(உ.வே.சா.வின் என் சரித்திரம் 69 : ஒரு செய்யுள் செய் – தொடர்ச்சி)

என் சரித்திரம்
அத்தியாயம்-42

சிலேடையும் யமகமும்

பட்டீச்சுரத்தில் இருந்தபோது பிள்ளையவர்கள் இடையிடையே
கும்பகோணம் முதலிய இடங்களுக்குப் போய் வருவதுண்டு. அப்பொழுது
நானும் உடன் சென்று வருவேன். பட்டீச்சுரத்திலுள்ள ஆலயத்திற்கு ஒருநாள்
சென்று தரிசனம் செய்து வந்தோம். அக்கோயிலில் தேவி சந்நிதானத்தில் சிரீ
கோவிந்த தீட்சிதரது
பிம்பமும் அவர் பத்தினியாரது பிம்பமும் இருக்கின்றன.
அவற்றை நாங்கள் கண்டு களித்தோம். தஞ்சையிலிருந்து அரசாண்ட அச்சுதப்ப
நாயக்கரிடம் அமைச்சராக இருந்து
பல அரிய தர்மங்களைச் செய்தவர் சிரீ
கோவிந்த தீட்சிதர். அவர் பட்டீச்சுரத்து அக்கிரகாரத்தில் வசித்து வந்தனராம்.

சிலேடைப் பாட்டு

மற்றொரு நாள் சிறந்த சுப்பிரமணிய தலமாகிய சுவாமி மலைக்குச்
சென்று முருகக் கடவுளைத் தரிசனம் செய்தோம். முருகக் கடவுளுக்குரிய ஆறுபடை வீடுகளுள் ஒன்றாகிய திருவேரகமென்பது அந்தத் தலமென்று சொல்லுவர். சிரீ சாமிநாதனென்பது அங்கே எழுந்தருளிய முருகக் கடவுளின் திருநாமம். நாங்கள் அங்கே போனபோது ஆறுமுகத்தா பிள்ளையும் வந்திருந்தார்.

சுவாமி தரிசனம் செய்த பிறகு பட்டீச்சுரத்திற்குத் திரும்பினோம்;
காவிரிக் கரைக்கு வந்தபோது அங்கே பட்டுச்சாலியர்களிற் சிலர் பட்டு நூலை
சலத்தில் சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். ஆறுமுகத்தா பிள்ளை
திடீரென்று என்னைப் பார்த்து, “இந்த நூலுக்கும் நீருக்கும் சிலேடையாக ஒரு
வெண்பாப் பாடும், பார்க்கலாம். பத்து நிமிடத்தில் சொல்லவேண்டும்”
என்றார்.

“இதுவே பெரிய துன்பமாகி விடும்போலிருக்கிறதே!” என்ற
நினைவுதான் எனக்கு முதலில் எழுந்ததே ஒழிய அவர் சொல்லிய படி பாடல்
செய்ய முயல்வோம் என்று தோன்றவில்லை. அவர் அன்போடு இன்முகங்
காட்டி இன்சொல்லால் என்னிடம் விசத்தைச்சொல்லியிருப்பின் என்
மனத்தில் உற்சாகம் உண்டாகியிருக்கும். அதிகாரத் தோரணையோடு அவர்
இட்ட கட்டளைக்குப் பணிய வேண்டுமென்ற நினைவில் அந்த உற்சாகம்
ஏற்பட வழியேது?

ஆறுமுகத்தா பிள்ளை கூறியதைக் கேட்ட என் ஆசிரியர் அப்பொழுது
அவர் இயல்பை நினைந்து வருந்தினாரென்றே தோற்றியது. “என்ன தம்பீ,
திடீரென்று இவ்வளவு கடினமான விசயத்தைச் சொல்லிச் சீக்கிரத்தில் பாடச்
சொன்னால் முடியுமா? பாட்டென்றால் யோசிக்காமல் யந்திரம்போல் இருந்து
செய்வதா?” என்று கூறி விட்டுச், ‘சிலேடை அமையும் படி இரண்டு அடிகளை
நான் செய்துவிடுகிறேன். மேலே இரண்டு அடிகளை நீர் செய்து பாடலைப்
பூர்த்தி செய்யும்” என்று என்னை நோக்கிக் கூறினார். உடனே,

வெள்ளைநிறத் தாற்செயற்கை மேவியே வேறுநிறம்
கொள்ளுகையாற் றோயக் குறியினால்”

என்ற இரண்டு அடிகளைச் சென்னார். எனக்கு ஆறுமுகத்தா
பிள்ளையின் நினைவு, அவர் என்னைச் செய்யுள் செய்யச் சொன்னது எல்லாம்
மறந்து போயின. சிலேடை அமைய என் ஆசிரியர் அவ்வளவு விரைவில்
இரண்டடிகளைக் கூறியது என்னை வியப்பில் ஆழ்த்தியது. அந்த
இரண்டடிகளை ஆசிரியர் மீண்டும் சொல்லி, “மேலே இரண்டடிகளைப் பூர்த்தி
செய்யும்” என்றார். நான் சிறிது நேரம் யோசித்து அவர் கட்டளையை
நிறைவேற்றினேன். பாட்டு முழுவதும் வருமாறு:

வெள்ளைநிறத் தாற்செயற்கை மேவியே வேறுநிறம்
கொள்ளுகையாற் றோயக் குறியினால்-உள்ளவன்பில்
தாய்நோந்த வாறுமுகத் தாளாளா நீமொழிந்த
ஆய்நூலு நீருநிக ராம்”

[நூலுக்கு: வெள்ளை நிறத்தை உடைமையாலும், செய்கையினால்
வெவ்வேறு நிறத்தை அடைதலாலும், சாயத்தில் தோய்க்கின்ற அந்தச்
செயலாலும். நீருக்கு: இயல்பாக வெண்மை நிறம் உடைமையாலும்,
செயற்கையால் வேறு வேறு நிறங்களைக் கொள்ளுதலாலும். தோயமென்னும்
பெயரை உடைமையாலும். தோய் அக்குறி, தோயம் குறி என இரண்டு
வகையாகப் பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும்; தோயம் – நீர்; குறி –
பெயர். தாய் நேர்ந்த – தாயை ஒத்த.]

நான் செய்யுளை முடித்துச் சொன்னதைக் கேட்டு ஆறுமுகத்தா பிள்ளை
ஏதேனும் குற்றம் கூற ஆரம்பித்தால் என்ன செய்வதென்ற பயம் எனக்கு
இருந்தது. என் ஆசிரியர் என்னை அதிலிருந்து மீட்டார். ஆறுமுகத்தாபிள்ளை
தம் அபிப்பிராயத்தைச் சொல்வதற்கு முன்பே, “நன்றாயிருக்கிறது; ‘உள்ள
அன்பில் தாய் நேர்ந்த ஆறுமுகத் தாளாளா’ என்ற பகுதி பொருத்தமாக
உள்ளது. அந்தரங்கத்தில் தம்பிக்கு எல்லோரிடத்திலும் எவ்வளவு அன்பு
இருக்கிறது என்பதை அது விளக்குகிறது” என்று அவர் கூறினார். ஆறுமுகத்தா
பிள்ளையின் முகத்திலே புன்னகை சிறிது அரும்பியது.

“முன் இரண்டடியில் அல்லவோ செய்யுளின் அருமை இருக்கிறது?
பின்பகுதியில் என்ன நயம் இருக்கிறது?” என்று நான் எண்ணினேன். சிலேடை
பாடுவதும், செய்யுள் நயம் தெரிவதும் அப்போது முக்கியமாக இல்லை;
ஆறுமுகத்தா பிள்ளையின் திருப்தியைப் பெறுவதுதான் முக்கியமாக இருந்தது.
இந்த இரகசியத்தை ஆசிரியர் உணர்ந்து அதற்கு ஏற்றபடி நடந்து காட்டினார்.

நாங்கள் பட்டீச்சுரம் வந்து சேர்ந்தோம். பாடம் நடந்து வந்தது.
ஆறுமுகத்தா பிள்ளையின் அன்பும் அதிகாரமும் கலந்து கலந்து
வெளிப்பட்டன.

யமகப் பாட்டு

பின் ஒரு நாட் காலையில் பட்டீச்சுரம் கோயிலுக்குச் சென்றோம்.
ஆறுமுகத்தாபிள்ளையும் வந்திருந்தார். அக்கோயிலில் திருமாளிகைப்பத்தியின்
மேற்குக் கோடியில் எழுந்தருளியுள்ள விநாயகருக்கு மதவாரணப் பிள்ளையார்
என்பது திருநாமம். அம்மூர்த் தியைத் தரிசித்து நிற்கையில் ஆறுமுகத்தாபிள்ளை, “இந்த விநாயகர்
திருநாமத்தை யமகத்தில் அமைத்து ஒரு செய்யுள் சொல்லும்” என்றார். யமகம்
பாடுவது சுலபமானதன்று. யமகச் செய்யுட்களைப் படித்து அருத்தம்
தெரிந்துகொள்வதே சிரமமாக உள்ளபோது அந்நிலையில் விரைவில்
மதவாரணப் பிள்ளையார் திருநாமத்தை வைத்து யமகச் செய்யுள் ஒன்று நான்
பாடுவதென்பது சாத்தியமான காரியமா?
ஒன்றும் தோன்றாமல் ‘மிரள மிரள’
விழித்தேன். எனக்கு உண்டான வருத்தத்திற்கு ஓர் எல்லை இல்லை. வாய்
விட்டு அழவில்லையே ஒழிய என் முகம் அகத்திலுள்ள வருத்தம்
முழுவதையும் புலப்படுத்தியது. அதை என் ஆசிரியர் கவனித்தார். அவருடைய
பொறுமைக்கும் எல்லை உண்டு என்பது தெரிந்தது. ஆறுமுகத்தா பிள்ளையைப்
பார்த்தார். “என்ன தம்பீ, இந்த மாதிரி அடிக்கடி இவருக்குக் கடினமான
விசயங்களைக் கொடுத்துப் பாடச் சொல்வது தருமமா? இவர் செய்யுள் இயற்றக்
கூடிய பழக்கமுடையவரே. ஆனாலும் இப்படி வற்புறுத்தித் திடீர் திடீரென்று
சொல்லச் செய்தால் செய்யுள் வருமா? தானாகக் கனிந்து வரவேண்டியதைத்
தடியால் அடித்துக் கனியவைக்கலாமா?” என்று சொன்னபோது ஆறுமுகத்தா
பிள்ளை மேலே ஒன்றும் பேசவில்லை. தாம் செய்வது பிழை என்று அவர்
உணர்ந்தாரோ, இல்லையோ, மரியாதைக்குப் பயந்து பேசாமல் இருந்து
விட்டார்.

நாங்கள் வீடு சென்றவுடன் ஆசிரியர் தாமே மதவாரணப் பிள்ளையார்
விசயமாக யமகச் செய்யுளொன்றை இயற்றி, என்னை எழுதச் சொல்லி
ஆறுமுகத்தா பிள்ளையிடம் படித்துக் காட்டச் சொன்னார். நான் அவ்வாறே
செய்தேன்.

விரத பங்கம்

புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைகளில் சில வீடுகளில் அட்சதை
வாங்கிக் கொண்டு சமைத்து ஒரு வேளை மாத்திரம் உண்ணுதல் எங்கள்
குடும்ப வழக்கம். காலையில் குளித்து விட்டு அயலார் வீடுகளுக்கு ஈர
வத்திரத்தோடு மௌனமாகச் சென்று ஈரச் சவுக்கத்தில் அட்சதை வாங்குவதை
ஒரு விரதமாக எங்கள் முன்னோர் கொண்டிருந்தனர்.

இதனைக், ‘கோபாலம் எடுத்தல்’ என்று சொல்வார்கள். பட்டீச்சுரத்தில்
நானிருந்தபோது முதல் சனிக்கிழமையன்று கோபாலம் எடுக்கும் பொருட்டுக்
காலையில் குளித்துப் புறப்பட்டேன். ஆறுமுகத்தா பிள்ளை என்ன
விசேடமென்று விசாரித்தார். நான் விசயத்தைச் சொன்னேன். அதைக் கேட்டவுடன் அவருக்கு மிக்க கோபம் உண்டாகி விட்டது. “நீர் வைணவரா? இந்த விரதத்தை எல்லாம்
உங்களூரில் வைத்துக் கொள்ளும். இந்த எல்லைக்குள் அப்படிச் செய்யக்
கூடாது. சைவர்களாகிய எங்களோடு பழகும் உமக்கு இப்படிப் புத்தி போனது
ஆச்சரியம்” என்று கண்டிக்க ஆரம்பித்தார் அன்றியும் நான் ஆகாரம் செய்து
கொள்ளும் வீட்டிற்கு, நான் கோபாலம் எடுத்து வந்தால் உணவு அளிக்க
வேண்டாமென்று சொல்லியனுப்பிவிட்டார். நான் என்ன செய்வேன்!
பரம்பரையாக வந்த வழக்கத்தை விட்டுவிடக்கூடாதென்றும், அதனால்
பெருந்தீங்கு நேருமென்றும் நான் நம்பியிருந்தேன். எங்கள் குல தெய்வமாகிய
சிரீ வேங்கடாசலபதியை நினைந்து மேற்கொள்ளும் அந்த விரதத்திற்குப் பங்கம்
நேர்ந்தால் குடும்பத்திற்கே துன்பம் வருமே என்று அஞ்சினேன். அத்தகைய
நம்பிக்கையுள்ள குடும்பத்திற் பிறந்து வளர்ந்த எனக்கு இந்த எண்ணம் மிகவும்
பலமாக இருந்தது. அன்று மத்தியான்னம் நான் உணவு கொள்ளவே இல்லை.
தென்னந்தோப்பிற் சென்று கீழே படுத்துப் பசியினால் புரண்டேன். இத்தகைய
துன்பங்களுக்கு ஆளாக்கிய என் விதியை நொந்து கொண்டேன்.

நான் உண்ணவரவில்லை என்று தெரிந்து எனக்கு ஆகாரம் அளிக்கும்
வீட்டினர் மிகவும் வருந்தினர். அவர்கள் அங்கே வந்து என்னைக் கண்டு
வற்புறுத்தினமையால் அன்று பிற்பகலில் ஐந்து மணிக்குப் போய்
உணவருந்தினேன். புரட்டாசி மாதச் சனிக் கிழமை விரதத்திற்கு அந்த ஊரில்
விடை கொடுத்து விட்டேன்.

மாயூரத்தில் இருந்தபோது இத்தகைய துன்பம் நேரவில்லை. அன்றியும்
சவேரிநாத பிள்ளையின் பழக்கம் எனக்கு மிக்க இன்பத்தை அங்கே
உண்டாக்கும். அவர் சிரிக்கச் சிரிக்கப் பேசும் பேச்சு எவ்விதமான
வருத்தத்தையும் போக்கிவிடும். பட்டீச்சுரத்திலோ மனம் விட்டுப் பேசி
மகிழ்வதற்குரிய நண்பர் ஒருவரும் எனக்கு இல்லை.

சவேரிநாத பிள்ளை வரவு

இப்படியிருக்கையில், நல்ல வேளையாக ஆசிரியர் சவேரிநாத
பிள்ளையை அழைத்துவரும்படி மாயூரத்திற்குச் சொல்லியனுப்பினார். அவர்
பட்டீச்சுரம் வந்தபோது எனக்கு எவ்வளவு சந்தோசம் உண்டாயிற்று என்பதை
எழுதி உணர்த்துவது இயலாது. “இனிமேல் ஆறுதலாகப் பேசி மகிழலாம்”
என்று எண்ணினேன்.

சவேரிநாத பிள்ளை வந்தவுடனே ஒரு பெரிய காரியத்தைச் சாதித்தார்.
ஆறுமுகத்தா பிள்ளை வீட்டில் இரவு பன்னிரண்டு மணிக்குமேல் ஆகாரம்
செய்து வந்த வழக்கம் அவரது முயற்சியால் நின்றது. அவர் தைரியமாகப் பேசுபவர். “பட்டீச்சுரத்தில் இரவில் நெடுநேரம் பசியோடு வருந்தும்படிச் செய்த பிரம தேவன் எங்களை மரமாகப் படைக்கவில்லையே!” என்ற கருத்து அமைய ஒரு பாட்டுப் பாடி அதை வெளிப்படையாகச் சொல்லி வந்தார். ஆறுமுகத்தா பிள்ளை அதைக் கேட்டார்.
சவேரிநாத பிள்ளை அவருக்கு ஏற்றபடி விசயங்களைப் பக்குவமாக எடுத்துச்
சொல்லி அவர் மனத்தை மாற்றினார். அதுமுதல் இரவு பத்து மணிக்குள்
யாவரும் ஆகாரம் செய்துகொள்ளும் வழக்கம் உண்டாயிற்று.
பிள்ளையவர்களும் நானும் வேறு பலரும் சவேரிநாத பிள்ளையின்
தைரியத்தையும் சாதுர்யத்தையும் மெச்சினோம். “இவருக்கு ஏற்ற கோடரி
சவேரிநாத பிள்ளையே” என்று நான் எண்ணி மகிழ்ந்தேன்.

சவேரிநாத பிள்ளையின் சல்லாபத்திலும் ஆசிரியரது அன்பிலும்
பட்டீச்சுர வாசத்தில் இருந்த கசப்பு எனக்கு நீங்கியது.

(தொடரும்)
என் சரித்திரம்
உ.வே.சா.