கருத்துக் கதிர்கள் 14-15

[14. தண்ணீர்ப் பஞ்சமா? அப்படி என்றால் என்ன? 15. அயற்பெயர்ப் படங்களை ஓட்டிய மக்கள்]

  1. தண்ணீர்ப் பஞ்சமா? அப்படி என்றால் என்ன?

 “தமிழ்நாட்டில் தண்ணீர்ப்பஞ்சம் ஏற்பட்டுள்ளது போன்ற மாயையை ஏற்படுத்த வேண்டா” என மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டியுள்ளார். அவர் சொல்வது உணமைதான். அதுபோல் தண்ணீர்ப்பஞ்சம் என்பது இல்லை என மாண்புமிகு அமைச்சர் வேலுமணி பேசியுள்ளார். ஒரு முறை போதிய அளவு தண்ணீர் இருப்பதாகவும் மின்தடையால் உரிய நேரத்தில் கொண்டு சேர்க்க இயலவில்லை என்றும் பேசியுள்ளார். இதன் மூலம்  மின்தடை இருப்பதை ஒப்புக் கொண்ட துணிவைப் பாராட்ட வேண்டும்.

அஃது இருக்கட்டும். தண்ணீர்ச்சிக்கல்பற்றிப் பார்ப்போம். சென்னை முதலான நகரங்களில் உள்ள பற்றாக்குறையைச் சிக்கல் என எளிமையாகச் சொல்லக் கூடாது. எனவேதான் முதல்வர் அப்படி கூறியுள்ளாரோ என்று தெரியவில்லை. மேலும் சில இதழ்கள் சென்னையில் தண்ணீர்ப்பஞ்சம் என ஒரிசாவில் உள்ள வறட்சியைக் காட்டுகின்றனர்.  இதுபோல் வேறு சில மாநிலத் தண்ணீர்ப் பஞ்சத்தைத் தமிழ்நாட்டுப் பஞ்சத்திற்குப் படமாகச் சில இதழ்கள் வெளியிட்டுள்ளன. இதனால் தண்ணீர்ப் பஞ்ச மாயையைத்தான் உருவாக்குகின்றனர். உண்மை இல்லை என முதல்வர் எண்ணுகிறாரோ தெரியவில்லை.

எப்படி இருந்தாலும் தண்ணீருக்காகப் படும் இடர்களைத் தண்ணீர்ப்பஞ்சம் என்று சொல்ல முடியாது!

எடுத்துக்காட்டிற்காகச் சென்னையைப் பார்ப்போம். குடங்களை ஆண்கள் தோள்களிலும் பெண்கள் இடுப்புகளிலும் சுமந்து கொண்டும் மிதிவண்டிகளிலும் தங்களிடம் உள்ள பிற வண்டிகளிலும் ஏறற்றிக் கொண்டும் அலைவதைப் பார்க்க முடிகிறது. எப்படியோ எங்கிருந்தோ சில குடங்களிலாவது தண்ணீர் பிடித்துக் கொண்டு அவர்கள் திரும்புகின்றனர். அப்படிஎன்றால் இதை எப்படிப் பஞ்சம் என்று சொல்ல முடியும்! தவறுதான் எனச் சொல்லலாம் அல்லவா?!

மயிலராப்பூர் கபாலிசுவரர் கோயில் குளம் போல் பல குளங்களிலும் தண்ணீரே இல்லை. இந்தக் குளங்களின் நீரை யார் குடிக்கப் பயன்படுத்துகின்றனர். எனவே, தண்ணீர்ப் பஞ்சம் என்று சொல்ல முடியாது அல்லவா?!

நீர்நிலைகளில் தண்ணீர் இல்லை என்பது உண்மைதான். எடுத்துக்காட்டாக நாங்கள் புழுதிவாக்கம் (மடிப்பாக்கம்) ஓட்டேரிச்சாலையில் குடியுள்ளோம். தெரு முடியும் இடம்தான் ஓட்டேரி. அங்கே தண்ணீர் இல்லைதான். மடிப்பாக்கத்தில் உள்ள கார்த்திகேயபுரம் ஏரி மிகப் பெரிய நீர்நிலை. ஏரிக்கரைப் பாதையில் கடற்கரைபோல் மக்கள் நடை பயிலவும் காற்று வாங்க அமரவும் செய்வர். அங்கும் தண்ணீர் இருந்ததற்கான சுவடே தெரியவில்லை. உண்மைதான். அதனால் மக்கள் செத்தா போனார்கள்?! வேறு எங்கோ அடிகுழாயைக் கண்டுபிடித்துத் தண்ணீர் பிடித்து வரவில்லையா? அப்புறம் எப்படிப் பஞ்சம் என்று சொல்வது!

எங்கள் அடுக்ககத்தின் கிழக்கு வாயிலில் மாநாகராட்சிக் குழாயில் பிற பயன்பாட்டிற்கான தண்ணீர் வரும். அதில் சாக்கடை தண்ணீர் கலந்து வருவதால் முறையிட்டோம். உடன் நிறுத்தி நற்பணி புரிந்தனர் மாநகராட்சியினர். (இன்று மறுபடியும் நல்ல தண்ணீர் விடுவதாகக் கூறியுள்ளனர்.) சாக்கடை நீரையாவது மாநாகராட்சி தந்துள்ள பொழுது எப்படிப் பஞ்சம் என்று சொல்வது!

 எங்கள் தெருப் பகுதியில் தொட்டியில் மாநகராட்சிக் குடிநீர் ஊர்தியில் இருந்து குடிநீரை நிரப்பிச் செல்வர். இப்பொழுது அது கனவுபோல் ஆகிவிட்டது.  எல்லா இடங்களிலும் அதே நிலைதான்! அதற்காக மக்கள்மடிந்தா போயினர்?!

கடந்த ஆண்டில் தண்ணீர் தனியாரிடம் இருந்து வாங்கும் பொழுது 1000 கன  உரி(Litre) தண்ணீரின் கட்டணம் 300 உரூபாய். இப்பொழுது 2 நாளில் தருகிறோம்; 3 நாளில் தருகிறோம் எனச் சொல்லி  எப்படியும் ஒரு வாரத்தில் தந்து விடுகின்றனர். கட்டணம்தான் கேட்கும் பொழுது 800 உரூபா எனச் சொல்லிக் கொடுக்கும் பொழுது 1200 உரூபாய் வாங்கி விடுகின்றனர். எப்படியோ நான்கு மடங்கு கட்டணம் செலுத்தினாலும் 1 வாரத்தில் தண்ணீர் வந்து விடுகிறது அல்லவா? அப்புறம் எப்படிப் பஞ்சம் என்று சொல்வது?!  சென்னை வாசிகளுக்குத் தண்ணீர்ப் பஞ்சம் என்றால் என்னவென்றே தெரியாது. இதுபோல்தான் பிற மாவட்டங்களிலும் நிலைமை.  

பல விடுதிகள் மூடப்பட்டு வருதல், பள்ளிகளில் நேரங்கள் மாற்றம், உணவகங்களில் உணவுக் குறைப்பு சிக்கல் போன்ற பிறவும் தண்ணீர்ப் பஞ்சத்தால் என்று யார் சொன்னது? தொடர்ந்து உழைத்தவர்கள், ஓய்வு வேண்டி இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கின்றனர். வேறு ஒன்றுமில்லை!

எனவே, அரசை யாரும் குறை கூற வேண்டா!

 – இலக்குவனார் திருவள்ளுவன்

 15. அயற்பெயர்ப் படங்களை ஓட்டிய மக்கள்

தமிழ்ப்பெயர் சூட்டும் படங்களுக்கு அரசு நிதியுதவி செய்தபொழுது பிறமொழிப்பெயர்களைக் கூடத் தமிழாக மாற்றிப்பணம் வாங்கிய திரைத்துறையினர்,  பணத்திற்காக முதலில் சூட்டிய பெயரை அடைப்பிற்குள் இட்டுவிட்டுத் தமிழ்ப்பெயர் சூட்டியே விளம்பரப்படுத்திய திரைத்துறையினர், இப்பொழுது பிற மொழிப்பெயர்களைச் சூட்டுவதில் சிறிதும் வெட்கம் கொள்ள வில்லை. எனினும் இந்தப் போக்கை மக்கள் எண்ணினால் மாற்ற முடியும். அதற்கான சூழல் வந்துள்ளது. சிவ.கார்த்திகேயன் வெற்றிப்பட நாயகனாகவும் வெற்றிப்படஆக்குநராகவும் புகழ்பெற்று விளங்குகிறார். அவர் நட்சத்திர நாயகி நயன்தாராவுடன் நடித்த படத்திற்கு ஆங்கிலப் பெயரைச் (Mr.Local ) சூட்டினார். மக்களுக்கு அந்தப் படம் மொழிமாற்றுப் படம் போல் தோன்றியது. எனவே, அவரே தோல்விப்படம் என ஒப்புக்கொள்ளும் வகையில் மக்கள் அதனைத் திரைஅரங்குகளில் இருந்து ஓட வைத்தனர்.

அதுபோல், சூரியா நடித்த படத்தின் பெயர் ஆங்கிலத் தலைப்பெழுத்துகளில் (NGK) சூட்டப்பட்டது. இந்தப் படத்தையும் மக்கள் விரட்டி அடித்துத் தலையில் துண்டுபோட்டுக் கொள்ள வைத்து விட்டனர். இந்த நிலை தொடர்ந்தால்  அயல்மொழிப்பெயர் தாங்கிய படங்கள் மண்ணைக் கெளவும். இதனால் அவர்களுக்கு இழப்பு வருவதுடன் திரைத்துறையில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கானவர்களின் குடும்பத்தினரும் துன்புறுவர்.  இனிமேலாவது திரைத் துறையினர் நல்ல தமிழ்ப்பெயர்களையே சூட்ட வேண்டுகிறோம்.

இலக்குவனார் திருவள்ளுவன்