(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.1 – புலவர் கா.கோவிந்தன் – தொடர்ச்சி)

தமிழர் பண்பாடு
(தொடக்க காலம் முதல் கி.பி. 600 வரை)

1.முன்னுரை – தொடர்ச்சி


சென்னைப் பல்கலைக்கழகத்தின், இந்திய வரலாறு மற்றும் தொல்பொருள் ஆய்வுத்துறைகளின் பேராசிரியராகிய முதுபெரும் அறிஞர் திருவாளர் எசு.கிருட்டிணசாமி ஐயங்கார் அவர்கள், பழந்தமிழ் இலக்கியங்களில் பொதிந்து கிடந்த பண்டைத்தமிழ் அரசர்கள், குறுநிலத் தலைவர்கள் பற்றிய செய்திகள் அவ்வளவையும் துருவித் துருவி ஆய்ந்து வெளிப்படுத்தித் தம்முடைய பல்வேறு நூல்களில் திறன் ஆய்வு செய்துள்ளார், ஆனால், பழந்தமிழ் இலக்கியங்கள் பண்டைக்காலத்து மக்களின் வாழ்க்கைமுறை பற்றிய செய்திகளை நூற்றாண்டு வாரியாகப் பெருமளவில் கொண்டிருப்பனவாகவும் (அப்பழங்காலச் சமுதாய வாழ்வியல் முறை பற்றிய) வரலாற்றுச் செய்திகளையோ அதன் வளர்ச்சி நிலை பற்றிய ஆய்வினையோ அவர் மேற்கொண்டாரில்லை.


உண்மையில் அவ்விலக்கியங்களில் இரண்டறக் கலந்து கிடக்கும் இத்துணைச் செல்வங்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது என எண்ணிக் கலக்கப் படுமளவான வரலாற்றுச் செல்வங்கள் மிகப்பலவாம், பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து மட்டும் கல்லி எடுக்காமல் வரலாற்றுச் செய்திகளில் ஒரு கால் கூறினைக்கூட பயன்படுத்தவில்லை என்றே நான் அஞ்சுகின்றேன். வரலாற்றுச் செய்திகளாக, ஆய்ந்து கண்டு நான் கூறியிருப்பன பெரும்பாலும் முழுக்க முழுக்கப் புதிய செய்திகளாகவே, என்னுடைய ஒவ்வொரு முடிவையும் அரண் செய்யும் சான்றாகத் தமிழ் இலக்கியத்தில் காணலாம். செய்திகளை அவற்றின் மூலவடிவிலேயே தருவதை, ஒவ்வொரு அதிகாரத்திலும் மூன்றில் ஒரு பங்கு இடங்கொண்டுவிடும் வகையில் அளித்திருப்பதன் மூலம், என் நூலைப் படிக்கும் தமிழ் அறியாதவர்களை அலைக்கழிக்க அல்லற்படச் செய்து, முந்திய எழுத்தாளர்கள் செய்யாது விட்ட ஒன்றை நான் செய்துள்ளேன்.

இந்நூலுக்காக நான் மொழி பெயர்த்திருக்கும் தமிழ் இலக்கிய மேற்கோள் பாக்கள் பழஞ்சொற்களையும், வழக்கிறந்து போன இலக்கண மரபுகளையும் பெருமளவில் கொண்டுள்ளன என்பதைக் கூற வேண்டியது பெரும்பாலும் தேவையற்றது. மூலங்களுக்கு உரை வகுக்கும் நிலையில் உரையாசிரியர்களும் சிற்சில இடங்களில் மிகமிக அரிதாக என்றாலும் வழிதவறிச் சென்றிருப்பதால், அவர்கள் உரை, தவறான உரையாக இருக்கக்கூடும் என நான் எண்ணிவிடும் இடங்களில் அவர்கள் கூறுவதிலிருந்து வேறுபட, நான் தயங்கியதில்லை.


தமிழும் ஆங்கிலமும் மொழி அமைப்பில், ஒன்றிலிருந்து ஒன்று மிகப் பெரிய அளவில் வேறுபட்டு இருப்பதால், எடுத்தாளும் செய்யுள்கள் எளிமையில் பொருள் விளங்கக்கூடியனவாக இருப்பினும், அவற்றை மொழி பெயர்ப்பது கடினமாகவே உளது. மேலும் தமிழ்ப் புலவர்கள், குறிப்பாக கி.பி. ஐந்து ஆறாம் நூற்றாண்டினரான பிற்காலப் புலவர்கள், தம்முடைய செய்யுட்களில், சொற்றொடர்க்கு மேல் சொற்றொடர்களையும், அடைமொழிக்கு மேல் அடைமொழியினையும் அடுக்கிக் குவிப்பதில் அளவின்றி ஆர்வம் காட்டியிருப்பது நேரிடை மொழி பெயர்ப்பைப் பெரும்பாலும் இயலாததாக ஆக்கியுளது. ஆனால் இம்மொழிபெயர்ப்புகள் ஒரு வரலாற்றுப் பயன் குறித்து ஆதலின், அவ்வப்போது மீறி, பொருள் விளக்க நிலை மொழிபெயர்ப்பு முறையினை மேற்கொண்டுள்ளேன். ஆயினும், அம்மொழி பெயர்ப்பு, படித்துப் பொருள் உணர்ந்து கொள்ளக்கூடிய ஒன்றே என்பதை உணர்த்தும் என நம்புகின்றேன். என்னுடைய மொழிபெயர்ப்பு எங்கெல்லாம் பிழைபட்டிருப்பதாக உணர்கின்றனரோ, அவை அனைத்தையும் என் நோக்கிற்குக் கொண்டுவருமாறு தமிழறிஞர்களை வேண்டிக் கொள்கிறேன், எங்ஙனமாயினும், செய்யுள் மூலத்தை எந்த இடத்திலும் பொருட்பிழைபட உணர்த்தியிருப்பதாக நான் நினைக்கவில்லை.


ஆண்டுகள் வழி நிகழ்ச்சி நிரல்


ஆண்டுகள் வழி நிகழ்ச்சிநிரல், வரலாற்றின் கண்ணாயின் பண்டைய இந்திய வரலாறு எப்போதும் குருடாகவே இருக்கும். உண்மைகள் அதாவது கணக்குப் பிறழாத, சரியான தேதிகள், மிகமிக அருகேயே தேவைப்படும் என்பதால் மக்கள் வாழ்வியல் வளர்ச்சி பற்றிய ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்கள் அவ்வாய்வுக்கு அடுத்தடுத்து இடம் பெற்றுவிட்ட நிகழ்ச்சிகள் அளவிலேயே மனநிறைவு கொள்வர். பழைய இந்தியாவின் ஆண்டுவழி நிகழ்ச்சி நிரல் அறுதியிட்டு முடிவு செய்ய இயலாத ஒன்றாகவே இருக்கிறது. அவ்வாறே தொடர்ந்து இருக்கும். அதனால் நாட்டுப்பற்று மிகுந்த தற்புகழ்ச்சியாளர்க்கும், ஒன்றைப் பலபடப் பெரிதாக்கிக் காட்டும் பொய்க் கூற்றினர்க்கும் போதிய வாய்ப்பினை அளித்து வந்துள்ளது, அளித்து வருகிறது.


கிருத்துவத் தலைமைக்குரு திருவாளர் அசர் அவர்களின் ஆண்டுவழி நிகழ்ச்சிநிரல் பட்டியல் செலுத்திய மேலாதிக்க விளைவால் உலகம் கி.மு. 40004இல் தோற்றுவிக்கப்பட்டது என நம்பியிருந்த காலத்தில், வேதகாலத் தொடக்கம் கி.மு. 1200 ஆக முடிவு செய்யப்பட்டது. அந்நாளிலிருந்து மண்ணியல் ஆய்வாளர்கள் மனிதனின் கடந்தகால வரலாற்றிற்குக் குறைந்தது நூறாயிரம் ஆண்டுகளாவது ஒதுக்கப்பட ‘வேண்டும் என வாதிட்டு வந்துள்ளனர் என்றாலும், ஆரிய நாகரீகத்தின் செல்வாக்கு சிறிதளவு தானும் காணக்கூடாத கி.மு. 3000க்கும் முந்தியதான சயிந்தவன் நாகரீகத்தின் அடிச்சுவடுகள், அரப்பா மொகஞ்சதரோ ஆகிய இடங்களில் அகழ்ந்து காணப் பட்டன என்றாலும், கடந்த நூறு ஆண்டு கால அளவில் சிறிதும் நம்புதற்கு இயலாத நனிமிகப் பிற்பட்ட காலத்தை வேதகாலந் தொடக்கத்திற்கு ஒதுக்கி விட்ட தேக்கநிலை, ஐரோப்பிய வரலாற்றுப் பேராசிரியர்களை மறுசிந்தனை செய்யத் தடுத்துவிட்டது.


திருவாளர் பருகிதர் அவர்களின் பட்டியலிலிருந்து, பாரதப் போருக்கு முன்னர், 90 தலைமுறைகளைச் சேர்ந்த அரசர்கள் ஆட்சி புரிந்தனர் என அறிகிறோம். பல்வேறு ஆய்வுகள், நிலைநாட்ட முனைவதுபோல், அப்போர் கி.மு. 15 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்ததாயின், வேதகாலம் கி.மு. 3000 ஆண்டுகளுக்கு மிக முற்பட்ட காலத்தில் தொடங்கியதாதல் வேண்டும்.
ஆரியரின் ஒற்றைத்தீ வழிபாட்டுமுறை, வேதகாலத்து முத்தீவழிபாட்டு முறைக்கு முன்னே, மிக நீண்ட காலத்திற்குச் சிறந்து விளங்கியிருத்தல் வேண்டும். இவ்வகையால் ஆரியரின் தீ வழிபாட்டு நெறியின் தொடக்கத்திற்கு கி.மு. 3000ஐ நாம் அடைகிறோம். அந்தப் புதிர் ஈண்டு ஆராயத் தேவையில்லை. ஆனால் அவ்வேத காலம், ஒவ்வொன்றும் 500 ஆண்டுகளைக் கொண்டதான மூன்று யுகங்களை உள்ளடக்கியதாகவும் ஏறத்தாழ கி.மு. 3000ல் தொடங்கிய தாகவும். நான் கருதுகிறேன் எனக் கூறுகின்ற அளவோடு நிறைவு கொள்கிறேன்.


சிரீஇராமச்சந்திரன், வேதகாலத்தின் மூன்று பகுதிகளில், இரண்டாவது பகுதியின் இறுதியில் இருந்தார். ஆகவே அவருடைய காலம் கி.மு. 2000 எனக் கருதுகின்றேன். சிரீ இராமச்சந்திரன் பிறக்கும்போது ஐந்து விண்மீன்கள், மேலாட்சி நிலையில் இருந்தன என்ற செவிவழிச் செய்தியால் உறுதி செய்யப்படுகிறது என்ற சிறப்பும், இந்த நாளுக்கு உண்டு. சிரீ இராமருக்கும் சிரீ கிருட்டிணருக்கும் இடையே கடந்துபோன காலம் 500 ஆண்டுகள் என்பது ஒரு நல்ல மதிப்பீடு. இம்மதிப்பீடு சிரீ கிருட்டிணனின் இறப்போடும், வேதமந்திரங்களை இயற்றி வந்த நீண்ட வழிமுறையினரின் மறைவுகளோடும் ஒன்றுபட்ட, கலியுகத்தின் மரபு வழித் தொடக்கமாம், வேதகால் முட்டி.வுக்கு நம்மைக் கொண்டுவந்து நிறுத்துகிறது.


பாரதப்போருக்குப் பின்னர், இந்தியாவின் ஆண்டுவழி நிகழ்ச்சி நிரல் பட்டியல், இன்றியமையா நிலையில் சரியான தல்லவாகலாம் என்றாலும், எளிமையானது. ஆனால், நாம் பெரிதும் கருத்தில் கொள்ள வேண்டுவது நிகழ்ச்சிகளின் வரிசைமுறையை ஆராய்ந்து காண முயல்வதே நம்பிக்கை யற்றதாகி விட்டதான நிகழச்சிகளின் சரியான நாட்களை அன்று.
தென்னிந்திய வரலாற்றுத் தேதிகளைப் பொறுத்த வரை இவைபோலும், தெளிவிலாக் கற்பனை முடிவுகளும், எட்டுவதற்கு அப்பாற்பட்டே உள்ளன. திருவாளர் கனகசபை அவர்கள் வரலாற்று மனிதர் சிலரின், ஏற்றுக் கொள்ளத்தக்க தேதிகளைக் கண்டுகொள்ளலாம் எனக் கற்பனை செய்துள்ளார். அது, வெறும் மாயை என்பது உறுதி செய்யப் பட்டுவிட்டது. எந்தக் காலத்திற்குப் பின்னர் நம்பத்தகுந்த, ஒரு சில வரலாற்றுத் தேதிகளைப் பெற, சில கல்வெட்டுகள் நமக்குத் துணைபுரிந்தனவோ, அந்தக் காலமாம் கி.பி. 600ஐ அடையும் வரை, அதிகபட்சம், நாம் பெறக்கூடியது தெளிவில்லாத சில நிகழ்ச்சிகளின் வரிசைப்பட்டியல்தான்.


படி எடுத்தல்


சமற்கிருதச் சொற்களை, உரோமன் எழுத்து வடிவில் எழுதியது பெரும்பாலான சமற்கிருத அறிஞர்கள் கடைப்படித்த அதே முறைதான். தமிழ்ச் சொற்களுக்காக மேலும் சில எழுத்துகளை மேற்கொண்டுள்ளேன். அவை யாவன; ‘ஃ’ற்கு ‘H’; ‘ஏ’ வுக்கு ‘E’; ‘ஓ’ வுக்கு ‘O’ ‘ற’ கர மெய்க்கு ‘u’. ‘ழ’ கர இன்றைய ஒலிப்பு நகரத்திற்கு முறையில் ‘ன’ கரத்தை வேறு பிரித்துக் காண முடிய வில்லையாகவே னகரத்திற்க்குத் தனிக்குறியீடு எதையும் பயன்படுத்தவில்லை. தமிழை உரோமன் எழுத்தில் எழுதுவது, தனிச்சிக்கலைத் தோற்றுவிக்கிறது. தமிழ் நெடுங்கணக்கில் பல மெய்யெழுத்துகளைக் குறிக்கவரும் குறியீடுகள் இரண்டு ஒலிகளைக் குறிக்கும் பணியினைப் புரிகின்றன. உரோமன் எழுத்தில் எழுதுவது ஒலிப்பு முறையோடு வேறுபட்டதாகி விடின் அச்சொல் தன் பொருளையே இழந்துவிடுகிறது. உரோமன் எழுத்தில் அளித்துள்ளேன்.


நான் மேற்கொண்ட ஒலிப்புமுறை பெரிதும் சரியான ஒன்று, ஒவ்வொரு தமிழனும் அதைப் பின்பற்றலாம் அல்லது உணர்ந்து கொள்ளலாம் என்றே எண்ணுகின்றேன். நான் சந்திக்க நேர்ந்த மற்றொரு சிக்கல், ஒரே சொல் சமற்கிருத வடிவிலும், தமிழ்வடிவிலும் காணப்படும் போது அதை எழுத்துவடிவில் தரும் நிலையில் ஒரு முரண்பாடு ஏற்பட்டு விடுகிறது என்ற உண்மை நிலையாகும். சூழ்நிலை, ஒருவரை சமற்கிருதத்தில் சிந்திக்கவைக்கும் போது, இவைபோலும் சொற்களைச் சமற்கிருத எழுத்துகளிலும், தமிழில் சிந்திக்க வைக்கும்போது, தமிழ் எழுத்துகளிலும் தந்துள்ளேன், இம்முறை, அவ்விரு மொழிகளில், ஒரு மொழியைத் தெரியாத வாசகர்களைத் தடுமாறச் செய்யக்கூடும் என்றாலும் இம்முரண்பாட்டு நிலையைத் தவிர்த்துவிடல் கூடும் என நான் நினைக்கவில்லை.

(தொடரும்)
தமிழர் பண்பாடு
புலவர் கா.கோவிந்தன்