(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 41(2.11) – தொடர்ச்சி)

மெய்யறம்

இல்வாழ்வியல்

42(2.12).வெண்மை யொழித்தல்

 

  1. வெண்மை யறிவினை விடுத்த தன்மை;

வெண்மை என்பது அறிவினை விடுத்த தன்மை;

  1. ஒண்மை யுடையமென் றுளத்தொடு செருக்கல்;

மேலும் ஒருவன் தான் அறிவுடையவன் என்று கர்வத்தோடு எண்ணுதல்;

  1. ஈயவேண் டியவிடத் தீயா திவறல்;

மேலும் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டிய சமயத்தில் கொடுக்காமல் கருமியாக இருத்தல்;

  1. குற்றம் பலவுஞ் சுற்றமாக் கொள்ளல்;

மேலும் தவறு செய்பவர்களை நெருங்கிய உறவினராகக் கொள்ளுதல்;

  1. கற்றில கற்றவாக் காட்டி நடித்தல்;

மேலும் தாம் படிக்காத நூல்களைப் படித்தவர் போலக் காட்டுதல்;

  1. அருமறை விடுத்துப் பெருமிறை கொள்ளல்;

மேலும் மனத்தில் வைத்துக் காக்க வேண்டிய இரகசியத்தை வெளியிட்டுத் தனக்குத் துன்பத்தைத் தேடிக்கொள்ளுதல்;

  1. செய்வன சொல்லியுஞ் செய்யா திழுக்கல்;

மேலும் ஒருவனுக்கு நன்மை தருவனவற்றைப் பிறர் எடுத்துக் கூறினாலும் செய்யத் தவறுதல்;

  1. உலகின ருளதென்ப திலதென மறுத்தல்.

மேலும் உலகில் ‘அருள்’ (இறைவன்) என்று ஒன்று இல்லை என்று மறுத்தல் ஆகியவை ஆகும்.

  1. இன்மையு ளின்மை வெண்மை யொன்றே.

இழிவானவற்றுள் இழிவானது அறிவில்லாமையே ஆகும்.

  1. ஒண்மைசா னூல்கொடு வெண்மையைக் களைக.

மேன்மை பொருந்திய நூல்களின் துணையுடன் அறிவின்மையை நீக்க வேண்டும்.

 

– அறிஞர்,  செம்மல் வ.உ.சிதம்பரனார்