(சட்டச்சொற்கள் விளக்கம் 81-85 தொடர்ச்சி)

சட்டச்சொற்கள் விளக்கம் 86-90

86. Abetment of assaultதாக்குதலுக்கான / தாக்க முனைதலுக்கான உடந்தை
 
திடீரென, கடுமையான ஆத்திர மூட்டலினாலின்றித்,   தாக்குதல் நடத்துதல் அல்லது குற்ற வன்முறையைப் பயன்படுத்தல் இ.த.ச.பிரிவு 134 இன் கீழ்க் குற்றமாகும்.  

தரைப்படையில் அல்லது கப்பற்படையில் அல்லது வான்படையில் உள்ள அதிகாரியோ வீரரோ மீகாமரோ(கப்பலோட்டி வீரர்) வான்படைஞரோ அலுவற்பொறுப்பை நிறைவேற்றும் எந்த ஓர் உயர் அதிகாரியைத் தாக்கினாலும் அஃது ஏழாண்டு வரையிலான சிறைத்தண்டனைக்கும் தண்டத்தொகை விதிப்பிற்கும் உரியது.

  தாவு/தாக்கு  பொருள் கொண்ட இலத்தீன் சொல்லான assiliō  இருந்து assault உருவானது. மக்கள் பேச்சு வழக்கில் assault என்றால் அலட்சியம் என்று பொருள் கொண்டு பயன்படுத்துகின்றனர்.
87. Abetment of desertion of soldier, sailor or airman.தரைப்படை, கப்பற்படை, வான்படை விரர்கள் வெளியேறத் தூண்டுதல்  

முப்படையைச் சேர்ந்தவர்களைத் தம் பணிப்பொறுப்புகளைக் கைவிட்டு ஓடுவதற்குத் தூண்டுதலாக இருப்பது இ.த.ச. பிரிவு 135 இன் கீழ் ஈராண்டு வரையிலான சிறைத்தண்டனை அல்லது ஒறுப்புத்தொகை விதிப்பு அல்லது இரண்டுமான தண்டனைக்குரிய குற்றமாகும்.
88. Abetment of escape of persons arrestedதளையிடப்பட்டவர்கள் தப்பியோட உடந்தை  

கைது செய்யப்பட்டவர்கள் தப்பிச் செல்வதற்குத் தூண்டுதலாகவோ உடந்தையாகவோ இருப்பவர்களும் குற்றவாளிகளே.
89. Abetment of insubordinationகீழ்ப்படியாமைக்கு உடந்தை  

கீழ்ப்படியாமை என்பது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுப்பதைக் குறிக்கிறது. இ.த.ச.பிரிவு 138 இது குறித்துக் கூறுகிறது.   

தரைப்படை, வான்படை, கப்பற்படையைச் சேர்ந்த எந்த ஒருவரும் பணிப்பொறுப்பிலிருந்து தப்பி ஓடினால்,- பணியைக் கைவிட்டு ஓடினால், அத்தகைய செயலுக்கு உடந்தையாக இருப்பவரும் தண்டனைக்குரியவரே.  

படைஞர், மேலலுலவர்களின் அல்லது படைத்துறையின் கட்டளைக்கு அடிபணிய மறுப்பதற்குத் தூண்டுதலாக அல்லது உடந்தையாக இருப்பவர், 6 மாதம்வரையிலான  சிறைத்தண்டனை அல்லது ஒறுப்புத் தொகை அல்லது இரண்டும் விதிக்கப்படுவதற்கு உரியவர்.
90. Abetment of mutinyகலகத்தைத் தூண்டுதல்  

படைஞர் அல்லது படைத்துறை அலுவலர் தம் பணியிலிருந்து கடமை தவற ஈர்ப்பவர் அல்லது கலவரம் செய்யத் தூண்டுபவர், வாணாள் சிறைத்தண்டணைக்கு அல்லது பத்தாண்டு வரையிலான தண்டனையும் ஒறுப்புத்தொகையும் விதிப்பதற்கு உரியவராவார்(இ.த.ச.பிரிவு 131).  

இத்தூண்டுதலால் கலகம் நேர்ந்தது எனில் அதற்குக் காரணமானவர், மரணத்தண்டனை அல்லது வாணாள் தண்டனை அல்லது பத்தாண்டுகாலத் தண்டனை அல்லது சிறைத்தண்டனையுடன்   ஒறுப்புத்தொகையும் தண்டனையாக விதிப்பதற்குரியவராவார். (இ.த.ச.பிரிவு 132)  

mutiny  என்றால் ஆட்சி எதிர்ப்புக்கிளர்ச்சி, படைவீரர் கலகம், கலகம், கிளர்ச்சி, கலவரம், சட்டப்படியான அதிகாரத்தை வெளிப்படையாகப் புறக்கணிக்குங் கலகம், படைத் தலைவர்களுக்கு எதிரிடையாகப் படைவீரர்கள் செய்யுங் கலகம் எனப் பலவாறாகக் கூறப்படுகிறது. இங்கே படைஞர்கள் செய்யும் கலவரத்தைக் குறிக்கிறது.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்