kalaignar06

கலைஞருக்குக் கேடு விளைவிக்க சிலர் முயற்சி.

அவருக்குப் பாதுகாப்பு தேவை!

  தனக்குப்பின் குடும்பத்தில் யார் எனக் குடும்பத்தலைவர் என்ற முறையில்  கலைஞர் கருணாநிதியால்  கூற இயலும். ஆனால் கட்சியில் தனக்குப்பின் யார் எனக்  கூற முடியாதே! சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய ஒருவரை அவர் எப்படி அறிவிக்க இயலும்? “தி.மு.க., ஒன்றும் சங்கர மடம் அல்ல. கட்சிப் பதவிக்கு யார் வர வேண்டும் என்பதைப் பொதுக் குழு, செயற்குழுதான் முடிவு செய்யும்’  என்பதல்லவா கலைஞர் கருணாநிதியின்  அழுத்தமான பேச்சு. எனினும் தி.மு.க. பொருளாளராக இருந்துகொண்டே தலைவர்போல் செயல்படும் திறம் மிக்க தாலின் தன் சார்பாளர்களையே பெரும்பாலும் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளதாலும் அவரது ஆதரவாளர்கள் அவரே அடுத்த முதல்வர்  எனப் பரப்புரை மேற்கொள்வதாலும் மூத்ததலைவர்களிடையே அச்சம் உள்ளதாகக் கூறுகின்றனர். ஏனெனில் கலைஞருக்கு அடுத்து யார் என்பது கலைஞருக்குப்பின் முடிவெடுக்க வேண்டிய ஒன்றே தவிர அவர் வாழ்நாளில் அல்ல என்பதே மூத்த தலைவர்கள்,  கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தினர் கருத்தாகும்.

  மாற்று அரசியல் பக்கம் மக்கள் பார்வை செலுத்துவதால், அதிமுக,  திமுக தோல்வி முகத்தைச்  சந்தித்து வருவதை அவ்விரு கட்சியினரும் உணர்ந்து வருகின்றனர். செயலலிதா, சென்னையில் மீளவும்  24 இடங்களில் பரப்புரை மேற்கொண்டுள்ளதே தேர்தல் நிலவரத்தை உணர்ந்துள்ளமைக்குச் சான்றாகும். இரக்கத்தின் அடிப்படையில் வாக்குகளை அள்ளலாமா என இரு கட்சியினரும் எண்ணுவதாகத் தெரிகின்றது. அப்படி எதுவும் கேடு விளைக்கக்கூடும் என்ற அச்சம் முதுபெரும் தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு வந்திருக்க வேண்டும். எனவே, அவர், “இயற்கையாக எனக்கு ஏதாவது நேர்ந்தால்தான் மு.க.தாலின் முதலமைச்சர் ஆக முடியும்” என ஆங்கில ஊடகத்துக்கு அளித்துள்ள  செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

  தனக்குப்பின் தாலின் என அவர் கூறவில்லை. ஏனெனில், பொதுக்குழு, செயற்குழு கூடி முடிவெடுத்தால் தாலின்தான் தலைவர் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். இதனால் தி.மு.க. உடைந்தால்கூட பிறக்கும் புதிய அணியும் கலைஞரின் குடும்பத்தினர் கட்டுப்பாட்டில்தான் இருக்கும் என்றும் அவருக்குத் தெரியும். எனவே, அவ்வாறு அவர்  கூறவில்லை.

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை

இகல்வெல்லல் யார்க்கும் அரிது. (திருவள்ளுவர், திருக்குறள் 647)

என்பதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்வன்மை மிக்கவர். இத்தகைய  சொல்லாற்றல் மிக்கவர், பொடிவைத்துப்பேசுவதில் வல்லவர், “எனக்கு இயற்கையாக ஏதாவது நேர்ந்தால்தான்” என்று கூறுவதற்கு என்ன காரணம்?  அவருக்குக் கேடு விளைவித்து மக்களிடம் இரக்கம் ஈட்டி ஆட்சியைப்பிடிக்கலாம் எனச் சிலர் எண்ணலாம் அல்லவா? தனக்கு ஏதும் செயற்கையாகக்  கேடுவிளைவிக்க வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து அதனால் பயனிருக்காது என்பதை உணர்த்துவதற்காகவும் அம்முயற்சியைத் தடுப்பதற்காகவும்தானே அவ்வாறு கூறியிருக்க வேண்டும்.  தான் நூறாண்டு வாழ்வேன்  எனக்கூறியுள்ள கலைஞர் கருணாநிதி,    “இயற்கையாக  எனக்கு ஏதாவது நேர்ந்தால்தான்”  எனக் கூறுவதை எளிதில் புறம் தள்ள முடியாது. எனவே, தமிழக அரசின் காவல் துறை அவருக்குக் கூடுதல் பாதுகாப்பு தரவேண்டும். உளவுத்துறை விழிப்புடன் இருந்து அவ்வாறு கேடு செய்ய திட்டமிடுவோர் முயற்சியை  முறியடிக்க வேண்டும்.

  தமிழீழப் படுகொலை  தொடர்பில் அவர்மீதுள்ள களங்கம் மாறாதது. என்றாலும் அதற்கு முந்தைய அவரது மன்பதை விழிப்புணர்வுகளும் இலக்கியப்பணிகளும் மறக்கத்தக்கன அல்ல. எனவே, அவர் நூறாண்டு வாழ்ந்து இலக்கியப்பணியாற்ற வேண்டும்! எனவே, அவரது குடும்பத்தினரும் கட்சிப்பொறுப்பாளர்களும் தமிழகக்காவல்துறையும் விழிப்புடன் செயல்பட்டு அவருக்குப்பாதுகாப்பு வழங்க வேண்டும்.

ThiruvalluvanVanakkam

இலக்குவனார் திருவள்ளுவன்