[ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (22)   தொடர்ச்சி]

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (23)

மதம்வேண்டாம் சாதிவேண்டாம் மார்க்கம் ஒன்றே

மனிதருக்குள் உலகத்தில் இருந்தால்போதும்

கதகதப்பாய்க் குளிர்காய அமைத்தார் கீழ்மைக்

கயவர்கள்தாம் சாதிமதச் சமயச் சண்டை!

பேதமில்லை பிரிவில்லை பிரிவால்.வையப்

பட்டினிகள் ஒழியவில்லை! பின்ஏன் இந்த

இதமில்லா மதப்பிரிவு எண்ணிப் பாரீர்

எல்லாரும் மனிதமதம் உரிமை ஒன்றே!

 

என்றெல்லாம் வியத்தகுநல் கருத்தைச் சொன்ன

ஈரமிகு வள்ளலாரின் கொள்கை பற்றி

நன்றி யுடன் இவ்வையம் சென்றி ருந்தால்

நாசங்கள் நலிவேது? பூமித ன்னில்

கொன்றொழிக்கும் கொடுமைகளும் ஏதாம்! ஐயா

 வள்ளலாரை வியந்து பெருங்கவிக்கோ பாடியுள்ள கவிதைகள் இனிமையானவை. உண்மைகளை உணர் வோட்டத்துடன் எடுத்துச் சொல்பவை. –

மதம்சாதிப் பேயாட்டம் மமதை ஆட்டம்

மார்க்கங்கள் விதவிதமாய்க் காட்டும் ஆட்டம்

சதி ஆட்டம் பித்தலாட்டம் தான் நான் என்றே

தன்னிட்டம் போலாடும் தடியாட்டங்கள்

குதி ஆட்டம் போடுகின்ற நாளில் அன்பின்

கோலாட்டம் தானாடி சமரசத்தின்

மதி ஆட்டம் சன்மார்க்கம் காட்டி வென்ற

வள்ளலாரைப் போலொருவர் வையம் உண்டோ?

 

என்று வியந்து போற்றுகிறார். தொடர்ந்து வள்ளலாரின் சிறப்புகளைக் கூறி, செஞ்சொற்கவிதையாக சன்மார்க்க இனிமை பற்றிப் பாடுகிறார்.

முக்கனியைப் பிழிந்த சுவைச் சாறோ எந்த

முறை ஒழுகும் மனிதர்க்கும் இனிக்கும் ஆறோ?

அக்கனியின் சாற்றில்பால் தேன்பருப்பு

அறிசுவை நெய் தெங்கிளநீர் கலந்துண்டாலோ

மக்கள்யார் உண்டாலும் இனிக்கும், ஒப்பில்

மனத்தடுப்பில் இச்சுவையைக் காய்ச்சிக்கட்டி –

தக்கமுறை வரஉண்ணும் தத்துவம் போல்

சாகாத சன்மரர்க்க இனிமை விண்டார்!’

 

வள்ளலார் குறித்துக் கவிஞர் மனம் இலயித்துப் பாடியுள்ள பாடல்கள் படித்துச் சுவைத்து மகிழ்ச்சியுறத் தகுந்த இனிய படையல்கள். அவற்றில் ஒன்று

பொருள்விளக்கே பெரிதென்றே எண்ணித் தீய

பூரியர்கள் ஆட்டங்கள் போட்ட போது

அருள்விளக்கே மெய்யென்று துணிந்து செய்கை

அகல் விளக்கை ஏற்றியென்றும் அணையா

இருள் விலக்கச் செய்ததவ ஞானி எங்கள்

ஈடில்லா வள்ளலாரின் தாள்கள் நெஞ்ச

மருள்விலக்கும் பேரமுத ஊற்றாம் என்றும்

வற்றாத சீவநதி இன்பப் பாய்ச்சல்!

 

(தொடரும்)
வல்லிக்கண்ணன்: 
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்