parai

  எட்டுத் தொகையில் ஒன்றாகிய பரிபாடல் இசைத் தமிழ்ப்பாடல்களைக் கொண்ட நூலேயாகும். ஒவ்வொரு பாடலிலும் அந்தந்தப் பாட்டுக்குரிய பண் இன்னதென்பது குறிக்கப் பெற்றுள்ளது.

  சிலப்பதிகாரத்தில் பல இசைப்பாடல்களும் செய்திகளும் இடம் பெற்றுள்ளன. அவற்றிற்கு விளக்கம் கூறும் அடியார்க்கு நல்லார், பல இசை நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுகிறார். அவற்றுள் சில மேற்கோள் எந்தஇசை நூலைச் சார்ந்தன என்று நம்மால் அறிய முடியவில்லை. அடியார்க்கு நல்லார் கூறும் பல இசை நூல்களின் ஆசிரியர் யார் என்பதை அறிய முடியவில்லை.

  அவர் இசைநூல்களாக பெருநாரை, பெருங்குருகு, பஞ்சுமரபு, தாளசமத்திரம், பஞ்சபாரதீயம் சுத்தாநந்தப் பிரகாசம், இசைமரபு, பரத சேனாபதீயம் போன்றவற்றைக் கூறுகிறார். இவற்றுள் பஞ்சமரபு, தாளசமுத்திரம், பரதசேனாபதீயம் என்ற நூல்கள் மட்டுமே இப்போது வழக்கில் உள்ளன.

  தந்தி மூலம் செய்தி அனுப்பும் முறையைக் கண்டு பிடிப்பதற்குப் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் மிக விரைந்து ஓடும் மனிதனைவிட, குதிரையை விட ஒலி இன்னும் மிக விரைவாகச் செல்லும் தன்மையது என்பதை அறிந்திருந்தான். பறை அல்லது ‘டாம்டாம்’ இவற்றில் அடிக்கும் குறிக்கோள் மூலம் செய்திகளை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு அனுப்பினர். ஒவ்வொரு குறியீட்டைக் குறிக்கவும் ஒவ்வொரு வகையாக அடித்தனர். வெகு தொலைவில் உள்ள மலையுச்சில் ஒருவன் இவ்வாறு பறையறைந்து செய்தி அறிவிப்பான். அடுத்த மலையிலுள்ளவன் அதைக்கேட்டு அவனுக்கு மறுமொழியாகக் குறியீட்டு முறையில் பறையறைவான். அடுத்த மலையிலுள்ளவனுக்கு அதேபோல் செய்தியைக் குறியீட்டின் மூலம் அனுப்புவான். இவ்வாறு தொடர்ந்து அனுப்பப்படும் செய்தி பல நூற்றுக்கணக்கான கற்களுக்கு அப்பால் உள்ள மக்களைச் சென்றடைந்தது.

  கால்வாய்களைக் காத்துநின்ற உழவர்கள் வெள்ளம் வந்ததும் அதைப் பறையறைந்து தெரிவித்தனர். இளநெல்லின் கண்ணும், அரிந்துவைத்த நெற்கதிகர்களிடத்தும் ஒருங்கே புனல் பரந்தது என்று துடியை முழக்கிப் புனல் பரந்த செய்தியை அறிவித்தனர். புதுப்புனல் மிக்குக் கரையையுடைத்துப் பெருகிவருங்கால் உடைமடையைக் கட்டுதற்குப் பறையையறைந்து, கடையரைத் தருவித்து தொகுத்தனர். கரை காப்போர் தம் காவற்பறையை முழக்கிக் கரையை அடைக்க ஆளேறுமாறு ஏவினர்.

murasu

–  தரவு  : தமிழ்ச்சிமிழ்