழங்கப்படும் என்றும்  கூறினார்.

  அடுத்த நிகழ்ச்சியாக   அ/மி சண்முக மகளிர் கல்லூரி மாணவர் வழங்கிய போதைப் பொருளால் விளையும் தீமையை படம்பிடித்துக் காட்டும் நாடகம் இடம்பெற்றது.

  இதையடுத்து,  கிழக்குப் பல்கலைக் கழகத் திருகோணமலை வளாக முதல்வர் முனைவர்  வ.   கனகசிங்கம்  சிறப்புரை ஆற்றினார்.  அவர் தனது உரையில்  திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கம் ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டியதோடு திருகோணமலையின் வளங்கள்,  அவற்றை எவ்வாறு பயன்படுத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம் என்பதுபற்றியும் விரிவாக விளக்கினார்.

  இறுதி நிகழ்ச்சியாக அ/மி சண்முக மகளிர் கல்லூரி மாணவர் வழங்கிய உழைக்கும் மக்களது உள்ளத்து உணர்வுகளை எடுத்துரைக்கும் நாட்டார் பாடல்கள் இடம்  பெற்றன .

  இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது .

  இந்த விழாவுக்கும் உணவுக்குமான  அனைத்துச்  செலவுகளையும் கனடாத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்பேற்றிருந்தமை பாராட்டத்தக்கது.

  இந்தவிழாவின் மூலம் ஐந்து இலட்சம் உரூபா திரட்டத் திட்டம் இட்டிருந்ததாகவும்.இந்த இலக்கைத்  தாண்டி ஏழு இலட்சம் உரூபா கிடைத்ததாகவும் அமைப்பாளர் கூறினர்

  இந்த விழா நிகழ்ச்சிகளைப் பல்கலைக்  கழக மாணவியர் தொகுத்து வழங்கியதோடு  வரவேற்புரையையும் நன்றி உரையையும் அவர்களே மிகத்திறம்பட ஆற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

(படங்களை அழுத்திப்பார்த்தால் பெரிதாகக் காணலாம்.)