(உ.வே.சா.வின் என் சரித்திரம் 31 தொடர்ச்சி)

த்தூரி ஐயங்கார் வருகை

நான் இவ்வாறு குன்னத்தில் இருக்கும்போது சிரீ வைணவர் ஒருவரது வீட்டில் ஒரு கல்யாணம் நடந்தது. அதற்காக அவ்வூரின் வடக்கேயுள்ள கார்குடி என்னும் சிற்றூரிலிருந்து அந்த வீட்டினருக்குப் பந்துக்களாகிய சிலர் வந்தனர். அவர்களில் கத்தூரி ஐயங்காரென்பவர் ஒருவர். அவர் சிதம்பரம் பிள்ளைக்குப் பழக்கமானவர். சிதம்பரம் பிள்ளை என்னிடம் கத்தூரி ஐயங்காரைப் பற்றி “அவர் சிறந்த தமிழ் வித்துவான். இந்தப்  பக்கங்களில் அவரைப் போன்றவர் ஒருவரும் இல்லை.  கம்பராமாயணத்திலும் மற்ற நூல்களிலும் நல்ல பழக்கமுடையவர். நன்றாகப் பிரசங்கம் செய்வார். முருக்கங்குடியிலிருந்த ஒரு வீரசைவப் புலவரிடம் பாடங் கேட்டவர்” என்று கூறினார். அப்போது எனக்கு அவரைப் பார்க்க வேண்டுமென்றும் அவரிடமிருந்து அரிய விசயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றும் அவா உண்டாயிற்று. அதற்குரிய முயற்சி செய்யத் தொடங்கினேன்.

விவாகம் நடந்த மறுநாட் காலையில் கத்தூரி ஐயங்காரே நாங்கள் இருந்த வீட்டின் சொந்தக்காரராகிய இராமையங்காரைப் பார்க்க வந்தார். அவ்விருவரும் உறவினர். அவர் வந்தபோது அவருடன் வேறு பலரும் வந்தனர். எல்லாரும் ஓரிடத்தில் இருந்து  பேசிக்கொண்டிருந்தார்கள். நானும் ஒரு பக்கமாக இருந்து அவர்களுடைய சம்பாசணையைக் கவனித்து வரலானேன். கத்தூரி ஐயங்கார் பேசுவது மிகவும் இரசமாக இருந்தது. அவர் இடையிடையே தமிழ்ப் பாடல்களைச் சொல்லிப் பொருளும் கூறினார். அவற்றைக் கேட்டு நான் மிக்க உற்சாகத்தை அடைந்தேன்.

அப்போது என் மனத்தில் ஓர் ஆவல் உண்டாயிற்று; “இவர் நம்மைப் பார்த்துப் பேச மாட்டாரா? ஏதேனும் நம்மைக் கேட்க மாட்டாரா?” என்று எண்ணினேன். என் கருத்தை ஊகித்தறிந்த ஒருவர் கத்தூரி ஐயங்காரை நோக்கி, “சுவாமீ, இந்தப் பையன் தமிழ் படித்து வருகிறான். உங்களை பார்க்க வேண்டும், பார்க்க வேண்டுமென்று துடித்துக் கொண்டிருந்தான். இப்போது உங்கள் பேச்சையே கேட்டுக்கொண்டிருக்கிறான்” என்றார்.

த்தூரி ஐயங்கார் பரீட்சித்தது

கேட்ட அவர், “அப்படியா? சந்தோசம்” என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்து, “நீ யாரிடம் படித்து வருகிறாய்?” என்று கேட்டார்.

“இவ்வூர்க் கணக்குப்பிள்ளையவர்களிடம் படிக்கிறேன்.”

“என்ன படிக்கிறாய்?”

“திருவிளையாடற் புராணம்.”

“முன்பு வேறு யாரிடமேனும் படித்ததுண்டோ?”

“உண்டு. அரியிலூர்ச் சடகோபையங்காரவர்களிடமும் வேறு சிலரிடமும் படித்தேன்” என்று கூறி நான் படித்த நூல்கள் இன்னவை யென்றும் தெரிவித்தேன்.

கேட்டதும் அவர், “அப்படியா? சடகோபையங்காரவர்கள் நல்ல படிப்பாளி. அவர்களிடம் படித்தாய் என்பதைக் கேட்க எனக்கு மிகவும் திருப்தியாக இருக்கிறது. எங்கே, ஒரு பாடல் சொல் கேட்போம்” என்றார். உடனே நான் பைரவி ராகத்தில் திருவேங்கடத்தந்தாதியிலிருந்து ஒரு பாடல் சொன்னேன். பொருள் கூறும்படி அவர் கேட்டார். நான் சுருக்கமாகக் கூறினேன். “நன்றாக இருக்கிறது” என்று சொல்லி அவர் சந்தோசமடைந்தார். அவர் சொன்னது எனக்குக் கனகாபிசேகம் செய்ததுபோல் இருந்தது. அவ்வளவு பெரிய வித்துவான் என்னை ஒரு பொருட்படுத்தி என் பாட்டைக் கேட்டுப் பாராட்டுவதென்றால் நான் எவ்வளவு பாக்கியம் செய்திருக்க வேண்டும்!

“வேறு ஏதேனும் தெரிந்தால் சொல்லு” என்று கேட்டார் அவர்.

எனக்கு ஊக்கம் அதிகரித்தது. சதகங்களிலிருந்து சில பாடல்கள் சொன்னேன்.

திருவேங்கட மாலை படித்திருக்கிறாயா?” என்று அவர் கேட்டார்.

“இல்லை” என்றேன்.

“நான் இப்போது ஒரு பாடல் சொல்லுகிறேன். எழுதிக்கொள்” என்றார்.

“இன்று நாம் நரி முகத்திலேதான் விழித்திருக்கிறோம்” என்று எண்ணி நான் மிக்க குதூகலமடைந்தேன்.


தேனியலுங் கூந்தலார் செங்கரமு மாதவத்தோர்
மேனியுமை யம்பொழியும் வேங்கடமேஞானியர்கள்
ணெய்தாங் குறியெட் டக்கரத்தார் தாளுரன்மேல்வைத்து
வெண்தாங் குறியெட் டக்கரத்தார் சார்பு


(திருவேங்கடமாலை, 57)


என்ற பாடலை அவர் மெல்லச் சொல்லி என்னை எழுதிக்கொள்ளச் செய்தார். பிறகு அதன் பொருளையும் சொன்னார். அப்பால், “எங்கே, அதை ஒரு முறை படித்து அருத்தம் சொல், பார்க்கலாம்” என்று உரைத்தார். “இவருடைய மனத்தில் நம்மைப்பற்றி நல்ல அபிப்பிராயத்தை உண்டாக்க வேண்டும்” என்று மனம் அவாவியது. மிகவும் நிதானமாகப் படித்துப் பயபக்தியுடன் நான் கேட்டபடியே பொருள் சொன்னேன்.

கத்தூரி ஐயங்காருக்கு என்பால் அன்பு அரும்பியது. “நல்ல கிரகிப்பு சக்தி இருக்கிறது. நன்றாய்ப் படித்துக் கொண்டு வா” என்றார் அவர்.


வாக்களித்தது

அங்கே இருந்தவர்களுள் ஒருவர், “தாங்களே இந்தப் பையனுக்குப் பாடஞ் சொல்லிக் கொடுக்க முடியுமா?” என்று வினவினார். அவர், “நான் பாடம் சொல்வதற்கு ஒரு தடையுமில்லை. கார்குடிக்கு வந்தால் வேண்டிய சௌகரியம் செய்வித்து இவனைப் படிப்பிக்கிறேன். இந்தப்பிள்ளை விருத்திக்கு வருவானென்று தோற்றுகிறது” என்று விடை கூறினார்.


அந்தக் கூட்டத்தில் இருந்து எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்த என் தந்தையார், “தாங்கள் சொன்னபடியே கார்குடிக்கு வருகிறோம். இவனுக்குத் தாங்கள் பாடம் சொல்ல வேண்டும்; மற்றக் காரியங்களில் இவன் புத்தி செல்லவில்லை” என்று சொன்னார். அவர் இவ்வாறு கூறியபோது அவருடைய பேச்சில் உணர்ச்சி ததும்பியது. கிடைத்தற்கரிய பேறு கிடைத்தது போல இருந்தது கத்தூரி ஐயங்காருடைய வார்த்தை.


“அங்கே வந்து விடுங்கள். நானும் என் சொந்தக்காரர்களும் உங்களுக்கு வேண்டிய சௌகரியங்கள் செய்து கொடுக்கிறோம். இவனையும் படிப்பிக்கிறேன்” என்று கத் தூரி ஐயங்கார் சொன்னார்.


அப்போது சாமி ஐயங்காரென்ற ஒருவர் அங்கே வந்தார். அவரும் கார்குடியில் இருப்பவரே. கல்யாணத்தின் பொருட்டுக் குன்னம் வந்தவர்; கத்தூரி ஐயங்காருடைய நண்பர்; தமிழிலும் சங்கீதத்திலும் வல்லவர்; கவித்துவ சக்தியும் உள்ளவர். அவரைக் கண்டவுடன் கத்தூரி ஐயங்கார் அங்கே நிகழ்ந்தவற்றையெல்லாம் அவரிடம் தெரிவித்தார். அவர் அதைக் கேட்டதுதான் தாமதம்; உடனே எந்தையாரை நோக்கி, “அடடா, மிகவும் சந்தோ ச ம்! நீங்கள் அப்படி வந்தால் என்னால் ஆன அனுகூலத்தை நானும் செய்விக்கிறேன்; தமிழ்ப் பாடமும் இவனுக்குச் சொல்லுகிறேன்” என்று வாக்களித்தார்.

ஒருவரையொருவர் அன்பிலும் ஆதரவிலும் தரும சிந்தையிலும் மிஞ்சியிருப்பதை யறிந்தபோது, “இனி நமக்கு நல்ல காலந்தான்” என்று நான் நிச்சயஞ் செய்துகொண்டேன்.

“நல்ல நாள் பார்த்துக்கொண்டு வந்து விடுங்கள்” என்று என் தந்தையாரிடமும், “வருகிறாயா? வா” என்று என்னிடமும் கூறிவிட்டுக் கத்தூரி ஐயங்கார் புறப்பட்டார். மற்றவர்களும் சென்றனர்.

கத்தூரி ஐயங்கார் சென்ற திக்கையே நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் தூரத்தில் மறைய மறைய என் மனத்துள் கார்குடியைப் போன்ற தோற்றம் ஒன்று உண்டாயிற்று. என் தமிழ்க் கல்வியின் பொருட்டு எந்த இடத்துக்குச் செல்வதற்கும் என் தந்தையார் சித்தமாக இருந்தார்.

(தொடரும்)

என் சரித்திரம், .வே.சா.