(அகல் விளக்கு – மு.வரதராசனார். 46. தொடர்ச்சி)

அகல் விளக்கு

அத்தியாயம் 19 தொடர்ச்சி

மறுநாள் பெருங்காஞ்சியிலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. சந்திரன்தான் எழுதினானோ என்று பார்த்தால், அவனுடைய கையெழுத்தே இல்லை. அவனுடைய தந்தையார் சாமண்ணா எழுதியிருந்தார். பிள்ளை வீட்டார் வந்து கற்பகத்தைக் கேட்பதாகவும், பிள்ளை எங்கள் கல்லூரியில் படிப்பதால் குணம் முதலியவை அறிந்து தெரிவிக்கும் படியாகவும் எழுதியிருந்தார். என் மனம் திகைப்பு அடைந்தது, அடுத்த வரியில் பிள்ளை பி.ஏ. படிப்பதாகவும் பெயர் மாலன் என்பதாகவும் குறித்திருந்ததைப் படித்தவுடன் என் அறிவும் மனமும் நிலைகொள்ளாமல் புரண்டன.

நான் கனவிலும் கருதாத தீமை நெருங்கிவிட்டது போலவும் யாரோ மறைந்திருந்து என்னை வதைப்பது போலவும் உணர்ந்தேன். மாலன்மேல் எனக்கு வெறுப்புத் தோன்றியது. அடுத்த விநாடியில் கற்பகத்தின் மேல் சினம் எழுந்தது. சந்திரனை நன்றி கெட்டவன் என்று நொந்தேன். வெறுப்பும் சினமும் மாறித் துயரமும் கண்ணீரும் ஆயின.

அறைக்குள் இருக்கவும் மனம் கொள்ளவில்லை. அறையை விட்டு வெளியே செல்லவும் முடியவில்லை மனம் படாதபாடுபட்டது. கடிதத்தைக் கிழித்து எறியலாம் என்று எடுத்தேன். கொஞ்சம் பொறுமையுடன் முற்றிலும் படித்து முடிக்க முயன்றேன். “திருமணத்தைப் பற்றி இப்போது எண்ணியிருக்கமாட்டேன். ஆனால், என்ன செய்வது?

என் அக்கா – சந்திரனுடைய அத்தையும் எங்களை விட்டுப் பிரிந்து விட்டார். உலகத்தில் நான் தனியாக நிற்கிறேன். என் ஆவியும் எந்த நிமிசத்தில் பிரியுமோ அறியேன். சந்திரனுடைய போக்கும் செயலும் எனக்கு வாழ்க்கையில் வெறுப்பையே உண்டாக்கிவிட்டன.

ஆகவே, நானும் கண்ணை மூடிக் கொள்வதற்கு முன்னே அந்த ஒரு பெண்ணுக்குச் செய்ய வேண்டியதைச் செய்து விட்டால், சிவனே என்று மூச்சை விட்டு விடுவேன்” என்று கடைசிப் பகுதியைப் படித்ததும் மனம் கலங்கினேன். நல்ல பண்பும் உண்மை அன்பும் உடைய அந்த அத்தையின் வாழ்வும் முடிந்து விட்டதா என்று வருந்தினேன்.

சிறிது நேரத்தில் என்னைப் பிடித்துக் குலுக்கிய அந்த பேய் விட்டு நீங்கியது. என் நிலைமை எனக்கே விளங்கியது. மாலன்மேல் ஒரு குற்றமும் சொல்ல முடியாது. என் மனம் கற்பகத்தை விரும்புவது அவனுக்கு எப்படித் தெரியும்? தான் மணக்கப்போகும் பெண் அந்த கற்பகம்தான் என்பதும் அவனுக்குத் தெரியாது. அவன் முழுப் பொறுப்பையும் கிரக பலனிடத்தில் ஒப்படைத்து விட்டிருக்கும்போது அவனைக் குறை கூறிப் பயன் என்ன? கற்பகத்தின் மேலும் சினம் கொள்வதில் பயன் இல்லை.

அவளைக் கேட்டு இந்த ஏற்பாடு செய்வதாகச் சொல்ல முடியாது. பெண்ணைக் கேட்ட பிறகு திருமணப் பேச்சைப் பேசுவது என்ற நாகரிக நிலை இன்னும் பெரும்பாலான குடும்பங்களில் வரவில்லையே. சந்திரன் தான் என்ன செய்வான்? அவன் குடிகாரனுடைய மனநிலையில் இருக்கிறான். குடிகாரனுக்குத் தன் வழியே தெரியாதபோது, பிறருக்கு எப்படி வழிகாட்ட முடியும்? நான் இதுவரையில் என் விருப்பத்தை ஒருவரிடமும் புலப்படுத்தவில்லையே. இனி மேலாவது புலப்படுத்த முடியுமா? அது மாலனுக்குக் குறுக்கே நிற்கும் முயற்சியாக இருக்கிறதே.

அன்று வகுப்புக்கு போகவில்லை. கல்லூரிக்குப் போகும் நேரத்தில் மாலன் வந்து அழைத்தான். “நீ முன்னே போ. நான் சிறிது நேரம் கழித்து வருவேன்” என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டேன். எங்கேனும் ஒரு பூங்காவுக்குச் சென்று ஒரு மரத்தடியில் உட்கார்ந்து அழலாம் என்று எழுந்தேன். செனாய் நகரில் திரு.வி.க. பூங்காவுக்குச் சென்று ஒரு மூலையில் உட்கார்ந்தேன் திரும்பத் திரும்ப முன்போலவே வெறுப்பும் சினமும் குழப்பமும் ஆறுதலும் மாறி மாறி வந்தன. என்னுடைய கலக்கம் எனக்கே பைத்தியக்காரத் தன்மையாகப் புலப்பட்டது.

மாலையில் கடற்கரைக்குச் சென்றேன். நெடுந்தொலைவில் யாரும் நெருங்காத இடத்தில் ஒரு மூலையில் தனியே உட்கார்ந்தேன்; சோர்ந்து படுத்தேன். கிழவனும் கிழவியுமாய் இருவர் அந்தப் பக்கமாக வந்தார்கள். இவர்கள் ஏன் இங்கே வந்து தொலையவேண்டும் என்று வெறுப்போடு எண்ணினேன். வந்தவர்கள் இருவரும் ஒருபுறம் உட்கார்ந்து பழைய குடும்பக் கதையைப் பேசத் தொடங்கினார்கள்.

இன்னும் யாராவது வந்து சேர்ந்தால் அப்புறம் எழுந்து போகலாம். அது வரையில் இங்கேயே இருக்கலாம் என்று படுத்திருந்தேன். பேசிக் கொண்டிருந்த கிழவன் ஒரு கனைப்புக் கனைத்து, “சேச்சே! சுத்தப் பைத்தியங்கள்! எவ்வளவு பெரிய உலகம்! எத்தனை பிள்ளைகள் எத்தனை பெண்கள் பிறந்தது பிறந்தபடியே இருக்கிறார்கள்! இவனுக்கு என்று ஒரு பெண் கிடைக்க மாட்டாளா?” என்றான். கிழவி உடனே, “இந்த உலகத்தில் பெண் பஞ்சமும் இல்லை, ஆண் பஞ்சமும் இல்லை” என்றாள்.

எழுந்து உட்கார்ந்தேன். கன்னத்தில் அறைந்து என்னை நோக்கியே சொன்ன சொற்கள் போல் இருந்தன.

இமாவதியின் திருமண அழைப்பு வந்த அன்று சந்திரன் பட்ட துயரம் நினைவுக்கு வந்தது. அன்று அவனுக்கு எவ்வளவு அறிவுரை சொன்ன நான், இன்று அவனைப் போலவே கலங்குகிறேனே என்று எண்ணிப் பார்த்தேன். எந்தத் துன்பமும் அவரவர்களுக்கு வந்து பட்டால்தான் தெரிகிறது. ஆனால், சந்திரன் முயற்சி செய்தான். கிட்டாததற்கு ஏங்கி அழிந்தான். நான் முயற்சியே செய்யவில்லை.

கிட்டக்கூடியதற்கும் முயற்சி செய்யத் திறன் இல்லாமல் வாடுகின்றேன். சந்திரன் அளவு கடந்து எதிர்பார்த்து எதிர்பார்த்து அல்லலுற்றான். நான் அளவோடு எதிர்பார்ப்பதற்கும் தயங்கித் தோல்வியுறுகிறேன். நல்ல உலகம் இது! வாதம் குறைந்தால் பித்தம், பித்தம் குறைந்தால் சிலேத்துமம் என்று நோயாளிகள் துன்பப்படுவது போலவே உள்ளது! மன நோயிலும் மிகுந்தாலும் குறைந்தாலும் ஒவ்வொரு வகைத் துன்பம் ஏற்படுகிறதே! காதல் முயற்சியில் இறங்கினால் ஒரு வகை ஏமாற்றம்! இறங்காமலே இருந்தால் இன்னொரு வகை ஏமாற்றம்!

ஆனால், சந்திரன் துடுப்புகளை எறிந்துவிட்டு மரக்கலத்தையும் உடைத்துவிட்டுக் கடலில் குதித்தான். நான் துடுப்புகளை ஏந்தியபடியே, மரக்கலத்தில் நின்றபடியே வீசும் புயலின் கொடுமையைப் பார்த்துக் கலங்கி நிற்கிறேன். இவ்வாறு பற்பல எண்ணிக்கொண்டிருந்து விடுதிக்குத் திரும்பினேன்.

அன்று இரவு நல்ல உறக்கமும் இல்லை. சாமண்ணாவுக்குக் கடிதம் எழுதுவதா, இல்லையா, என்ன எழுதுவது, மாலனுக்காக விட்டுக்கொடுத்துக் கற்பகத்தை மறந்து விடுவதா, மாலனைப் பற்றிக் கவலைப்படாமல் கற்பகத்தைப் பெற முயற்சி செய்வதா, அப்படியானால் குருவிக்குஞ்சு இறக்கை வளர்வதற்கு முன்னமே கூட்டைவிட்டு வெளியே வந்த கதை ஆகுமோ என்று வேறு வகை எண்ணங்களில் சிக்குண்டு தடுமாறினேன்.

விடியற்காலையில் அயர்ந்து உறங்கிவிட்டேன். பொழுது விடிந்ததும் யாரோ எழுப்பும் குரல் கேட்டுச் சன்னல் வழியாகப் பார்த்தேன். மாலன் நின்றுகொண்டிருந்தான். “நேற்றெல்லாம் காணோம். இரவு நேரம் கழித்து வந்தாய்; முன்னேரத்திலேயே படிக்காமல் விளக்கணைத்துத் தூங்கி விட்டாய். என்ன காரணம்? உனக்கும் ஏதாவது காதல் நோய் முற்றிவிட்டதா, சந்திரனைப் போல-?” என்றான்.

“சந்திரன்தான் உன் மைத்துனன் ஆகப்போகிறானே” என்று வாய் தவறிச் சொல்லிவிட்டேன். பிறகு வருந்தினேன்.

“என்ன உளறுகிறாய்? எனக்குத் தங்கையும் இல்லை; அவனுக்குப் பெண் கொடுக்கப்போவதும் இல்லை.”

“நீ அவனுக்குக் கொடுக்காவிட்டால் அவன் உனக்குக் கொடுக்கப் போகிறான்.”

மாலன் திகைத்து நின்றான். மூக்கின் அருகே சுட்டு விரலை மடித்து வைத்து என்னவோ எண்ணினான். “உனக்கு ஏதாவது கடிதம் வந்ததா?”

“ஆமாம், பிறகு சொல்வேன்” என்றேன்.

“சொல், சொல்” என்று என்னைத் துளைக்கத் தொடங்கினான். மேசை மேல் இங்கும் அங்கும் தேடினான். “எங்கே கடிதம்? உண்மையைச் சொல்” என்றான்.

சாமண்ணாவின் கடிதம் பற்றிச் சொன்னேன். அமைதியாய்க் கேட்டான்.

“பெண் நல்ல பெண்தானா? நீ பார்த்திருப்பாயே? குணம் எப்படி?” என்றான்.

“அதைப் பற்றி என்னை ஏன் கேட்கிறாய்? உங்கள் வீட்டுச் சோதிடரைக் கேள்” என்றேன். பிறகு அவன் வற்புறுத்தவே, நல்ல அழகு என்றும், நல்ல பண்பு என்றும் அவன் மகிழுமாறு சொன்னேன். அவனுடைய முகத்தில் மலர்ச்சி கண்டபோது, என் உள்ளம் நொந்தது; தாங்க முடியாத ஒரு வகை வேதனை, என் உள்ளத்தில் இருந்தது; அதனை வெளிக்காட்டாமல் நொந்து வாடினேன்.

காலைக் கடன்களை முடித்தேன். உணவுக் கூடத்துக்குப் போய்ச் சிற்றுண்டி உண்டு திரும்பிவந்து என் நாற்காலியில் உட்கார்ந்தபோது, என் மனப்புயல் இருந்த இடம் தெரியாமல் அமைதி நிலவக் கண்டேன். என் துடுப்புகள் உதவியாக இருந்தன; மரக்கலமும் பயன்பட்டது. கடமைகளில் மனம் சென்றது, துடுப்புகளை எறியாமல் உதறாமல் பொறுமையோடு இருந்தது நன்மை ஆயிற்று.

மாலையில் வகுப்பிலிருந்து திரும்பி வந்ததும் சாமண்ணாவுக்குச் சுருக்கமாகக் கடிதம் எழுதினேன். மாலன் மூன்று ஆண்டுகளாகப் பழக்கமானவன் என்றும், ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவன் என்றும், எப்படியாவது முன்னேறவேண்டும் என்ற ஆசை உடையவன் என்றும், ஆனால், பலவகை மூட நம்பிக்கைகள் உடையவன் என்றும் சோதிடத்தில் பற்று மிகுந்தவன் என்றும் எழுதினேன்.

கடிதம் எழுதி முடித்த பிறகு ஊசலாடிக் கொண்டிருந்த மனம் துணிந்து ஒரு நிலையில் நின்றது.

(தொடரும்)

 முனைவர் மு.வரதராசனார்அகல்விளக்கு