நான் வேலையை ஏற்றுக் கொண்ட வருடத்தில் சிலப்பதிகாரத்தில்

கானல்வரி முதல் நான்கு காதைகள் பாடமாக வந்திருந்தன. அதைக் கோடை

விடுமுறை முடிந்தவுடன் பாடம் சொல்ல வேண்டியவனாக இருந்தேன். “இவர்

சிலப்பதிகாரத்தை எப்படிப் பாடம் சொல்லப் போகிறார்?” என்று சிலர்

சொல்லிக் கொண்டிருந்ததாக என் காதில் பட்டது. ஆகவே அதைக் கூடிய

வரையில் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று நிச்சயம் செய்து

கொண்டேன். இருந்த அச்சுப் பிரதியின் உதவி கொண்டு விசயத்தைத்

தெரிந்துகொள்ளுவது கடினமாகவே இருந்தது. இந்த விசயங்களை நான்

சுப்பிரமணிய தேசிகரிடம் சொன்னபோது அவர், “மடத்தில் ஏட்டுப்

பிரதியிருக்கிறது. சின்னப் பண்டாரத்தினிடம் படித்துத் தெரிந்து கொள்ளலாம்”

என்றார். பிள்ளையவர்களுக்கே சந்தேகமான புத்தகத்தில் நமசிவாய தேசிகர்

தேர்ச்சியடைய நியாயம் இல்லை. ஆனாலும் சிறந்த அறிவாளியாகிய

அவருடன் சேர்ந்து ஆராய்ந்து வரையறை செய்து கொள்வதில் பல இலாபம்

உண்டு. அதனால் நான் சிலப்பதிகார ஏட்டுச் சுவடியை எடுத்துக் கொண்டு

நமசிவாய தேசிகரிடம் சென்று படித்தேன். இருவரும் கவனித்து ஆராய்ந்தோம்.

ஒரு விதமாகப் படித்து முடித்தோம்; பொருள் வரையறையும் செய்து

கொண்டோம்.

இப்படிச் சில நாட்கள் சென்றன. வேறு நூல்களைப் படிப்பதும், பாடஞ்

சொல்வதுமாக மற்ற நாட்கள் போய்க் கொண்டிருந்தன.

விடுமுறை முடிந்தவுடன் கும்பகோணத்தில் நிரந்தரமாகக் குடித்தனம்

வைத்து விடலாமென்று என் தந்தையார் சொன்னார். அதன் பொருட்டு அங்கே

ஒரு வீடு பார்ப்பதற்காக அவர் கும்பகோணத்திற்கு புறப்பட்டார்.

புறப்படும்போது என் தாயார், “காவேரிக்குப் பக்கமாக இருந்தால் நல்லது”

என்றார். “கல்லூரிக்கும் பக்கமாக இருந்தால் சௌகரியமாக இருக்கும்”

என்றேன் நான். அவர் கும்பகோணத்திற்கு நடந்தே சென்றார். இரெயில்

வண்டியில் ஏறும் வழக்கம் அவருக்கு இல்லை. கும்பகோணத்தில் சில தெருக்களைப் பார்த்து விட்டுப் பக்தபுரி அக்கிரகாரத்துக்குள் செல்லும்போது, “மங்களாம்பா இருக்கிறாள்; பயமில்லை” என்று யாரோ இருவர் பேசிக் கொண்டிருந்தது அவர் காதில் பட்டது.

கும்பகோணம் கும்பேசுவரராலயத்தில் எழுந்தருளியிருக்கும் அம்பிகையின்

திருநாமம் அது. அந்த வார்த்தைகள் நல்ல சகுனமாகத் தோன்றவே அவர்

அந்தத் தெருவின் மத்தியில் கீழ்ச் சிறகில் ஒரு வீட்டைப் பார்த்துத் திட்டம்

செய்தார். மாதம் மூன்றரை உரூபாய் வாடகை பேசினார். பதினைந்தடி அகலமும்

நாற்பதடி நீளமும் உள்ளது அது. வீட்டிற்குப் பின் நீண்ட தோட்டமும்

இருந்தது.

வீடு எல்லாரும் இருப்பதற்குப் போதுமானதாக இராவிட்டாலும்

சகுனத்தின் விசே்த்தால் என் தந்தையாருக்கு அதுவே பெரிய மாளிகையாகத்

தோற்றியது. வாழ்க்கையில் பல வகையான துன்பங்களையும், வறுமையின்

சங்கடங்களையும் அனுபவித்துத் தேர்ந்த அவருக்குப் பணம் கிடைத்தால்

எவ்வளவு செட்டாக வாழமுடியுமோ அவ்வளவு செட்டாக வாழ வேண்டுமென்ற

சங்கற்பம் இருந்தது. அதனால் அவருடைய நோக்கத்துக்கு அந்த வீடு

ஏற்றதாகவே அமைந்தது.

வீட்டைப் பார்த்துத் திட்டம் செய்துவிட்டு நடந்தே திருவாவடுதுறை

வந்து சேர்ந்தார். “காவிரிக்கும் கல்லூரிக்கும் பக்கமாக இருக்கிறது; இரண்டாம்

வேளை ஆகாரத்துக்கு வீட்டுக்கு வந்து போகலாம். நல்ல சகுனமாயிற்று”

என்று சொல்லி எங்களுக்குச் சந்தோசத்தை உண்டாக்கினார்.

விடுமுறை முடிந்தது. என் தகப்பனாருக்குத் திருவாவடுதுறையை விட்டுப்பிரிய மனம் வரவில்லை. ஆனாலும் ஒரு வகையாகச் சமாதானம் செய்து கொண்டார். யாவரும் சுப்பிரமணிய தேசிகரிடத்திலும் மற்ற அன்பர்களிடத்திலும் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டுக் கும்பகோணம் வந்து புது வீட்டில் புகுந்தோம். அதுவரையில் திருவாவடுதுறை வாசியாக இருந்த நான் அன்று முதல் கும்பகோண நகர வாசியாக என் வாழ்க்கையைத் தொடங்கினேன்

(தொடரும்)