(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 89: சண்டிலியின் அழைப்பு-தொடர்ச்சி)

பூங்கொடி அளவிலாப் புகழ்நிலை யுறினும்

தேங்கெழில் சிதைவுறத் திருமணம் இன்றிக்

கொஞ்சும் இளமை கொன்னே கழிய

அஞ்சுபொறி அடக்கிய அறவோர் போல         

          நெஞ்செழுங் காதலை நெருப்பினில் பொசுக்கிப்     5

          பிஞ்சிற் பழுத்த பேதை ஆயினள்;

எவ்வணம் இயம்பினும் எத்துணை மொழியினும்

செவ்விய அவள்நிலை சிறிதும் பிறழ்ந்திலள்

என்னே இவள்மனம் இருந்த வாறே!       

          பின்னே வாழ்விற் பேதுறு வாளே  10

          எனநினைந் தேங்கி இடருறூஉம் வஞ்சி

வஞ்சி தேன்மொழியிடம் புலம்பல்

          தேன்மொழி யாகிய தெரிவையை விளித்து,

`மீன்விழி மாதே! வியனிலத் தியாண்டும்

இந்நிகர் கொடுமை எவ்வுதி அறிதி?      

          தன்பெருங் கொழுநன் தனிமகன் வடிவேல்    15

          வன்புடை வஞ்சரால் மாய்ந்தன னாக

என்னொரு திருமகள் எழிலுறும் அருண்மொழி

மாயாத் துயரால் மாழ்குதல் கண்டு

வீயாத் துன்புள் வீழ்ந்தேன்; என்மகள்,   

          ஓயாக் கவலை ஒழிப்பான் வேண்டித்     20

          தேயாப் பெருமனைச் செல்வமும் வாழ்வும்

மறந்தன ளாகி மலையுறை யடிகள்

திருந்திய குறளகம் சேர்ந்தனள்; என்னுளம்    

—————————————————————

          கொன்னே – வீணே, அஞ்சுபொறி – ஐந்துபுலம், மாழ்குதல் – வருந்துதல், ஒழிப்பான் – ஒழிக்க.

————————————————————–

வருந்திய துரைத்திட வாயொன் றீங்கிலை;    

அடுக்கடுக் காகத் தொடுத்தெனைச் சார்ந்த  25

இடுக்கட் சுமையைப் பொறுத்துளேன் ஆயினும்

துடுக்கி என்மகள் துளிர்பூங் கொடியை

விடுக்கில ளாகி வெந்துயர்க் குழியில்

படுத்தினள் அந்தோ பாவி மடமகள்!      

கருங்கல் இடறிய கால்விரல் ஒன்று         30

பெரும்புண் ணாகி வருந்துங் காலைக்

கொடுத்தேள் அதனிடைக் கொட்டிய தென்று

நெடுந்துயர் அடைவுழிக் கொடும்பட அரவம்

தீண்டிய தென்னத் தேங்கிய கவலைக்  

கூண்டுடல் ஆகிக் குலைந்தேன் தோழி! 35

பூங்கொடியின் எழில் நலம்

ஆறாத் துயரால் அருண்மொழி துறந்தவண்

சேரா நின்றனள் சேர்கதில் லம்ம!

வாழ்வின் நலமெலாம் வகைவகை சுவைத்து

மூழ்கும் பருவத்து முதிரா இளமையள்,  

அழகும் ஒளியும் அழியா ஓவியம், 40

பழகும் மொழியோ பழச்சுவை மானும்,

துளிர்த்தும் தளிர்த்தும் தூமலர் பூத்தும்

கிளைக்கும் மரந்தழீஇ மணக்கும் பூங்கொடி,

விழியின் மலர்ச்சியை வியந்துரை யாடஓர்

மொழியும் உளதோ? முகமொரு முழுநிலா,     45

நடைக்கும் இடைக்கும் நல்லதோர் உவமை

படைக்கும் ஆற்றல் பாவல புலவர்க்கும்

அரிதினும் அரிதே! ஆயிழை நீயும்

தெரிகுவை அந்தத் தெரிவையின் நலமெலாம்,

மூக்கும் விழியும் நோக்குநர் உளத்தைத் 50

—————————————————————

துடுக்கி – துடுக்குக்காரி. மானும் – போலும், தீழீஇ – தழுவி, பாவல – பாடல்வல்ல, ஆயிழை – தேன்மொழி,

—————————————————————

தாக்கும் இயல்பின, தகதக ஒளியின,

வார்த்தபொற் சிலைகொல்! வடியாச் சிலைகொல்!

பார்த்தவர் இவ்வணம் மயங்குவர் பைந்தொடீ!       

(தொடரும்)