தமிழர் நாகரிகத்தைப் பற்றிப் பல அறிஞர் கொண்ட புதுமையான கருத்துகள் வியப்பைத் தருவனவாகும். மிகப் பழைய காலத்திலும் திராவிடர்(தமிழர்) நாகரிகம் ஆரியர் நாகரிகத்துடன் கலந்திருந்தது எனக் கொண்டு அதற்குச் சான்று காட்ட முயன்றனர் இவர். பார்ப்பனரின் ஆதிக்கத்தனால் திராவிடருக்கு(தமிழர்) உரிய பண்பாடு ஆரியருக்குரிய பண்பாட்டோடு தொடர்பு படுத்தப்பட்டது. இக்காரணத்தால் மிகவும் பழைய தென்னாட்டு நாகரிகத்தை விளங்கிக் கொள்வது மிகவும் கடினமாகிவிட்டது. எனினும் பழங்காலத்தில் தென்னாட்டவரின் பண்பாடு ஆரியக் கலப்பு அற்றிருந்ததென ஓரளவுக்கு நிறுவலாம். இப்பொழுது கூடத் தமிழ் நாட்டிலும் ஈழத்தின் வடக்குப் பகுதியிலும் கிழக்குப் பகுதியிலும் உள்ள மக்களின் சமூக அமைப்பும் பண்பாடும் வடநாட்டவர் சமூக அமைப்பிலிருந்தும் பண்பாட்டிலிருந்தும் வேறுபட்டு விளங்குவதைக் காணலாம். ஆரியப் பண்புகள் சிலவற்றை ஏற்றுக்கொண்ட திராவிடர்(தமிழர்) தம்முடைய பண்புகளிலும் பலவற்றை ஆரியருக்கு வழங்கினர் என்பதை நாம் மறத்தல் கூடாது.

– பேராசிரியர் சு. வித்யானந்தன்

SVithiyanandan01