(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 42(2.12) – தொடர்ச்சி)

 

மெய்யறம்

இல்வாழ்வியல்

43. நெடுநீ ரொழித்தல்

 

 

421.நெடுநீர் கால நீள விடுதல்;

நெடுநீர் என்பது ஒரு செயலைச் செய்வதைத் தாமதித்தல்;

  1. ஒருகணச் செயலைமற் றொன்றற் கீதல்.

மேலும் ஒரு செயலை செய்ய வேண்டிய காலத்துக்கும் அதிகமாகக் காலம் எடுத்துச் செய்தல் ஆகியவை ஆகும்.

  1. நெடுநீர் குறைபல தருமியல் புடையது.

கால தாமதம் நமது செயல்களில் பல குறைகளை ஏற்படுத்தும் இயல்பு உடையது.

  1. நெடுநீர் சிறிதுறி னடுமதூஉம் பெருகி.

கால தாமதம் நாளடைவில் ஒரு பழக்கமாக மாறிவிடும்.

  1. நெடுநீ ரறவிடிற் படுபொரு ளாகும்.

மிகுந்த கால தாமதம் அந்தச் செயலையே பயனற்றதாகச் செய்யும்.

  1. நெடுநீர் விடற்கந் நினைவையுட் கொள்ளுக;

கால தாமதம் என்ற குறையை விடுவதற்கு, விட வேண்டும் என்று ஆழமாக எண்ணுதல்;

  1. நெடுநீ ரால்வருங் கெடுதியை யுள்ளுக;

மேலும் கால தாமதத்தால் வரும் தீமைகளை எண்ணிப்பார்த்தல்;

  1. எக்கணத் தெஃதுறு மக்கணத் ததைச்செயல்.

மேலும் ஒரு செயலை எந்த சமயத்தில் செய்து முடிக்க வேண்டுமோ அந்த சமயத்தில் செய்து முடித்தல் ஆகியவற்றைச் செய்ய வேண்டும்.

  1. உறுவ பெரிதென வுற்றதை வைத்திடேல்.

வரும் வேலை சிறந்தது என்று ஏற்கனவே வந்த வேலையைச் செய்யாமல் இருக்கக் கூடாது.

  1. உற்றதைச் செய்துபி னுறுவதை யெண்ணுக.

ஏற்கனவே வந்த வேலையைச் செய்து முடித்தபின் வரப்போகும் வேலை குறித்து எண்ணுதல் வேண்டும்.

 

– அறிஞர்,  செம்மல் வ.உ.சிதம்பரனார்