கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 83 : 18. இசைப்பணி புரிந்த காதை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 82 : பூங்கொடி இசைவு தருதல்-தொடர்ச்சி)
பூங்கொடி
18. இசைப்பணி புரிந்த காதை
அருண்மொழி மகிழ்ச்சி
எழிலி பயிற்றிய இசைத்திறம் பூண்ட
விழிமலர்ப் பூங்கொடி வியன்புகழ் ஊர்தொறும்
பரவிப் பரவிப் பாரகம் அடங்கலும்
விரவி மலர்ந்தது விளைந்தது நற்பயன்;
தான்புனை கவியைச் சான்றோர் ஏத்திட 5
ஈன்றநற் கவிஞன் ஏமுறல் போல
ஈன்றாள் அருண்மொழி இவள்புகழ் செவிப்பட
ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே;
எழிலியின் மகிழ்ச்சி
இசையின் அரசியாம் எழிலிதன் கொழுநன்
விசையுறு மரக்கலம் சிதைவுறு காலை 10
விளிவில னாகி மீளுதல் கண்ட
காலையின் மிகவே களிகூர்ந் தனளே;
அடிகள் விழைவு
குறளகங் கண்ட மலையுறை யடிகள்
உறுபுகழ் பூங்கொடி உறுவது காணலும்
நெஞ்சம் குளிர்ந்து நேரிழை வாழ்த்தி 15
`வஞ்சி! தமிழிசை வளர்வான் வேண்டி
நிலையம் ஒன்று நிறுவுதல் விழைந்தனென்;
பலரும் வந்திவண் பயிலிகள் ஆவர்;
இசைகெழு தமிழின் ஏற்றம் உணர்வோர்
திசைதொறும் திசைதொறும் சென்றிசை பரப்புவர்; 20
—————————————————————
பாரகம் – உலகம், அடங்கலும் – முழுவதும், ஏமுறல் – மகிழ்தல், ஞான்றினும் – பொழுதினும், காலையின் – பொழுதைவிட, பயிலிகள் – பயிற்சியாளர்கள், இசை – புகழ்.
++++++
கொள்கை தழீஇய நல்லிசைப் பாடல்
உள்ளங் கவர்வன தெள்ளிதின் யாக்கும்
நற்றிறல் உடையாய் நங்கைநீ யாதலின்
சொற்றமிழ்க் கொள்கை முற்றவும் தொகுத்துப்
பகுத்தறி வூட்டும் பாடல்கள் புனைந்து 25
வகுத்தவை பயிற்றின் வந்திவண் பயில்வோர்
நாடெலாம் பரப்புவர் நம்முயர் கொள்கை;
இசையின் இருபயன்
ஈடிலா இப்பணி இருபயன் விளைக்கும்;
பகைவர் மறைத்த பழந்தமிழ் இசைத்திறன்
பகலவன் கதிரொளி பரவுதல் போலப் 30
புத்துயிர் பெற்றுப் புவிமிசை யாங்கணும்
மெத்தவும் பரவி மேம்படும்; அதன்றலை
விளக்கொளி இன்றி வீங்கிருள் மூழ்கித்
துளக்குறும் மாந்தர் நிகர்த்தன ராகி
உளத்தொளி யின்றி ஓங்கிருட் கிடந்து 35
நொந்திடும் மாந்தர் உய்ந்திட யாண்டும்
சிந்தனைச் சுடரொளி வளர்ந்திடும் அன்றோ?’
என்றன ராக இயைந்தனள் பூங்கொடி;
தமிழிசைப் பள்ளி
நன்றுளங் கொண்ட குன்றுறை யடிகள்
இமிழ்கடல் வரைப்பில் தமிழிசை கூட்டும் 40
கமழ்மணம் பரவக் கண்டனர் பள்ளி;
பள்ளித் தலத்துள் பயிற்றும் பொறுப்பினைக்
கள்ளிதழ்க் கோதை கருத்துடன் ஏற்றனள்;
நாற்றிசை வாழுநர் பாட்டிசை வேட்டுக்
கோற்றொடி தன்னுழைக் குழுமின ராகப் 45
பொன்னியின் செல்வன் புகழ்பெறு மீனவன்
—————————————————————
தழீஇய – தழுவிய, யாக்கும் – இயற்றும், வரைப்பு – உலகம், உழை – இடம்.
+++++++++++++
பன்னரும் துயரப் பாடுகள் அடைந்து
தேடிக் கொணர்தரும் பீடுயர் ஏடு
நாடிப் புகலும் நற்றமிழ் இசையின்
நுணுக்கம் அனைத்தும் நுவன்றனள் இருந்துழி; 50
(தொடரும்)
கவிஞர் முடியரசன், பூங்கொடி
Leave a Reply