( தமிழ்ச்சொல்லாக்கம் 505-510 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 511-515

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

511. Budget – அரசிறை கணக்கு

நூல் : (உ)லோகமான்ய பாலகங்காதர திலக் (1924) பக்கம் : 69

நூலாசிரியர் : கிருட்டிணசுவாமி சர்மா

512. வியாக்ரபாதர் – புலிக்கால் முனிவர்

மழமுனி என்னும் இயற்பெயர் கொண்ட வியாக்ரபாத (புலிக்கான்) முனிவர்க்கும், வசிட்ட முனிவர் உடன் பிறந்தாளுக்கும் மகவாய்த் தோன்றிக் குழவிப் பருவத்திற் பசிக்குப் பாற்கடல் பெற்ற உபமந்யு மாமுனிவர் பல்லாயிர முனிவரும், யோகியரும் தம்மைப் புடை சூழத் திருக்கைலை மலையின் தாழ் வரையின் கட்சிவத்யான பரராய்ச் சிவானந்த பலி தராய் எழுந்தருளியிருப்புழி அங்கு ஆயிரஞ் சூரியரொரு காலத்து உதித்தாற் போல்வதொரு பேரொளி தோன்றிற்று.

நூல்   :           பெரிய புராண வாராய்ச்சி (1924 பக்கம் : 2

நூலாசிரியர்         :           வா. மகாதேவ முதலியார்

(கிறித்தவ கலாசாலைத் தமிழாசிரியர்)

513. நாயன் – வழிகாட்டி

அன்பின் பெருமை வலிமை பயன் இவை அங்கையினெல்லிபோல இனிதின் விளங்கவும், அற்புச் சுவை ததும்பி வழிந்தோங்கவும் ஏனைச் சுவைகளாங்காங்குத் தோன்றவும் அமைந்த அறுபான் மூவர் நாயன்மார் அருஞ் சரிதை நூற்பொரு ளென்க. அடியார்கள் இப்புராணத்துள் நாயன்மா ரென்று வழங்கப் பெறுவர். ‘நாயன்’ என்னும் வடசொற்குப் பொருள் வழிகாட்டி அல்லது நடத்துவோன் என்பது; வடமொழியில் ‘கோநாய’, ‘அசுவநாய’ முதலிய பிரயோகங்கள் இருத்தல் காண்க.

மேற்படி நூல் : பெரிய புராண வாராய்ச்சி (1924 பக்கம் 15)

514. உக்தவேதீசுவரர் – சொன்னவாறறிவார்

திருத்துருத்தி யென்னுந் திருப்பதியிற் பெருமான் வடமொழிப் பெயர் உக்தவேதீசுவரர் என்பது தமிழின் அதற்கு நேர் ‘சொன்னவா றறிவார்’ என்பது.

மேற்படி நூல் : பக்கம் – 52

515. வியாச்சியம் – மன்றாட்டு வழக்கு

அதுவரை மாணவராயிருந்த மைனர் சமீன்தாரவர்களுக்குத் தக்க பருவமாகிய வயது வந்தவுடனே அரசாங்கத்தார் சமீன் ஆட்சியை உரியவர் இடத்தில் ஒப்பிக்கும்போது, சிங்கம்பட்டி மலை சம்பந்தமான மலை போன்ற மன்றாட்டு வழக்கை (வியாச்சியம்)யும் கூடவே ஒப்பித்தார்கள்.

நூல்   :           வக்கீல் பண்டாரம் பிள்ளை என்னும் திருவாளர் தி. செ. சுப்பிரமணிய பிள்ளை யவர்களின் சரித்திரச் சுருக்கம் (1924 பக்கம்-78)

நூலாசிரியர்         :           மு. பொ. ஈசுர மூர்த்தியா பிள்ளை

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்