(உ.வே.சா.வின் என் சரித்திரம், 4 இன் தொடர்ச்சி)

அத்தியாயம்-3
என் பாட்டனார்

என் பாட்டனாராகிய வேங்கடாசலையரென்பவர் வேங்கட நாராயணையருடைய மூத்த குமாரர். அவருக்கு ஐயாக்குட்டி ஐயரென்ற ஒரு தம்பி இருந்தார். வேங்கடாசலையருடைய மனைவி பெயர் செல்லத்தம்மாளென்பது. அந்த அம்மாளே என்னுடைய பாட்டியார்; அவருடைய தகப்பனாராகிய [1]ஓதனவனேசுவரரென்பவர் தமிழ்வித்துவான்; தாயார் கனம் கிருட்டிணைய ரென்னும் சங்கீத வித்துவானுடைய சகோதரி.

இங்ஙனம் சங்கீதமும் தமிழும் கலந்த குடும்பத்திலே பிறந்த என் பாட்டியார் நன்றாகப் பாடுவார். அவருக்குப் பல கீர்த்தனங்கள் பாடம் உண்டு. என் பாட்டனார் கடுமையாக நடத்தினாலும் பொறுமையுடன் அடங்கி நடப்பார். அவர் சாதம் பிசைந்து கையில் போட நான் சிறு பிராயத்தில் சாப்பிட்டிருக்கிறேன்.

என் பாட்டனார் காலத்தில் எங்கள் குடும்பத்தில் கடன் ஏற்பட்டமையால் அவர் தம்முடைய நிலத்தைப் போக்கியம் வைத்துப் பணம் வாங்கிப் பழைய கடனை அடைத்தார். நிலத்தை வைத்துக்கொண்டு பாதுகாத்து அதில் வரும் வருவாயினால் சுகமாக வாழ்ந்து வரும் நிலையிலிருந்த அவருக்கு அந்நிலத்தைப் போக்கியம் வைப்பதால் சீவனத்துக்குக் கசுட்டமுண்டாகுமென்று தெரியும். ஆனாலும் கடனை வைத்துக்கொண்டு உண்ணும் உணவு அவர் உடம்பில் ஒட்டவில்லை. ‘கடனில்லாச் சோறு கால் வயிறு போதும்‘ என்பது பழமொழி. ‘ஏதாவது வேலை செய்து சம்பாதிக்கலாம்; கடன் நிருப்பந்தம் மட்டும் கூடாது’ என்று எண்ணித் துணிந்து போக்கியத்துக்கு வைத்து விட்டார்.

அவருக்குத் தமிழிலும் சமசுகிருதத்திலும், கணக்கிலும் நல்ல பழக்கம் இருந்து வந்தது. ஆகையால், ‘சீவனத்துக்கு என்ன செய்வோம்!’ என்று ஏங்காமல் ஒரு பள்ளிக்கூடம் வைத்துப் பல பிள்ளைகளுக்குப் பாடஞ் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். அவரிடம் பலர் படித்தார்கள். அந்தப் பிள்ளைகளின் மூலமாகக் கிடைக்கும் வரும்படியைக் கொண்டு அவர் செட்டாகக் குடித்தனம் செய்து வந்தார். அவருக்கு அம்மணியம்மாளென்ற ஒரு பெண்ணும், வேங்கட சுப்பையர், சிரீ நிவாஸையர் என்ற இரண்டு பிள்ளைகளும் முறையே பிறந்தனர். வேங்கட சுப்பையரே என்னுடைய தந்தையார்.

என் பாட்டனாரை எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. எனக்கு அரிச்சுவடி சொல்லிக் கொடுத்தவர் அவரே. எவ்வளவோ தெய்வத் தோத்திரங்களை வாய்ப் பாடமாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அவை இப்போது மறந்து போய்விட்டன. ஆனால் அவர் கொடுத்த பலமான அடிகளை மாத்திரம் நான் மறக்க வில்லை.

அவர் உபாத்தியாயராக இருந்த நிலை எனக்கு ஞாபகத்துக்கு வரவில்லை. அவரைத் தாத்தாவாக முதிய நிலையில் பார்த்த ஞாபகந்தான் இருக்கிறது. அவர் சீவந்தராக இருக்கும்போதே என் பாட்டியார் காலஞ் சென்றுவிட்டார். அதன் பிறகு எங்கள் பாட்டனாருக்கு வேண்டிய உபசாரங்களை என்னுடைய தாயார் செய்து வந்தார்.

அவருக்கு என் தந்தையாரிடம் மிகுந்த அன்பு இருந்தது. தம்முடைய மரணகாலத்தில் அவர் அருகில் இருக்க வேண்டுமென்று விரும்பி அங்ஙனமே இருக்கச் செய்தார். இடையே சில மாதங்கள் என் தந்தையார் சிறிய தந்தையாருடன் வெளியூருக்குச் சென்றிருந்த போது என் பாட்டனார் மிகவும் கலக்க மடைந்திருந்தார். ஒவ்வொரு நாளும் என் தகப்பனாரது வரவை எதிர்பார்த்துக்கொண்டேயிருந்தார். ஒரு நாள் அவர் ஊரிலிருந்து வந்துவிட்டாரென்றும், தெருக்கோடியில் வருகிறாரென்றும் தெரிந்தபோது மனத்தினுள் இருந்த உணர்ச்சி பொங்கி வந்தது; என்னைக் கூப்பிட்டு, “சாமா, உங்கப்பா வந்துட்டாண்டா!” என்று சொல்லிவிட்டு அழ ஆரம்பித்தார். தாயைப் பிரிந்திருந்த குழந்தை மீட்டும் தாயைக் காணும்பொழுது அழுவதுபோல இருந்தது அது. அன்பு எந்த உருவத்தில் இருந்தால்தான் என்ன? பிரிவினால் பெரிய துக்கத்தை உண்டாக்குவதில் எல்லாம் ஒன்றுதான்.

முதிய பருவத்தில் தம்முடைய மனைவியை இழந்த வருத்தத்தாலும் பிள்ளையை அடிக்கடி பிரிவதனால் உண்டாகும் துயரினாலும் அவருக்கு மனக்கலக்கம் இருந்தே வந்தது. தம்மை ஒருவரும் சரியாகக் கவனிக்கவில்லை என்ற எண்ணமும் இருந்தது. அவருக்கு இன்ன இன்ன வேண்டுமென்பதை என் தாயாருக்கு அறிவிக்கும் தூதனாக நான் இருந்தேன். என் பாட்டனாருக்குத் தூது செல்லும் உத்தியோகத்தினால் எனக்கு, ‘கத்தாரிக்காய்த் தொகையல்’ என்று இளமையில் ஒரு பெயர் கிடைத்தது. அதற்குத் தாத்தாவே காரணம்.

தாத்தா காலையில் எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டுத் திண்ணையில் வெயில் காய்ந்து கொண்டு உட்கார்ந்திருப்பார். தகப்பனார் ஊரில் இல்லாத காலம் அது. என் தாயார் என்ன சமையல் செய்வதென்று தாத்தாவைக் கேட்டு வரும்படி என்னை அனுப்புவார். அக்காலத்தில் எனக்கு ஆறு பிராயம் இருக்கும்.

நான் போய், “இன்றைக்கு என்ன சமையல் செய்கிறது?” என்று கேட்பேன்.

அவர், “சமையலா. . . . ..” என்று நீட்டுவார். அவருக்கு எல்லாம் வெறுப்பாகத் தோற்றும். “சமையல் தானே? மண்ணாங்கட்டி, தெருப் புழுதி, சாம்பல் கொழுக்கட்டை” என்பார். அவருக்கு இந்த உலகத்திலே உள்ள வெறுப்பின் அடையாளம் அந்த வார்த்தைகளென்று எனக்கு அப்போது தெரியாது.

குடுகுடுவென்று ஓடிப் போய்த் தாயாரிடம் தாத்தா சொன்னதை அப்படியே ஒப்பிப்பேன். “போடா பைத்தியம்! என்ன சமையல் பண்ணுவதென்று போய்க் கேட்டு வா” என்று மீண்டும் அன்னையார் அனுப்புவார். நான் மறுபடியும் போய்த் தாத்தாவைக் கேட்பேன்.

அவர் ஆர அமர யோசித்துவிட்டு, “கத்தாரிக்காய் இருக்கா?” என்று கேட்பார். அதற்கு ஒரு தடவை ஓடிப் போய்க் கேட்டு வந்து பதில் சொல்வேன்.

“பிஞ்சா இருக்கா?” என்று அடுத்த கேள்வி போடுவார். அதற்கும் ஒருமுறை ஓடிப் போய் வருவேன்.

“அந்தக் கத்தாரிக்காயைச் சுட்டுட்டு. . .” சிறிது நிறுத்துவார்.

“தெரியறதா? அதை நன்னாச் சுட்டுத் தாளிச்சுக் கொட்டி. . .”

அவர் சொல்லும் வார்த்தைகளில் ஒவ்வொன்றுக்கும் ஊங்காரம் செய்துகொண்டே இருப்பேன். இல்லாவிட்டால் அவர் பேச்சு மேலே போகாது.

“தாளிச்சுக் கொட்டறப்போ உளுத்தம் பருப்பைப் போட்டுடுவா; அதைப் போடச் சொல்லாதே. எண்ணெயை அதிகமா விடச் சொல்லாதே”

(தொடரும்)

என் சரித்திரம், உ.வே.சா.