[ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (13) –  தொடர்ச்சி]

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன்

(14)

3.ஒருமைப்பாட்டு உணர்வு

 

“சுடர்முகம் காக்க வேண்டும்

சோர்வின்றி உழைக்க வேண்டும்

அடலேற்று வலிமை வேண்டும்

அஞ்சிடா வாழ்வு வேண்டும்

கடலைப்போல் உள்ளம் வேண்டும்

கறைபடாக் கரங்கள் வேண்டும்

நடமாடும் தொழிற்கூடம் வேண்டும்

நல்லுழைப்பாளர் வேண்டும்

 நாடு முன்னேறுவதற்கு இந்திய நாடு முழுவதும். ஒன்றே என்ற ஒருமைப்பாட்டு உணர்வு நாட்டு மக்களிடையே வேரூன்றி வளர வேண்டும். ஏற்றமும் தாழ்வும் ஒன்றே, எந்தையர் நாடிங்கேதான் எல்லாரின் வாழ்வும் ஒன்றே என்ற வண்ணம் பரவ வேண்டும். இந்த அடிப்படையில் மகாகவி பாரதியார் கவிதையில் கனவுகள் வளர்த்தார், அதே தன்மையில் தற்காலத்துக்கு. ஏற்றபடி தன் கவிக்கனவுகளை வளர்த்திருக்கிறார் பெருங்கவிக்கோ. நடைமுறை சாத்தியமான கனவுகள் தான்.

வங்கத்தில் விளைபொருள்கள்

மையத்து நாட்டில் சேர்ப்போம்!

பொங்கிடும் இயற்கை தாயாள்

பொலிவுடைக் கேரளத்தாய்

தங்கிடும் பொருளெடுத்துத்

தலைநகர் தில்லி சேர்ப்போம்!

அங்கிங்கெனாத வாறே

அரும்பொருள் சேர்க்கைசெய்வோம்!”

இவ்வாறு மேலே மேலே அடுக்கிச் செல்கிறார்.

 ‘எல்லை ஒன்றின்றிப் பொருள்கள் சேர்ப்போம் பயன் தரு நிலையையெல்லாம் ஒருமுகமாகச் செய்வோம், உரிமைகள் சமமே என்போம்’ என்று சொல்லும் கவிஞரின் கற்பனை இனிமைகளை அழகுகளைத் தொடுகிறது கவிதை ஒட்டத்தில்.

காசுமீர் ஆப்பிள் இன்பக்

கனிச்சுவை தன்னை நம்மின்

மாசிலாக் கன்னியாகுமரி

வயல்உழை உழவன் உண்டு

பாசங்கள் பெருகச் செய்வோம்!

 

பயன்தரு கன்னி முத்தைக்

காசுமீர் உழத்தி பூண்டு

கலைஞானம் விளங்கச் செய்வோம்!

மேம்படு இராசசு தானின்

மென்னகைப் பெண்கள் செய்யும்

தேம்படு நுண்கலைகள்

திகழொளி இழைகள் தம்மை

தாம்பூண்டு கேரளத்துச்

சந்தனக் குமரிப் பெண்கள்

ஆம்பல்வாய் பூக்கக் காண்போம்

அழகுக்கே அழகு காண்போம்!”

(தொடரும்)
வல்லிக்கண்ணன்:
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்