தமிழ்த்தேசியமும் தந்தை பெரியாரும்

தமிழ்நாட்டில் பொருளற்று, இன்னும் சொன்னால், அதனுடைய உண்மையான சித்தாந்தங்களை உணராமல், அதற்கான எந்த அருப்பணிப்பு உணர்வும் இல்லாமல், அதற்கான தத்துவார்த்த பின்புலங்கள் எதுவும் தெரியாமல், பல்வேறு சிந்தனையற்ற மனிதர் களின் கையில் சிக்கிக் கொண்டிருக்கின்ற ஒரு வார்த்தை இருக்குமானால், அதற்குப் பெயர்தான் தமிழ்த் தேசியம்.

தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை:

தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை திராவிட இயக்கம் என்கின்ற சொல்லுக்குள் இருக்கிறது. தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை தந்தை பெரியார் என் கின்ற வார்த்தைக்குள் இருக்கிறது; அவருடைய வாழ்க் கைக்குள் இருக்கிறது.

தமிழ்த் தேசியத்தினுடைய பிதாமகர்கள் என்று இன்றைக்குத் தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக் கொண்டிருக்கின்ற பழைய இராசராச சோழன்கள், பழைய பலவேட்டு அறிஞர்கள், தங்களின் இழந்த சமீன்களை மீண்டும் மீட்பதற்காக இற்றுப்போன தங்களுடைய சரிகைக் குல்லாக்களோடு எத்தனை நாடகங்களைப் போட்டாலும், தமிழ்த் தேசியத்தினுடைய இயக்கம் என்பதை மீட்டெடுக்க முடியாது. ஏனென்றால், ஏற்கெனவே தமிழ்நாட்டில், 1900-இன் தொடக்கக் காலத்தில் தமிழ்த் தேசிய இயக்கம் என்பது தொடங்கப் பட்டு விட்டது. அதற்குத் திராவிட இயக்கம் என்பதுதான் பெயர்.

தமிழ் என்பதும், திராவிடம் என்பதும் ஒரே பொருள் தருகின்ற இரு வேறு வார்த்தைகள்

பெரியாருடைய எழுத்துகளை, பெரியாருடைய பேச்சுகளை, பெரியார் நடத்திய பத்திரிகைகளை, பெரியாருடைய கட்டுரைகளை உண்மையில் கண் இருந்தவன் படித்திருப்பானேயானால், அவனுக்குத் தெரியும், தமிழ் என்பதும், திராவிடம் என்பதும் ஒரே பொருள் தருகின்ற இரு வேறு வார்த்தைகள் என்பதுதான்.

பெரியார் அவருடைய தொடக்கக் காலத்தில் எழுதிய அனைத்துக் கட்டுரைகளிலும், ‘திராவிட’ என்று எழுதினால், ஓர் அடைப்புக் குறியில் ‘தமிழ்’ என்று எழுதுவார். ஒரு கட்டுரையில், ‘தமிழ்’ என்று எழுதினால், அதற்கு அடுத்து அடைப்புக் குறியில் ‘திராவிட’ என்று எழுதுவார்.

மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர்:

அப்படியானால், தமிழ் என்பதும், திராவிடம் என்பதும் ஒரே பொருளில் அவரால் சொல்லப்பட்டது. அவரால் சொல்லப்பட்டது என்றால், தந்தை பெரியார் சொல்வதற்காக நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இந்த அதிகப்பிரசங்கிகள் சொல்வார்களேயானால், தமிழ்நாட்டு வரலாற்றில் மிகப் பெரிய அறிஞன் என்று நாம் இன்றளவும் கொண்டாடக்கூடிய, இன்னும் நூறாண்டுகள் ஆனாலும், இப்படி ஒரு தமிழறிஞன் பிறந்து வர முடியாது என்கின்ற பெருமை ஒரு தமிழறிஞருக்கு இருக்குமானால், அது மொழிஞாயிறு தேவநேய பாவாணர் அவர்கள்தான். பாவாணாருடைய கருத்தும் அதுதான், தமிழ் என்பதும், திராவிடம் என்பதும் ஒரு பொருள் தரக்கூடிய இரு வேறு சொற்கள் என்பதுதான்.

பெரியாரைப் படிக்காதவர்கள், நீங்கள் பெரியாரைக் கூட படிக்கவேண்டா; இன்றைக்குத் தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் முதலில் மொழி ஞாயிறு தேவநேய பாவாணருடைய ‘திராவிடத்தாய்’ என்ற நூலையும், அவருடைய ‘ஒப்பியன் மொழி நூல்’ என்ற நூலையும் படித்துவிட்டு, அதற்குப் பிறகு நீங்கள் தமிழ்த் தேசியம் பேசுங்கள்.

பாவாணர் சொல்வது என்னவென்றால்,

‘‘இக்கால மொழியியலும், அரசியலும்பற்றித் தமிழும், அதனின்று திரிந்த திராவிடமும் வேறு பிரிந்து நிற்பினும் பழங்காலத்தில் ‘திராவிடம்’ என்றதெல்லாம் தமிழே. திராவிடம் என்று திரிந்தது தமிழ் என்னும் சொல்லே” இது ஒப்பியன் மொழி நூல் என்ற நூலில், 15 ஆம் பக்கத்தில் எழுதியவர் தந்தை பெரியார் அல்ல, பாவாணர்தான் எழுதியிருக்கிறார்.

‘தமிழ் என்பதுதான் – தமிழம் என்றும் – த்ரமிள என்றும் – திரமிட என்றும்- திரவிட என்றும் – த்ராவிட என்றும் – இறுதியில் திராவிடம்’ என்று உச்சரிக்கப்பட்டது’ என்று எழுதியவர் பாவாணர் அவர்கள்.

ஆரியம் என்பதற்கு எது எதிர் என்றால், திராவிடம்!

எனவே, பெரியார் அந்தச் சொல்லை இனச் சொல்லாகவோ மொழிச் சொல்லாகவோ ‘திராவிடம்’ என்கின்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை. அதில் முதலில் நமக்கே ஒரு தெளிவு வேண்டும்.

‘திராவிட இனம்’ என்று பெரியார் தன்னை அழைத்துக் கொள்ளவில்லை. திராவிட மொழிக் கூறுகளைச் சேர்ந்த நாம், திராவிட மொழி பேசுபவர்கள் என்பதற்காகவும் சொல்லவில்லை. திராவிடம் என்பதை நான் ஒரு அரசியல் சொல்லாகப் பயன்படுத்துகிறேன் என்று பெரியார் எழுதியிருக்கிறார்.

அவர் திராவிடம் என்கின்ற வார்த்தையைத் தேர்ந்தெடுக்கின்ற காலக்கட்டத்தில் அவர் சொன்னது, ‘‘ஆரியம் என்பதற்கு எது எதிர் என்றால், திராவிடம். அதனால், நான் திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டுகிறேன். ‘திராவிடர் கழகம்’ என்று நான் பெயர் வைக்காமல் போயிருந்தால், வேறு என்ன பெயர் வைத்திருப்பேன் என்று சொன்னால், சூத்திரர் கழகம் என்று வைத் திருப்பேன்” என்றார். இதுதான் தந்தை பெரியார்.

1956 ஆம் ஆண்டுகளில் மொழிவாரி மாகாணங்கள் பிரிந்த பிறகு, தமிழ்நாடு சென்னை மாகாணமாக உருவாகிய பிறகு, கன்னடமும், தெலுங்கும், மலையாளமும் பிரிந்த பிறகு, இப்பொழுதாவது நீங்கள் தமிழர் கழகம் என்று சொல்லக்கூடாதா? என்று கேட்டபொழுது, 1955 ஆம் ஆண்டு இறுதிக் காலகட்டத்தில், நவம்பர் அல்லது திசம்பரில் அவர் எழுதிய தலையங்கத்தில், ‘‘ஆரியனுக்கு, திராவிடன் என்று சொன்னவுடன் எவ்வளவுக் கோபம் வருகிறதோ, அவ்வளவுக் கோபம் தமிழன் என்ற வார்த்தையைச் சொல்லும்பொழுது எப்பொழுது வருமோ, அப்போது நான் தமிழர் கழகம் என்று வேண்டுமானால் பெயர் சூட்டத் தயாராக இருக்கிறேன்” என்கிறார்.

அப்படியானால், தன்னுடைய அரசியல் தத்துவத்திற்கு எந்த வார்த்தை சரியான வார்த்தையாக இருக்கும் என்று அவர் நினைத்தாரோ, அந்த வார்த்தையை அவர் தேர்ந்தெடுத்து திராவிடர் கழகம் என்று பயன்படுத்தினார்.

தனித்தமிழ் தந்தை மறைமலையடிகள்:

இந்த நோக்கத்தை, பெரியாருடைய நோக்கத்தை மிகச் சரியாகப் புரிந்துகொண்டவர் – தனித்தமிழ் தந்தை என்று சொல்லப்படுகின்ற மறைமலையடிகள் சொன்னார், 1940-களில் அவர் எழுதிய ஒரு கட்டுரையில் அல்லது 1948 இல் தந்தை பெரியார் கூட்டிய இந்தி எதிர்ப்பு மாநாட்டில் கலந்துகொண்டு மறைமலையடிகள் பேசும்போது சொன்னார்,

‘‘நான் 25, 30 ஆண்டுகளாக எழுதினேன், ஆரியத்திற்கு எதிராக. என்னை அழிப்பதற்கு ஆரியம் பல்வேறு வழிகளில் முயன்றது; பல்வேறு தமிழறிஞர்களும் அந்தக் காரியத்தை செய்தார்கள். ஆனால், பெரியாருடைய இயக்கம் என்று வந்ததோ, அதற்குப் பிறகுதான் என்னுடைய நூல்கள் அதிகமாக விற்க ஆரம்பித்தன. என்னுடைய இயக்கத்தை, என்னுடைய நூல்களை, என்னுடைய சிந்தனையை மிக அதிகமாகப் பரப்பியவர்கள் பெரியார் இயக்கத்தவர்களே” என்று சொன்னது தனித்தமிழ் தந்தை மறைமலையடிகள்.

இன்று தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் தமிழ் அறிஞர்களா? தமிழ் உணர்ச்சி உள்ளவர்களா?

மறைமலையடிகளைவிட, இன்று தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் தமிழ் அறிஞர்களா? தமிழ் உணர்ச்சி உள்ளவர்களா? அவரை விட இவர்கள் தமிழ்ப் பற்றாளர்களா?

அதேபோல, மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் தமிழ்த் தொண்டாற்றிய 27 பேரின் பட்டியலை சொல்லும்போது, தொல்காப்பியர், திருவள்ளுவரில் தொடங்கி, 11 ஆவது இடத்தில் தந்தை பெரியாரைக் குறிப்பிடுகிறார், தமிழ்த் தொண்டாற்றியவர்கள் யார்? என்பதில்.

27 பேரை வரிசைப்படுத்துவதில் 11 ஆவது இடத்தை பெரியாருக்குத் தருகிறார் பாவாணர் என்றால், இன்றைக்குத் தமிழ்த் தேசியம் பேசுபவர்களைவிட, பாவணர் என்பவர் தந்தை பெரியாரை அறியாதவரா?

தமிழ் அறிஞர் இலக்குவனார் :

மார்க்சுக்கு ஒரு லெனின் கிடைத்ததைப்போல, வள்ளுவருக்குக் கிடைத்தவர்தான் தந்தை பெரியார்

அதேபோல், தமிழ்நாட்டில் தமிழ்ப் பாதுகாப்புக் கழகத்தை உருவாக்கி, தமிழ்நாட்டில் திருக்குறளை வீதிதோறும், ஊர்தோறும் திருவள்ளுவர் மன்றங்களை உருவாக்கி வளர்த்தெடுத்தவர் தமிழ் அறிஞர் இலக்குவனார் அவர்கள்.

மார்க்சுக்கு ஒரு லெனின் கிடைத்ததைப்போல, வள்ளுவருக்குக் கிடைத்தவர்தான் தந்தை பெரியார் என்று சொன்னவர் இலக்குவனார்.

இலக்குவனாரைவிட, இன்றைக்குத் தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் தமிழ்ப் பற்றாளர்களா?

பெரியார் தன்னுடைய வாழ்நாளில் பேசிய தமிழ்த் தேசிய கருத்துகளுக்கு இணையாக, நான் கிட்டத்தட்ட ஒரு 5, 6 பெரியாருடைய வரிகளை மட்டும் சொல்கின்றேன். தமிழ்த் தேசியத்தினுடைய பிதாமகர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் யாராவது இந்த வார்த்தைகளை உச்சரித்து இருக்கிறார்களா? அல்லது உச்சரிப்பதற்கான முதுகெலும்பாவது அந்தத் தமிழ்த் தேசியவாதிகளுக்கு இருந்திருக்கின்றதா என்பதை வரலாற்றினுடைய பக்கத்தில் இருந்து நாம் யோசித்தாக வேண்டும்.

தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய வாழ்நாளில் ஏராளமான கருத்துகளை, இந்தத் தமிழ் உணர்வுக்கு, தமிழ் இனத்திற்கு, தமிழ்நாட்டினுடைய விடுதலைக்குப் பேசினார்கள் என்று சொன்னால், அதை அடுக்குவதற் கான கால நேரம் என்பது இப்போதைக்கு இல்லை.

தந்தை பெரியாரைவிட தமிழ்த் தேசியவாதி இந்த நாட்டில் இருந்திருக்க முடியுமா?

ஆனால், ஒரே ஒரு வார்த்தை, 1955 இல் பெரியார் எழுதுகிறார்:

தமிழ், தமிழ்நாடு என்று பெயர்கூட இந்த நாட்டிற்கு இருக்க இடமில்லாத நிலை ஏற்பட்டுவிடுமானால், என்னுடைய வாழ்வு எதற்காக இருக்கவேண்டும்? என்று எழுதிய தந்தை பெரியாரைவிட தமிழ்த் தேசியவாதி இந்த நாட்டில் இருந்திருக்க முடியுமா?

தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால், தமிழ்நாட்டையும், தமிழர் வீரத்தையும், கலையையும், நாகரிகத்தையும் மறந்தான். தமிழன் தன்னை இந்து என்று கருதியதால், தனது மானத்தையும், ஞானத்தையும், பகுத்தறிவையும், உரிமையும் இழந்தான் என்று 1939 இல் பேசியவர் தலைவர் தந்தை பெரியார் அவர்கள். இதைவிட தமிழ்த் தேசியத்திற்கான கூற்று வேறு என்ன வேண்டும்?

திராவிடர் கழகத்திற்குத் திருக்குறள்தான் வழிகாட்டி, வேறு நூல் இல்லை” என்று 1948 இல் சொன்னவர் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.

தந்தை பெரியாரின் மூன்று முக்கிய கொள்கைகள்!

‘‘திராவிடர் கழகம் எனது தலைமைக்கு வந்த பிறகு, மூன்று முக்கிய கொள்கைகளை சொல்லி வருகிறேன்.

மனிதன் இழிவு நீங்க வேண்டும்.

எனது தமிழ்நாடு தனியாக ஆகவேண்டும்.

அதுவரை வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டும்.

நமக்கு ஆகவேண்டியதெல்லாம் இந்த மூன்று கொள்கைகள் வெற்றியடைய வேண்டும் என்பதே” என்று 1951 இல் சொன்ன தந்தை பெரியாரே, தமிழ்த் தேசியத்தினுடைய மூலவர்.

‘‘நாம் திராவிடன் அல்லது தமிழன் என்ற பெயரை வைத்துக்கொள்ளாமல், வேறு பெயர் வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், ‘சூத்திரர் கழகம்’ என்றுதானே வைத்துக் கொள்ளவேண்டும்” என்று 1959 இல் சொன்னவர் அவரே!

‘‘இந்தி மொழியால் தமிழ்க் கெட்டுவிடும் என்று நான் வருத்தப்படவில்லை. இந்தி மொழியால் மட்டுமல்ல, வேறு எந்த மொழியாலும் நம் மொழி கெட்டுவிடாது. ஆனால், நான் இந்தி மொழியை எதிர்க்கக் காரணம், இந்தியால் நம்முடைய கலாச்சாரம் அடியோடு அழிந்து விடும். இப்போதே வடமொழி நாட்டில் புகுந்து, நம்முடைய கலாச்சாரம் எவ்வளவோ கெட்டுவிட்டது. அதற்காக நாம் இந்தியை எதிர்த்துப் போராடவேண்டியது இருக்கிறது” என்று, 1948 இல் இந்தித் திணிப்பை தமிழர்களின் மீது நடந்த பண்பாட்டுப் படையெடுப்பாக உருவகப்படுத்தியதைப்போல, ஒரு தமிழ்த் தேசிய சிந்தனை என்பது இருந்திருக்க முடியுமா?

‘‘உண்மையைச் சொல்லவேண்டுமானால், ஆரியம் ‘‘சமயத்” துறையில் ஆதிக்கம் பெற்றதாலும், ஆங்கிலம் அரசியல் முதலிய துறைகளில் ஆதிக்கம் பெற்றதாலேயே, தமிழர்களுக்கு இன உணர்ச்சி பலப்படவில்லை, குறைந்துவிட்டது” என்று, தனது இறப்புக்கு ஓராண்டிற்கு முன்பு 1972 இல் சொன்னவர் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.

தமிழிலிருந்து சைவத்தையும், ஆரியத்தையும் போக்கிவிட்டால்,

நமக்குப் பழந்தமிழ் கிடைத்துவிடும்

தமிழும் ஒரு காலத்தில் உயர்ந்த மொழியாகத்தான் இருந்தது. இன்று அது வடமொழிக் கலப்பால், இடது கை போல பிற்படுத்தப்பட்டு விட்டது. இந்நோய்க்குக் காரணம், மதச்சார்புடையோரிடம் தமிழ் மொழி சிக்கிக் கொண்டதுதான். தமிழிலிருந்து சைவத்தையும், ஆரியத் தையும் போக்கிவிட்டால், நம்மை அறியாமலேயே நமக்குப் பழந்தமிழ் கிடைத்துவிடும் என்று சொல்லி, தனித்தமிழ் இயக்கத்தினுடைய சிந்தனையை தனது சிந்தனையாக சொன்னவர்தான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.

பெரியார் ஏற்றுக்கொண்ட இரண்டே இரண்டு அறிவாளிகள் திருவள்ளுவரும், ஒளவையாரும்தான்

‘‘நம்முடைய பண்டைய திராவிட மக்களிடையே இரண்டு பெரியார்களைக் குறிப்பிடவேண்டுமானால், ஆண்களில் திருவள்ளுவரையும், பெண்களில் அவ்வையாரையும்தான் நாம் சிறந்த அறிவாளிகளாகச் சொல்ல முடியும்” என்று, பெரியார் ஏற்றுக்கொண்ட இரண்டே இரண்டு அறிவாளிகள் திருவள்ளுவரும், அவ்வையாரும்தான்.

‘‘மொழி உணர்ச்சியில்லாதவர்களுக்கு நாட்டு உணர்ச்சியோ, நாட்டு நினைப்போ எப்படி வரும்? நம் பிற்காலச் சந்ததியினருக்காவது சிறிது நாட்டு உணர்ச்சி ஏற்படும்படிச் செய்யவேண்டுமானால், மொழி உணர்ச்சி சிறிதாவது இருந்தால்தான் முடியும். அன்றியும், சமுதாய இன உணர்ச்சி சிறிதாவது இருக்கவேண்டுமானாலும், மொழி உணர்ச்சி இருந்தால்தான் முடியும்” என்று தன்னுடைய மரணத்திற்கு ஓராண்டிற்கு முன்பு சொன்னவர் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.

பெரியாருடைய தமிழ்த் தேசிய சிந்தனைகளை மீண்டும் நாம் புதுப்பித்து…

இப்படி தமிழ்த் தேசியத்தினுடைய அனைத்துக் கூறுகளுக்கும், தன்னுடைய சிந்தனையில் இடம் தந்தவர்தான் தந்தை பெரியார் அவர்கள்.

தமிழ்த் தேசியத்தினுடைய ஆட்களினுடைய பரப்புரையில், நம்மவர்களுக்கே ஒரு மயக்கம் ஏற்பட்டுவிட்டது; ஒருவேளை பெரியார், தமிழுக்கு எதிராக இருந்தாரோ, தமிழினத்திற்கு எதிராக இருந்தாரோ என்று, சில இளைஞர்களுக்கு அதுபோன்ற மயக்கங்கள் ஏற்படுகின்ற சூழ்நிலையில், பெரியாருடைய தமிழ்த் தேசிய சிந்தனைகளை மீண்டும் நாம் புதுப்பித்து நாடெங்கும் பரப்புரை செய்யவேண்டிய காலக்கட்டமாக இந்தக் காலக்கட்டம் அமைந்திருக்கின்றது.

தமிழ்த் தேசியத்தினுடைய கூறுகளை, பெரியாரிடம் தமிழ்த் தேசியக் கூறுகள் எத்தனை இருக்கின்றன என்பதை நான் பட்டியலிட்டபோது, கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சிந்தனைகள், தமிழருடைய இனப் பெருமை, தமிழ்நாட்டினுடைய பெருமை, தமிழர்களின் கடந்த காலப் பெருமை, தமிழ்ப் பெருமை, தமிழுக்கு முதன்மை, நாட்டின் பெயர் தமிழ்நாடு, தனித்தமிழ்நாடு, வடமாநிலத்தவர் எதிர்ப்பு, மலையாள, ஆந்திரர், கன்னடர் எதிர்ப்பு, இந்திய அரசு எதிர்ப்பு, தமிழே ஆட்சி மொழி, தமிழே பயிற்று மொழி, தமிழே வழிபாட்டு மொழி, தமிழ்நாட்டை தமிழனே ஆள வேண்டும், தமிழ்நாட்டில் தமிழனே வாழவேண்டும், சமசுகிருத எதிர்ப்பு, மார்வாடி எதிர்ப்பு, ஈழத் தமிழர் நலன், இந்தித் திணிப்பு எதிர்ப்பு, மொழிவாரி மாகாண ஆதரவு, தட்சணப் பிரதேச எதிர்ப்பு, வடவர் சுரண்டல் எதிர்ப்பு, திருக்குறள் பரப்புதல், மூடப் பண்டிகைகளுக்கு எதிர்ப்பு, வடவர் பழக்க வழக்கங்களுக்கு எதிர்ப்பு, தமிழர் விழாக்களுக்கு ஆதரவு, பொங்கல் திருநாளே தமிழர் திருநாள், பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, பார்ப்பனிய கொள்கை எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, தமிழ் தொழி லாளர் நலன், தமிழ் முதலாளிகள் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலன், தமிழர்களுக்குள் பிரிவினை இல்லை, சாதி எதிர்ப்புப் போராட்டங்கள், தமிழர் ஒற்றுமைக்கு வலியுறுத்தல், தமிழர் என்ற சொல்லாடல் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்

(22.9.2019 அன்று அமெரிக்கத் தலைநகர் வாசிங்டன் மேரிலாந்தில், அமெரிக்க மனிதநேயர் சங்கம் நடத்திய மாநாட்டில் ஊடகவியலாளர் ப.திருமாவேலன் ஆற்றிய உரை எழுத்து வடிவத்தில்)

நன்றி – மின்னம்பலம்