(அகல் விளக்கு – மு.வரதராசனார்: 7 தொடர்ச்சி)

அகல் விளக்கு : 8

வீட்டுத் திண்ணை மேல் ஏறி நின்று கொண்டு காற்றாடியைச் சிறிது விட்டுப் பார்த்தேன். இரவெல்லாம் அடித்த மேல் காற்று நின்று விட்டிருந்தது. திண்ணையை விட்டு இறங்கித் தெருவில் நின்று காற்றாடியை விட்டு மெல்ல மெல்ல நூலை விட்டவாறே சிறிது ஓடினேன். காற்றாடி உயர எழுந்து பறந்தது. என் உள்ளமும் உயர்ந்து பறந்தது. வடக்கு நோக்கி மெல்ல நடந்து நூலை உயர விட்டுச் சென்றேன். எதிரே ஒரு குதிரை வண்டி வரவே, ஓரமாக ஒதுங்கினேன். ஒதுங்கியபோது காற்றாடியைப் பார்க்கவில்லை.

அது ஒரு வேப்பமரத்தின் கிளையில் சிக்கிக்கொண்டது. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தேன். அந்த வேப்பமரம் 23ஆம் எண்ணுள்ள வீட்டின் முன் புறத்தில் உள்ளது. அங்குத்தான் புதிதாக வந்தவர்கள் இருந்தார்கள். திகைத்துக் கொண்டிருந்தபோது, முன் கண்ட அந்தப் பையன் வெளியே வந்து “காற்றாடியா? கிளையில் அகப்பட்டுக் கொண்டதா?” என்று சொல்லிக்கொண்டே சிறிதும் தயங்காமல் என்னைக் கேட்கவும் கேட்காமல், என் கையில் இருந்த நூலைப் பற்றி வெடுக்கென்று இழுத்தான். நூல் அறுந்ததே தவிர, காற்றாடி வரவில்லை, எனக்குக் கோபம் வந்தது. “யாரடா நீ! உன்னைக் கூப்பிட்டேனா? எனக்கு இழுக்கத் தெரியாதா?” என்று உரக்கச் சொல்லி, “மடையன், கழுதை” என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். அதற்குள் அவனுடன் வந்த அம்மையார் வெளியே வந்து, “என்ன அப்பா அது?” என்றார்கள்.

“ஒன்றும் இல்லை. அத்தை! காற்றாடி சிக்கிக் கொண்டது. இழுத்தேன். நூல் அறுந்துவிட்டது” என்றான் அந்தப் பையன்.

“பார்த்தாயா! உன் குணத்தைக் காட்டிவிட்டாயே! அவன் காற்றாடியை நீ ஏன் இழுத்தாய்? எதிலும் இப்படித் தானே முன்னேபோய் விழுந்துவிடுகிறாய்!” என்று பையனைப் பார்த்துச் சொன்னார். என்னைப் பார்த்து, “இரு தம்பி, எங்கள் வீட்டு வேலைக்காரப் பையனையாவது வேறு யாரையாவது கொண்டு எடுத்துத் தரச் சொல்வேன்” என்றார்.

இத்தனையும் கேட்டுக் கொண்டிருந்த வீட்டுக்கார அம்மா வெளியே வந்து, “என்ன? காற்றாடிச் சண்டையா? ஆனிமாதம் பிறந்து விட்டதே! இன்னும் பள்ளிக்கூடம் திறக்கலையா?” என்றார். என்னைப் பார்த்ததும், “ஓ! வேலுவா? சண்டை போடாதேப்பா, இவனும் உன்னைப் போல் உங்கள் பள்ளிக்கூடத்தில் படிக்க வந்தவன்தான்” என்றார். உடனே அந்தப் பையனுடைய அத்தையைப் பார்த்து, “அம்மா! இந்தப் பையன்தான் வேலு. இவனைப்பற்றித்தான் உங்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். நாலாம் வீட்டுப் பையன். அந்தப் பள்ளிக் கூடத்தில் தான் படிக்கிறான். போகவரத் துணையாக இருப்பான். நல்ல பையன், ஒரு கெட்ட பேச்சு வாயில் வராது” என்று என்னைப் பற்றி நற்சான்றும் கொடுத்தார்.

இப்படி அவசரப்பட்டு நூலை அறுத்த அந்தப் பையன்தான் சந்திரன். அந்த வீட்டுக்கார அம்மா என்னைப் புகழ்ந்த புகழ்ச்சியால் என் மனத்தில் இருந்த சினம் இருந்த இடம் தெரியாமல் போயிற்று. சந்திரனுடைய அத்தை என்னை பார்த்த கனிவான பார்வையும், பேசிய கருத்தான பேச்சும் என் மனத்தில் அன்பை விளைத்தன. வேலைக்காரப் பையன் மடமட என்று வேப்பமரத்தில் ஏறிக் காற்றாடியை என் கையில் கொடுத்தவுடன், சந்திரன் பக்கத்திலேயே உட்கார்ந்துவிட்டேன். அன்று அந்தத் திண்ணையில் தான் எங்கள் நட்பு மெல்லத் தொடங்கியது. அது ஆயுள் நட்பாக வளர்ந்துவிடும் என்று அப்போது நான் எதிர்பார்க்கவேயில்லை.

சந்திரனுடைய ஊர் பெருங்காஞ்சி என்பதும் ஊரில் எட்டாவது படித்து முடித்தான் என்பதும், உயர்நிலைப்பள்ளியில், சேர்ந்து படிப்பதற்காக வாலாசாவுக்கு வந்தான் என்பதும் நல்ல எண்கள் வாங்கி வகுப்பிலேயே முதல்வனாகத் தேறி ஆய்வாளரிடம் நற்சான்று வாங்கி வந்தான் என்பதும் ஆகிய எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவர்களோடு வந்த மாசன் என்ற அந்தப் பையனுக்குப் படிப்புத் தெரியாது என்றும் வேலைக்காக அழைத்து வந்தார்கள் என்றும், மரம் ஏறுவதில் கெட்டிக்காரன் என்றும் எல்லாவற்றையும் சந்திரனே சொன்னான்.

அவனுடைய தந்தை பயிர்த்தொழில் உடையவர் என்பது முதலான குடும்பச் செய்திகளை அவன் சொல்ல, என் தந்தை மளிகைக்கடை வைத்து வியாபாரம் செய்தல் முதலான எங்கள் குடும்பச் செய்திகளை நான் சொன்னேன். அத்தை விதவை என்றும், குழந்தை இல்லாதவர் என்றும் சொன்னான். நான் பேச்சை நிறுத்துவதாக இருந்தாலும் அவன் மேலும் வளர்த்துக் கொண்டிருந்தான். புதிய இடம் புதிய ஆட்கள் என்ற தயக்கமே இல்லாமல் சந்திரன் எல்லாவற்றையும் எடுத்துச் சொன்னான். அதனால் நானும் அவ்வாறு பேசிப் பழகினேன்.

மறுநாள் காலையில் 9 மணிக்குப் பெருங்காஞ்சிப் பள்ளிக்கூடத் தலைமையாசிரியர் வந்து சந்திரனை அழைத்துக் கொண்டு உயர்நிலைப் பள்ளிக்குப் புறப்பட்டார். அன்று உயர்நிலைப்பள்ளி திறக்கும் நாள் ஆகையால், நான் புதிய ஆடை வேண்டும் என்று அம்மாவிடம் போராடிக் கொண்டு வீட்டினுள் இருந்தேன். “வேலு” என்று குரல் கேட்டது. பல நாள் பழகியவன் அழைத்த குரல்போல் இருந்தது. எட்டிப்பார்த்தேன். சந்திரன் அந்தத் தலைமையாசிரியரோடு நின்று கொண்டிருந்தான். “நான்தான் கூப்பிட்டேன். நீயும் வருகிறாயா?” என்றான்.

“இதோ வந்து விடுகிறேன், இரு” என்று சொல்லி, அம்மா கொடுத்த உடையை உடுத்துக்கொண்டு புறப்பட்டேன். பள்ளிக்கூடத்தை நோக்கி நடந்தபோது சந்திரனுடைய கை என் தோள்மேல் இருந்தது. ஆனால் அவ்வாறு அவனுடைய தோள்மேல், கைவைத்துச் செல்லும் அளவிற்கு என் மனம் துணியவில்லை.

(தொடரும்)

 முனைவர் மு.வரதராசனார்

அகல்விளக்கு