( தமிழ்ச்சொல்லாக்கம் 585-596 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 597 – 600

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

597. வயோதிகர் – மூப்பாளர்

நூல்   :           சீவகாருணிய ஒழுக்கம் (1927)

நூலாசிரியர்         :           சிதம்பரம் இராமலிங்க சுவாமிகள்

598. பட்சி சகுனம் – புட்குறி

நூல்   :           பெருமக்கள் கையறுநிலையும் மன்னைக் காஞ்சியும் (1927) பக்கம் : 28

நூலாசிரியர்         :           அ. கி. பரந்தாம முதலியார்

(தென்னிந்திய தமிழ்க்கல்விச் சங்கக் காரியதரிசி)

599. ஆசாரக் கோவை – ஒழுக்கக் கோவை

ஆசாரக்கோவை என்னும் இந்நீதிநூல் கடைச்சங்கம், மருவிய பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் பெருமான் இயற்றியது; நூறுவெண்பாக்களையுடையது. வெண்பா விகற்பகங்கள் பலவற்றை இதன்கண் காணலாம். இவ்வாசிரியர் சைவமதத்தினர் என்பது தற்சிறப்புப் பாயிரத்தால் வெளிப்படை. இந்நூலிலுள்ள கருத்துகள் வடமொழி நூல்களினின்றும் தேர்ந்தெடுக்கப்பட்டவை. பலவகைப்பட்ட ஆசாரங்களை எடுத்துக்கோத்த நூலாதலின் ஆசாரக்கோவை எனப் பெயர் பெற்றது. இதற்கு ஆசிரியர் ஒழுக்கக் கோவை எனத் தமிழ் மொழியால் பெயர் கூறாதது வடமொழியினின்று திரட்டப்பட்ட உண்மை விளக்கிய போலும்,

நூல்   :           ஆசாரக்கோவை பாட்டும் குறிப்பும் (1927) பக்கம் :7

பதிப்பாசிரியர்    :           மணி. திருநாவுக்கரசு முதலியார்

(சென்னைப் பச்சையப்பன் கல்லூரித் தமிழாசிரியர்)

600. Literary Grace — இலக்கியமாட்சி

ஒருநூல் இலக்கிய வகுப்பிற் சரிவரச் சேர்ந்துளதாவதற்கு அது பிழையற்றிருப்பது மாத்திரமே போதியதாகாது என்பதும், அஃது அவ்வாறு இலக்கிய வகுப்பிற் சேர்ந்துளதாவதற்கு அஃது இலக்கிய மாட்சி (Literary Grace) யுடையதாதல் வேண்டுமென்பதும் நம்மனோரது கொள்கைக ளாதலின், அவற்றிற் கியைய இந் நூலை மாணவர்க்குப் பெரிதும் பயன்தரக் கூடியதோர் இலக்கியவகையில் என்னாலியன்றமட்டும் வரைந்திருக்கின்றேன். கற்றறிந்தோர் இதனை ஏற்றுக் கொள்வாராக.

நூல்   :           முருகன். ஒரு தமிழ்த் தெய்வம் (1927)

முகவுரை    :           பக்கம் – 4

நூலாசிரியர்         :           டி. பக்தவத்சலம் பி.ஏ.,

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்