(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் –1.12.  தொடர்ச்சி)

தலைப்பு- வ.உ.சி., மெய்யறம் :thalaippu_va.u.chithambaranarinmeyyaram

மெய்யறம்

மாணவரியல்

13. களவு விலக்கல்

(களவு- திருட்டு)

  1. களவுடை யவர்தரா துளமொடொன் றெடுத்தல்.

களவு என்பது பொருளுக்கு உரிமையானவர் கொடுக்காமல் நம் மனம் அறிய ஒன்றை எடுத்தல் ஆகும்.

  1. வஞ்சித்துக் கொளல் வாங்கிக் கொடாமை.

ஏமாற்றிப் பொருளை எடுத்தல், வாங்கியதைக் கொடுக்காமல் இருத்தல் ஆகியவையும் களவு ஆகும்.

  1. களவினை யேவுதல் களவிற் குதவுதல்.

களவினைத் தூண்டுதல், களவு செய்ய உதவுதல் ஆகியவையும் களவு ஆகும்.

  1. தடுக்கக் கூடிய விடத்ததைத் தடாமை.

தடுக்க முடிந்த போதும் களவினைத் தடுக்காவிடில் அதுவும் களவு ஆகும்.

  1. உடையவர் நலத்தையொத் துருக்கொளு மிம்மறம்.

இந்த செயலுக்கான தண்டனை பொருளை இழந்தவர்களின் நிலைமையைப் பொறுத்து மாறுபடும்.

  1. களவினைக் கள்ளரு மெள்ளுவர் பிறர்முன்.

களவு செய்பவர்களும் மற்றவர்களிடம் களவுத் தொழில் இழிவானது என்றே கூறுவர்.

  1. கள்ளுநர் தடுப்பவர்க் கொல்லவும் படுவர்.

களவு செய்பவர்கள், தங்களுடைய களவினைத் தடுப்பவர்களைக் கொலை செய்யவும் தயங்கமாட்டார்கள்.

  1. கள்ளுந ருடையராற் கொல்லவும் படுவர்.

பொருளுக்கு உரிமையாளர்களால் களவு செய்பவர்கள் கொலை செய்யப்படும் நிலையும் ஏற்படலாம்.

  1. களவினாற் பலபிறப் பளவிலா வறுமையாம்.

களவு பல பிறப்புகளுக்கு மிகுந்த வறுமையைக் கொடுக்கும்.

  1. களவினை விலக்கினார்க் களவிலாச் செல்வமாம்.                                                                                 களவு செய்யாமல் இருந்தால் அளவற்ற செல்வம் கிட்டும்.

 

வ.உ.சிதம்பரனார்

தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum