thangapathakkam01

 kedibilla_killadiranga

தந்தையர்நாள் எண்ண ஓட்டம்

  உறவுகளைப்போற்றுவது தமிழர் நெறி. பெற்றோரை உயர்ந்த நிலையில் வைத்துப் போற்றிப் பேண வேண்டும் என்பது அதில் முதன்மையானது.

 மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை

என்நோற்றான் கொல்எனும் சொல்.  

(திருவள்ளுவர், திருக்குறள் 70)

என்பதன் மூலம் மகனும் மகளும் தந்தைக்குச் செய்ய வேண்டிய கடமையைத் திருவள்ளுவர் கூறுகிறார். தாய்க்கும் செய்ய வேண்டிய கடமையாக இதை எடுத்துக் கொள்ளலாம்.

 தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லை

(ஔவையார், கொன்றைவேந்தன், 37, 38)

தந்தை தாய் பேண் (ஔவையார், ஆத்திசூடி, 20)

என்பனவும்

குமர குருபரர், புதல்வர்க்குத் தந்தையும் தாயும் தெய்வம் என்பதும்

பெற்றோரின் உயர்வை நமக்கு உணர்த்தும்.

இராமாயணத்தில், மாயத்தோற்றத்தில் சனகனை உருவாக்கி மடிந்ததாக் காட்டும் பொழுது தந்தை இறந்ததாகக்கருதிய சீதை,

எந்தையே! எந்தையே! இன்று என் பொருட்டு உனக்கும் இக் கோள்

வந்ததே! என்னைப் பெற்று வாழ்ந்தவாறு இதுவோ! மண்ணோர்

தந்தையே! தாயே! செய்த தருமமே! தவமே!’ என்னும்;

வெந்துயர் வீங்கி, தீ வீழ் விறகு என வெந்து, வீழ்ந்தாள்.

 என்கிறாள். தந்தையைத் தாயாகவும் அறமாகவும், தவமாகவும் போற்றும் மனப்பான்மையை நாம் காணலாம்.

இதுபோல், வாலி இறந்ததும் அவன் மகன் அங்கதன்,

எந்தையே! எந்தையே! இவ் எழு

திரை வளாகத்து, யார்க்கும்,

சிந்தையால், செய்கையால், ஓர்

தீவினை செய்திலாதாய்!

என்று தந்தையின் உயர்வை எண்ணி அரற்றுகிறான்.

 “ஈச னடிபோற்றி எந்தையடி போற்றி(திருவாசகம்)

என மாணிக்க வாசகர், கடவுளைத் தந்தையாகக் கருதுகிறார்.

 அப்பா, நான் வேண்டுதல் கேட்டருள்புரிதல்வேண்டும்

என வள்ளலார் இராமலிங்க அடிகள், இறைவனை அப்பா என்றே கருதி அழைக்கிறார்.

 இவ்வாறு தந்தையை உயர்வாகப் போற்றுவதையும் அதனால் இறைவனைத் தந்தைக்கு ஒப்பாகக் கருதுவதையும் நாம் பல பாடல்கள் வழிக் காணலாம்.

   இப்பொழுதெல்லாம் அந்த நாள், இந்த நாள் என்று ஏதேதோ நாள் கொண்டாடுகிறார்கள். இப்பொழுது தந்தையர்நாள் வந்துள்ளது .இவற்றையெல்லாம் நாம் கொண்டாட வேண்டுமா என்பது பலர் எண்ணம். கடந்த ஒரு நூற்றாண்டாகப் பிற நாடுகளில் கொண்டாடப்படும் இத்தகைய நாள்கள் வணிக நோக்கில் முதன்மைப்படுத்தப்பட்டு நம் நாட்டிலும் இப்பொழுது பின்பற்றப்படுகிறது. எனவே, தேவையில்லை என்பதே மூத்தோர் எண்ணம்.

  எல்லா நாளிலும் எல்லாரையும் போற்ற வேண்டும் என்பதே உண்மை. அதனால், இத்தகைய தனித்தனிநாள் தேவையில்லை என்பதும் ஒரு சாரார் கூற்று. இவற்றிலெல்லாம் உண்மை இல்லாமல் இல்லை. எனினும் நம் நாட்டில் இன்றைய பொருள் தட்டுப்பாடு, வேலையின்மை, கூட்டுக்குடும்பம் அருகியமை போன்ற பல காரணங்களால், உறவுகளை மதிக்கும் நிலை மறைந்து வருகிறது. எனவே, தந்தைநாள் முதலான நாள் வரும்பொழுதாவது இது குறித்த சிந்தனை உண்டாவதும், திருந்திய போக்கு ஏற்படுவதும் தந்தை மீதுள்ள மதிப்பினை வெளிப்படுத்துவதும், நல்லன செய்வதில் நாட்டம் உண்டாவதும் பெருகுகிறது. இவற்றை யெலலாம் ஒரு நாள் கூத்தாக மாற்றாமல் தொடர்ந்து நிலவும் பண்பாடாகக்கடைப்பிடிக்கும் உணர்வை நாம் வளர்க்க வேண்டும்..

  தலைப்பு தந்தையைப்பற்றியது என்பதால் நாம் இங்கே அதனைப்பற்றி இனிப் பார்ப்போம். உலகில் இந்தியா முதலான 52 நாடுகள் சூன் 3ஆவது ஞாயிற்றுக்கிழமையைத் தந்தையர் நாளாகவும் பிற நாடுகள் (ஏப்பிரல் நீங்கலான ஒரு மாதத்தில்) ஏதோ ஒரு நாளினைத் தந்தையார் நாளாகக் கொண்டாடுவதும் வழக்கமாக உள்ளது.

  சொனாரா இசுமார்ட்டு டோட்டு (Sonora Smart Dodd), 6 பிள்ளைகளைவிட்டுவிட்டுத் தாய் மறைந்தபின், மறுமணம் புரியாமல் தங்களைப் பேணிய தந்தை வில்லியம் இயாக்சன் இசுமார்ட்டு(William Jackson Smart)-இனைப் புகழும் வகையில் தந்தையர் நாள் கொண்டாட விரும்பியதனால் உருவாகி இது படிப்படியாக வெவ்வேறு நிலைகளை எட்டி இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

  சூலை 5, 1908 இல் முதன்முதலில் தந்தையா் கொண்டாடப்ட்டது என்பாரும் உளர். 1909இல் சொனாரா வேண்டியதற்கிணங்க 1910 முதல் தந்தையார் நாள் கொண்டாடப்படுவதாகவும் கூறுகின்றனர். (இரு கருத்துகளுமே விக்கிபீடியாவில் காணப்படுகின்றன.)

  தந்தையர் நாள் கொண்டாடும் நாம் திரைப்படங்களில் தந்தையர்பற்றிய தவறான படிமம் உருவாக்கப்படுவதை நீக்க முயல வேண்டும். தமிழ்த்திரைப்படங்களில் அப்பா எனப்படுபவர் பொதுவாக மகன் முன்னிலையில் அவனை வேலைவெட்டி இல்லாதவன், தண்டச்சோறு, ஊர் சுற்றி, பொறுப்பில்லாத போக்கிலி என்பனபோல் ஏசுவார்; கண்டிப்பார்.   ஆனால், மகன் இல்லாத பொழுது தன் மனைவியிடம் அவன்மீதுள்ள பாசத்தை வெளிப்படுத்துவார். மகனோ அப்பாவை ஒருமையில் பேசுவான். இந்த ஒருமையில் பேசுவது என்பது ஒரு சமூகத்தின் வழக்கமாக இருந்தது. அச்சமூகம் ஆதிக்கம் செலுத்திய ஊடகங்கள் வழியாக இப்பேச்சு பரவி, அடுத்துச் சென்னை வழக்கம்போல் மாறி, இன்று எங்கும் இதுவே நிலைக்கின்றது. பெரியவர்களை ஒருமையி்ல் கூறும் ஊடகம் சிறு பிள்ளைகளிடம், நீங்கள், வாங்கள், என்பனபோல் மதிப்பாகப்பேசுவர். இப்பழக்கமும் இன்று மக்களிடையே பரவி விட்டது. எனவே, அப்பாவை மகன் ஒருமையில் குறிப்பிடுவதைத் தவறு என யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. முன்பெல்லாம் மகன் தந்தையை அடிக்கக் கையை ஓங்குவதாகத்தான் காட்டுவார்கள். அண்மையில் வந்த ஒரு படத்தில் (கேடி பில்லா, கில்லாடி இரங்கா) “அடி பார்ப்போம்” எனத் தந்தை கூறியதும் மகன் அடித்துவிடுவதாகவே காட்சி இருக்கும். பின்னர் அவன்தந்தையைத் தன் நாயகனாக அவரது ஒளிப்படத்தில் குறிப்பிடுவான். இந்தக் கதை எதற்கு? படங்களில் இப்படி எல்லாம் பார்க்கும் இளைஞர்களுக்குத் தந்தையை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் எவ்வாறு உருவாகும்?

  பொதுவாகவே திரைப்படங்களில் தந்தை பற்றிய வெளிப்பாடு சரியாக இல்லை என்பதே உண்மை. நடிகர் திலகம் (சிவாசி கணேசன்) அப்பாவாக நடித்த படங்களில் எல்லாம் மோசமான அப்பாகவே நடித்திருப்பார். (நான்பார்த்த படங்களில் எல்லாம் அப்படித்தான் நடித்திருப்பார். பிற படங்களில்மாறி நடித்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். இப்படிப் பாத்திரப்படைப்பு இருந்தால்தான அவர் நடிப்பை வெளிப்படுத்த முடியும என்ற தவறான எண்ணமே காரணம்.) சான்றாக எல்லாராலும் பாராட்டப்படும் ‘தங்கப்பதக்கம்’ படத்தைக் கூறலாம்.

  காவல் அதிகாரியான அவர் மகனிடம் கண்டிப்பாக இருக்கலாம். ஆனால், கனிவை வெளிப்படுத்த என்ன தடை? வீட்டிலும் காவல் அதிகாரியாக எண்ணாமல் தந்தைபோல் நடந்துகொள்ள ஏன் இயலவில்லை? காவல் அதிகாரியின் வேலை தண்டிப்பதுதானா? திருத்துவது இல்லையா? தன் மகனின் குற்றச் செயலை அறிய இரு காவல் துறையினரை மாறு வேடத்தில் அனுப்பிப் பண உதவி கேட்கச்செய்வார். மகனும் உதவுவான். அதை வைத்து அவன் திருட்டைக்கண்டுபிடிப்பார். உண்மையில் அவர், மகனின் உதவும் பண்பையும் பரிவுப்போக்கையும் உணர்ந்து அவனை அவன் வழியில் திருத்ததானே முயன்றிருக்க வேண்டும். அன்பு காட்டி அவனைக் குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்து சரணடையச் செய்திருக்கலாமே! கடமை என்ற போர்வையில மகனைப் பகைவன்போல் கருதும் மோசமான தந்தையாகத்தான் இதில் நடித்திருப்பார்.

  பொதுவாகவே தந்தையை வழிகாட்டியாகவும் தாய்மைஉணர்வும் உள்ளவராகவும், தோழனாக நடந்து கொள்பவராகவும் ஆற்றுப்படுத்துபவராகவும் காட்டாமல் மகனின் எதிரிபோல் காட்டுவதே திரைப்படங்களின் பழக்கம். தந்தை எதிரிபோல் நடந்துகொண்டதும் மகனையும் அதற்கேற்ப எதிரியாகத்தானே படைக்க முடியும். எனவே, திரைப்படங்கள் இப்போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.

  தந்தை, மகன் அல்லது மகள் மீதுள்ள அன்பை அவர்களிடம் நேரிடையாக வெளிப்படுத்துபவராகவும். பிள்ளைகளுக்கு இடர்ப்பாடு வரும் நேர்வுகளில் ஆற்றுப்படுத்தி ஆறுதல் கூறுபவராகவும் காட்ட வேண்டும். வேலை கிடைக்காச் சூழலில் பிள்ளையின் வருவாயை நாடும் குடும்பம் எனில், ” உன் தகுதிக்கும் ஆர்வத்திற்கும் ஏற்ற வேலை கிடைக்கும். அதுவரை கிடைக்கும் வேலையைப் பார்” என்று கூற வேண்டும். போதிய வருவாய் உள்ள குடும்பம் எனில், “உன் கல்விக்கும் திறமைக்கும் ஏற்ற வேலையில் சேர்ந்தால்தான் முன்னேற இயலும். எனவே, வேலை கிடைக்கவில்லை எனக் கவலைப்படாதே. உன்திறமையை மேலும் வளர்த்துக்கொண்டு முயற்சி செய். கண்டிப்பாக உனக்கு வேலை கிடைக்கும்.” என நம்பிக்கையுரை வழங்க வேண்டும். பொறுப்பினை உணராமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்தால், “நண்பர்கள் துணை தேவைதான். அவர்களுடன் தகுதியை வளர்த்துக்கொள்வது குறித்தும் வேலைக்கான தேர்வுகளுக்கு ஆயத்தப்படுவதுபற்றியும் கலந்து பேசு. தம்பி,தங்கையர் படிப்பில் கருத்து செலுத்தி அவர்களுக்கு ஊக்கமாக இரு. வீட்டுப் பொறுப்பில் உன்னால் முடிந்ததை ஏற்றுக் கொண்டு எங்கள் சுமையைக் குறை”   அமைதியான முறையில் பொறுப்பின்மையைச் சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்துபவராக இருக்க வேண்டும்.

 அவ்வாறில்லாமல் இப்போதைய போக்கையே தொடர்ந்தால் இளந்துலைமுறையினர் வாழ்வைச் சிதைக்கிறார்கள் என்றுதான் பொருள்.

 ‘திரைப்பட அப்பாக்கள்’ திருந்த வேண்டுமெனில் இயக்குநர்களும் கதையாசிரியர்களும் திருந்த வேண்டும். திருந்துவார்களா? தந்தை-மகன் நல்லுறவை வெளிப்படுத்தும் வகையில் படங்களை உருவாக்குவார்களா?

திருந்துவார்கள் என்று நம்பிக்கை வைப்போம்!

– இலக்குவனார் திருவள்ளுவன்