(உ.வே.சா-வின் ‘என் சரிதம்’ நூலின் மொழிபெயர்ப்பாளர் கே.எசு.சுப்பிரமணியன் 2/3 தொடர்ச்சி)

உ.வே.சா-வின் ‘என் சரிதம்’ நூலின் மொழிபெயர்ப்பாளர் கே.எசு.சுப்பிரமணியன் 3/3

இதைத் தவிர உங்களின் சொந்தப் படைப்புகள் வேறேதும் உளதா?

சொந்தப் படைப்புகள் என்று நிறையச் சொல்ல முடியாது. ‘சிந்தனைச் சுவடுகள்’ என்கிற என் பட்டறிவு சார்ந்த படைப்பு உள்ளது. இது நான் வாழ்க்கையில் கண்ட – சந்தித்த – நிகழ்வுக் குறிப்புகளின் தொகுப்பு. ஆனாலும், என்னுடைய தமிழ்க் கட்டுரைகள் 8 தொகுதிகளாக உள்ளன. அதில் வரும் அத்தனை கட்டுரைகளும் மொழி, குமுகாயச் (சமுதாயச்) சிந்தனைகள் குறித்தவை. இவை யாவும் நான் பல பல்கலைக் கழகங்களிலும், ஆராய்ச்சி நிறுவனங்களிலும் சென்று உரையாற்றிய தலைப்புகள்.

ஆங்கிலத்தில் உங்கள் சொந்தப் படைப்பேதும் உள்ளதா?

இதுவரை இல்லை. ஆனாலும், பல்வேறு செய்தித்தாள்களில் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து ஒரு நூலாகப் பதிப்பிட எண்ணியுள்ளேன்.

தேசிய வேளாண் நிறுவனத்தில் உங்களுடைய பங்கு என்ன?

தேசிய வேளாண் நிறுவனம் திரு சி.சுப்பிரமணியன் அவர்கள் தொடங்கி வைத்தது. அது சுவையான நிகழ்வு! அவர் இந்திய முதல் பசுமைப் புரட்சியின் தந்தை எனலாம். ஆசிய வங்கியிலிருந்து பணி ஓய்வு பெற்று 1998ஆம் ஆண்டு இந்தியா திரும்பினேன். திரு சி.எசு., அவர்கள் 2000ஆம் ஆண்டு மறைந்தார். அவர் என் நெருங்கிய நண்பர் என்பதால், அந்த மூன்றாண்டுகளில் அவருடன் மிகவும் அண்மையில் இருந்தேன். அவருடன் உரையாடுவது என்பது அலாதியான இன்பம். அவருடைய 90ஆவது பிறந்த நாள் வரவிருந்ததால், அது குறித்து ஏதாகிலும் விழா வைக்கலாமா என்று கேட்டபொழுது அவர் அதை மறுத்து விட்டு, தான் இரண்டாம் பசுமைப் புரட்சியைக் குறித்துச் சிந்தித்து வருவதாகவும், அதற்காக ஏதேனும் மையம் தொடங்கலாம் என்றும் கூறினார். முதல் பசுமைப் புரட்சி என்பது ‘விதையிலிருந்து தானியம் வரை’ என்று கொண்டால் இரண்டாம் பசுமைப் புரட்சி என்பது ‘மண்ணிலிருந்து சந்தைக்கு’ என்று கொள்ளலாம். தேசிய வேளாண் நிறுவனம் அந்த வகையில் முழுமையான அமைப்பாகத் தொடங்கி வைக்கப்பட்டது.  அதன் அறங்காவலராகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.

தமிழ் மொழி – பண்பாட்டு ஆய்வு மையமான ‘மொழி’ அறக்கட்டளையிலும் அறங்காவலராகப் பணியாற்றி வருகிறீர்கள் என அறிகிறேன். அம்மையத்தின் செயல்பாடுகள், அதன் மூலமாக நீங்கள் ஆற்றி வருபவை குறித்து நேயர்களிடம் தெரிவிக்க வேண்டுகிறேன்!

முனைவர் பி.ஆர்.சுப்பிரமணியம் என்பவரை மையமாகக் கொண்டு செயல்படும் அமைப்பு ‘மொழி’. இவர் கிரியா அகராதியின் தலைமைப் பொறுப்பேற்றவர். கடந்த பத்து ஆண்டுகளாகத் தமிழ்மொழி சார்ந்த பல்வேறு வகையான ஆய்வுகளை மேற்கொள்வதே இதன் முதற்கடமை. சங்கக் காலச் சொற்களை ஆய்ந்து, அச்சொற்கள் எவ்வாறான வேறுபட்ட பொருள்களில் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து ஆயும் பணியைத் தற்போது மேற்கொண்டுள்ளது. அதன் மூலம் ஒவ்வொரு சொல்லோடு அவற்றுக்கான வெவ்வேறு பொருள்களும், அதன் பொருளில் அமைந்த ஆங்கிலச் சொற்களும் நிரல்படுத்தப்படுகின்றன. இன்னுமோர் ஆய்வாக, சொற்சேர்க்கை அகராதியும் உருவாகி வருகிறது. இதன் மூலம் தமிழில் ஒரு சொல் எவ்வாறெல்லாம் மற்ற சொற்களோடு இணையும் என்பது நிரலிடப்படுகிறது. இன்னுமொரு முதன்மையான ஆய்வு, சங்கக் காலம் முதல் சோழர்கள் காலம் வரை அமைக்கப்பட்ட கல்வெட்டுகளின் உரைகளை ஆய்ந்து அக்கல்வெட்டுகளைப் பல்வேறு வகைமைகளின் கீழ்ப் பிரிக்கும் பணியாகும். இப்பணி மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்துக்காக நிறைவேற்றப்பட்டது.

இதற்கு முன்னர் சாகித்ய பேராயத்தின்(அகாதமியின்) தமிழ் அறிவுரைக் குழு உறுப்பினராகப் பணியாற்றியுள்ளீர்கள். அப்பணியில் அடைந்த பட்டறிவு குறித்து?

ஐந்து ஆண்டுகள் அங்கே பணியாற்றினேன். பணியாற்றினேன் என்பதை விட, எவ்வகையில் அங்கு நடைபெறும் பணிகள் சீர்கெடாமல் இருக்க வேண்டுமோ அதற்கான செயல்களைச் செய்து கொண்டிருந்தேன் எனலாம்.

மொழிபெயர்ப்புகள் உண்மையிலேயே ஒரு மொழியின் வளத்தை உயர்த்தும் என நீங்கள் நினைக்கிறீர்களா?

மொழிபெயர்ப்புப் படைப்புகளைப் படித்தால் மட்டுமே இது இயலும்.

இந்திய அளவில் சாகித்திய பேராயம் (அகாதமி)தவிர வேறேதாகிலும் ஓர் அமைப்பு, இந்திய மொழிகளுக்குள்ளேயான மொழியாக்கங்களுக்கு மையமாகச் செயல்படுகின்றதா? இல்லையெனில், அப்படியான ஒரு தேவையை நீங்கள் உணர்கின்றீர்களா?

மைசூரில் உள்ள மத்திய மொழியாய்வு நிறுவனம் அத்தகைய சேவையைச் செய்து வருகிறது. அதைத் தவிர கொல்கொத்தாவில் அது போன்று வேறொரு நிறுவனம் இருப்பதாக நினைக்கிறேன். அரசு அப்படியொரு தேவையை உருவாக்கலாமெனவே நினைக்கிறேன்.

உங்களுடைய நேரம் ஒதுக்கி இந்த நேர்காணலுக்கு உதவியது குறித்து நன்றி! வணக்கம்!

வணக்கம்!

இலக்கிய வேள் சந்தர் சுப்பிரமணியன்

இலக்கிய வேல், சூலை 2017

தரவு: இ.பு.ஞானப்பிரகாசன்