திரும்பி வந்த கார்த்திகை நாளே தீபாவளி !

அறிவுக்குப் பொருந்தாக் கதையாக இருப்பினும் தீபாவளியைக் கொண்டாடுவோர் இருக்கின்றனர். அதே நேரம், தீபாவளியை எளிமையாகக் கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்துவோரும் தீபாவளியைக் கொண்டாடாதவர்களும் உள்ளனர். விசய நகரப் பேரரசான இந்துப் பேரரசு தமிழ்நாட்டில் கி.பி. 15ஆம் நூற்றாண்டு நுழைந்தது. அப்பொழுது முதல்தான் தீபாவளி இங்கே கொண்டாடப்படுகிறது. அவ்வாறு தமிழகத்திற்கு இறக்குமதியான ஒரு பண்டிகைதான் தீபாவளி. நேரடியாகப் புகாமல் இருக்கின்ற விழாவை மாற்றி அமைக்கும் வகையில் புகுந்துள்ளது. பரதகண்டம் முழுவதும் இருந்த கார்த்திகை நாளே தீபாவளியாக மாறியுள்ளது.

முதலில் நாம் தீபாவளிபற்றிய கதைகளைப் பார்ப்போம். நரகாசுரன் கொல்லப்பட்ட நாள் தீபாவளி என்பது ஒரு கதை. இவனது உண்மைப் பெயர் பவுமன். திருமால் பன்றித் தோற்றம் எடுத்துப் பூமியைத் துளைத்து அசுரர்களை அழிக்கச் சென்றாராம். அப்பொழுது அவருக்கும் பூமாதேவிக்கும் பிறந்தவன்தான் நரகாசுரனாம். அசுரர்களை வதம் செய்தபொழுது பிறந்ததால் அசுரர்களின் குணம் வந்து விட்டதாம். எனவே, நரன்(மனிதன்)+அசுரன் நரகாசுரன் எனப்பட்டானாம். அசுரர்களை வதம் செய்த பொழுது பிறந்தவனுக்கு வதம் செய்த திருமாலின் குணம்தானே வந்து இருக்க வேண்டும்? இவன் தாயைத்தவிர வேறு யாராலும் கொல்லப்படமுடியாத வரம் பெற்றிருந்தானாம். ஆகவே, சத்தியபாமாவாக இருந்த பூமாதேவியால் கொல்லப்பட்டானாம்.

வால்மீகி இராமாயணத்தில் இராமன்  தனது வனவாசத்தை முடித்துச் சீதையுடனும் இலட்சுமணனுடனும் அயோத்திக்குத் திரும்பினான். அந்த நாளை மக்கள் விளக்கேற்றி வரவேற்றார்கள். இதுவே தீபாவளி என்பது ஒரு கதை.

கேதாரம் என்றால் பாலி மொழியில் விளைநிலம் எனப் பொருள். இமயலமலையில் இருந்த ஒரு விளைநிலம் சிவனின் தலமாகக் கருதப்பட்டதால் கேதாரம் என்றால் சிவதலம்/ சிவன் என்றானது. ஒரு நாட்டிய முடிவில் பிருங்கி முனிவர் பார்வதியை விட்டுவிட்டுச் சிவனை மட்டும் வலம் வந்து வணங்கினார். இதனால் பார்வதி 21 நாள் நோன்பு இருந்து மேற்கொண்ட நடவடிக்கைகளால் சிவன் பார்வதியை – கெளரியை –த் தன்னில் பாதியாக ஏற்று மங்கையொரு பாகன் ஆக மாறினார். இந்த நாள் இறைவனை வழிபடும் சிறப்பு நாளாகக் கருதப்படுகிறது. நோன்பு இருந்து கேதார கெளரியாக (சிவன் பார்வதி இணைவாக) மாறிய இந்நாளே தீபாவளி என்பது மற்றுமொரு கதை.

சங்க இலக்கியங்களுக்குக் கடவுள் வாழ்த்து எழுதப்பெற்ற பிற்காலத்தில் இறைவனும் இறைவியும் கலந்த உருவமாகக் கடவுளை உருவகப்படுத்தினர். இதை ஐங்குறுநூற்றுக் கடவுள் வாழ்த்து(அடி 1),

 “நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்” என்கிறது.

“பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்

தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்”

என்று புறநானூற்றுக் கடவுள் வாழ்த்து (அடி 7-8) கூறுகிறது. இவற்றுக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட கதையே இக்கதை.

கிருட்டிணன், நரகாசுரனைக் கொன்ற போது, அவன் தான் இறக்கும் நாளை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க, தீபாவளி  கொண்டாடப்படுவதாக ஒரு கதை. ஆரியக்கதைகளின்படி முறையற்ற முறையில் கொன்றவன் அருளால் கொல்லப்பட்டவன் இறந்த நாளை மக்கள் கொண்டாட வேண்டும்!  

புரட்டாசி மாதம்  எம உலகிலிருந்த வந்திருந்த முன்னோர் நினைவாக அவர்களுக்குப் படையிட்ட பின், ஐப்பசியில் அவர்கள் மீளவும் எம உலகம் செல்வர். அப்பொழுது, அப்பாதையில் வெளிச்சம் இருக்க வேண்டுமாம். வந்த பொழுது இருட்டிலேயே வந்தவர்களுக்குப் போகும்பொழுது வெளிச்சம் தேவைப்படுகிறது போலும். எனவே, வீட்டு வெளி வாசலில் தென்திசை நோக்கி முன்னோர் ஒவ்வொருவருக்கும் ஒரு விளக்கு என்ற முறையில் விளக்கேற்றி வைக்க வேண்டும். இதுவே தீபாவளி என்பதும் ஒரு கதை.  

                பிராமணிய மதத்தின் எதிரியாகச் சமண மதம் உள்ளது. இம்மதத்தின் 24ஆவது அருகன் (தீர்த்தங்கரர்)வருத்தமான மகாவீரர் வீடு பேறடைந்த நாளில் வரிசையாக விளக்குகளை ஏற்றிக் கொண்டாடுகின்றனர். இதுவே தீபாவளி எனப்படுகிறது.

ஐப்பசி மாதம் தேய்பிறை 14ஆம் நாளில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதனால் நரக சதுர்த்தசி என்கின்றனர். அஃதாவது காருவாவாகிய அமாவாசை அன்று கொண்டாடாமல் அதற்கு முதல்நாளே இக்கதையின்படித் தீபாவளி கொண்டாடப்படுகிறது.

நீத்தார் நினைவுநாள் இறுதிச்சடங்கில் எண்ணெய் தேய்த்துக் குளித்தல் தமிழர்களின் வழக்கம். தீபாவளியன்று தமிழ்நாட்டில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கின்றனர். தமிழ்நாட்டுப் பிராமணர்களும் இதனைப் பின்பற்றுகின்றனர். ஆனால், வடநாட்டில் இந்தப் பழக்கம் இல்லை. எனவே, முன்னோர்களுக்காகக் கடைப்பிடிக்கப்படும் நீத்தார் நினைவு நாள்தான் தீபாவளியாக மாற்றப்பட்டதோ என்ற ஐயமும் உள்ளது.

தீர்க்கதமசு என்னும் முனிவருக்கு, உடலை வருத்திக் கொண்டு துன்புற்று நோன்பு, தவம் இருந்துதான்  நல்வழியை அடைய வேண்டுமா என்ற ஐயம் வந்தது. சனாதன முனிவர் என்பவரிடம் இது குறித்துக் கேட்டார். அவர் புத்தாடை உடுத்தி, இனிப்புப்பண்டங்கள் சாப்பிட்டு ஏழை எளியோருக்கும் அவற்றைக் கொடுத்து, ஒளி எங்கும் பரவ விளக்குகள் ஏற்றி மனம் மகிழ்ந்து கொண்டாடியும் துன்பங்களிலிருந்து விடுபடலாம் என அறிவுறுத்தினாராம். அவர் கூறியதன்படி ஐப்பசியில் எமனை வழிபட்டு விளக்கேற்றிக் கொண்டாடப்படுவதே தீபாவளி என்றும் ஒரு கதை வழங்குகிறது.

1577-இல்  பொற்கோயில் கட்டுமானப் பணிகள் துவங்கியதையே  தீபாவளியாகக் கொண்டாடுவதாகச் சீக்கியர்கள் கூறுகின்றனர். சிலர் ஐப்பசிக் குளிருக்கு வெப்பம் தேவைப்பட்டதால் விளக்கேற்றியதாகக் கூறுவர். ஐப்பசி அடைமழைக்காலம் எனவே, இது பொருந்தாது. கார்த்திகை அல்லது மார்கழிக்குச் சொன்னால் பொருந்தி வரலாம்.

கி.பி.1117இல் சாளுக்கிய திரும்புவன மன்னன், சாத்துயாயர் என்னும் அறிஞருக்கு ஆண்டுதோறும் தீபாவளிப்பரிசு வழங்கியதாகக் கன்னடக் கல்வெட்டு ஒன்றுகூறுகிறது. கி.பி.1250இல் மராத்தியில் எழுதப்பெற்ற நூல் (இ)லீலாவதி. இதில்எண்ணெய் தேய்த்து நீராடுது பற்றிய குறிப்புகள் இடம் பெறுகின்றன.

தமிழர் திருநாள் நான்கு நாள் கொண்டாடப்படுவது. இதற்குப் போட்டியாக ஐந்து நாள் விழாவாகத் தீபாவளி உருவாக்கப்பட்டிருக்கலாம் என எண்ணுகிறேன்.

வடநாட்டு ஆண்டுத் தொடக்கம் சைத்திர/சித்திரை மாதம் மார்ச்சு 21 அல்லது 22 வருகிறது. எனவே, அம்முறைப்படி கார்த்திகை மாதம் அட்டோபர் 23இல் தொடங்குகிறது. நமக்கு ஏப்பிரலில் சித்திரை தொடங்குவதால் அப்பொழுது ஐப்பசிதான். எனவே, வடவர்கள் வடநாட்டில் அவர்கள் கார்த்திகைப்படி கார்த்திகை நாளைக் கொண்டாடினர். நமது விழாதான் அது என்பதை உணராத நாம்  அயலவர்கள் விழா, பழக்கவழக்கம் போன்றவற்றில் பிடிப்பு உள்ள நாம், அக்கார்த்திகையைத் தீபாவளியாகக் கொண்டாடுகிறோம்.

அயோத்திதாசப் பண்டிதர் பெளத்தர்கள் ஆமணக்கு நெய்யைப் பயன்படுத்தி கார்த்திகை மாதத்து முழுநிலவு நாளிலே தீபமேற்றி, ஈகை அளித்து இறைவழிபாடு செய்தனர் என்று ஒரு கதையின் அடிப்படையில் குறிப்பிடுகிறார்.

தமிழில் உள்ள விளக்கு வரிசையே மறு பெயரில் தீபம் ஆவளியாக – வரிசையாக-க் கூறப்பட்டுத் தீபாவளி என்றானது. எனவே, தீபாவளி என்பது கார்த்திகை விளக்கு வரிசைதான்.

கார்த்திகை விளக்கு வரிசையாக ஏற்றப்படுவதைக் குறித்த ஒரு பாடலைப் பார்ப்போம்.

நலம் மிகு கார்த்திகை, நாட்டவர் இட்ட

தலை நாள் விளக்கின் தகை உடையவாகி,

புலம் எலாம் பூத்தன தோன்றி;-சிலமொழி!-

தூதொடு வந்த, மழை.

என்கிறார் புலவர் கண்ணங் கூத்தனார்(கார்நாற்பது, 26); இப்பாடலில் கார்த்திகையில் விளக்கு வரிசையாக ஏற்றப்படுவதைக் குறிப்பிட்டு, அதுபோல் எங்கும் பூக்கள் வரிசையாகப் பூத்துள்ளன என்கிறார்.

கார்த்திகை ஒளிநாள் தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் தொன்மையான விழாவாகும். கார்த்திகை குறித்துத் தொல்காப்பியத்திற்கும் முந்தைய இலக்கியமான மலைபடுகடாம் தெரிவிக்கிறது. நற்றிணை, சீவகசிந்தாமணி, முதலான இலக்கியங்களும் கார்த்திகைபற்றிக் கூறுகின்றன. எனவேதான், ‘தொல் கார்த்திகை நாள்’ என்கிறார் திருஞானசம்பந்தர்.

 இலக்கியங்கள் கூறுவனவற்றில் இருந்து பருவநிலை மாற்றத்திற்கேற்பக் கொண்டாடிய இயற்கை விழாவாகத்தான் கார்த்திகை நாளைக் கொண்டாடினார்கள் என்பது உறுதியாகிறது. ஆனால், பின்னர் இதற்கும் கதை கட்டிவிட்டார்கள். சிவனின் அடியையும் முடியையும் தேடித் தோற்ற நான்முகனும் திருமாலும் வேண்டியதற்கிணங்க  சிவன் ஒளிப்பிழம்பாகத் தோன்றியதாகக் கூறிக் கதை பரப்பிவிட்டனர். சிவன் ‘திரிபுராசுரர்’ என்று அழைக்கப்படும் கமலாட்சன், தாரகாட்சன், வித்தியுன்மாலி ஆகிய மூவரைக் கொன்ற நாள்தான் கார்த்திகை என்றும் கதை கட்டினர்.

தமிழ் நூல்கள்போல்  கல்வெட்டுகளும், கார்த்திகைப் பெருவிழா கொண்டாடியதை எடுத்துக்கூறுகின்றன.  சான்றாக, முதலாம் இராசேந்திர சோழன் ஆட்சியில், கார்த்திகைத் திங்கள் கார்த்திகை நாளில் விளக்கெரித்ததற்குப் பதினாறு நாழி நெய்க்காகப் பதினாறு ஆடுகளைத் திருப்பாற்றுத்துறை மக்கள் கோவிலுக்குத் தானமாகக் கொடுத்துள்ளனர். இதனை அம்மன்னனின் ஒன்பதாம் ஆட்சியாண்டில் (கி.பி.1021) வெட்டப்பட்ட கல்வெட்டொன்று தெரிவிக்கிறது.

`குமரி முதல் இமயம் வரை முழுமையும் தமிழ்நிலமாக இருந்த பொழுது கார்த்திகையில் கொண்டாடப்பட்ட ஒளிவிழா பின்னர் வடக்கே இவ்வாறு தீபாவளியாயிற்று. ஆவளி என்றால் வரிசை. விளக்குகளை / தீபங்களை வரிசையாக ஏற்றி வைப்பதால் இவ்விழாவிற்கு இப்பெயர் வந்தது. வடக்கே வேறு வகை மாத முறையைப் பின்பற்றியதால் வடக்கே நடைமுறையில் உள்ள கார்த்திகை மாதத்தில் – நமது ஐப்பசியில் – இவ்விழா கொண்டாடப்படுகிறது. இது தெற்கே புதிய மற்றொரு விழாவாக மாறி ஏற்கப்பட்டுள்ளது.

தீபாவளி மீதூதியத்தைப்(Bonus) பொங்கலில் வழங்குவது போன்றவற்றின் மூலம் செலவிற்கான வழியை அடைத்தால் நாளடைவில் தீபாவளிச் செலவுகள் குறையும். நமது கார்த்திகைதான் தீபாவளியாக மாறித் திரும்பி வந்துள்ளது என்பதை உணரச்செய்து இரட்டை விழாவினைக் கொண்டாடுவதைத் தவிர்க்கச் செய்யலாம்.

கார்த்திகை நம் விழா! தீபாவளி இரவல் விழா!

இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி 27.10.2019