(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 10 : தாய் மரணம் – தொடர்ச்சி)

என் சுயசரிதை : அத்தியாயம் 5. நடுப் பருவம்

பி.ஏ. தேறினவுடன், நான் வழக்குரைஞராக வேண்டுமென்று தீர்மானித்து சட்ட வகுப்பில் சேர்ந்தேன். சட்டக்கல்லூரியில் படித்தபோது பெரும்பாலும் எங்கள் தகப்பனார் புதிதாய் கட்டிய எங்கள் எழும்பூர் பங்களாவிலிருந்து கல்லூரிக்கு மிதிவண்டியில் போய்க்கொண்டிருந்தேன். இந்தச் சட்டக்கல்லூரியில் நான் சேர்ந்தவுடன் நான்கைந்து வருடங்களாக என்னை விட்டுப்பிரிந்த என் உயிர் நண்பராகிய வி. வி. சீனிவாச ஐயங்கார் தானும் பி.ஏ. பரிட்சையில் தேறினவராய் என்னுடன் சேர்ந்தார். அவர் அப்படி சேர்ந்தவுடன் எங்கள் பழைய ஏற்பாட்டின்படி எப்பொழுதும் வகுப்பில் நாங்களிருவரும் ஒன்றாய் உட்கார்ந்து பேசிக் கொண்டு காலங்கழிப்போம். இதற்கு ஒத்தாசையாக நான் முன்பு கூறிய வாமன்பாய், சீனிவாச பாட்(டு) என்னும் இரண்டு மங்களூர் நண்பர்களும் கே. ஆர். சீதாராம ஐயரும் சேர்ந்தார்கள். எந்த வகுப்பிலும் நாங்கள் பஞ்சபாண்டவர் களைப்போல் எந்நேரமும் உட்கார்ந்து பேசிகொண்டிருப்போம், வாசுதவமாய் சொல்லுமிடத்து.

நான் சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது 1895-ஆம் வருடம் என் ஆயுளில் மற்றொரு துக்ககரமான சம்பவம் நேர்ந்தது. அதாவது அவ்வருடம் மே மாதம் 26-ந் தேதி என் தந்தை சிவலோகப்பிராப்தி ஆனார். உண்மையைக் கூறுமிடத்து அவரது மரணம் என் தாயாரின் மரணத்தைப் போல் அவ்வளவு துக்க சாகரத்தில் ஆழ்த்தவில்லை. இதற்கு முக்கிய காரணம் அவர் மரணத்திற்கு 6 மாதம் முன்பாகவே ஓர் கொடிய வியாதியால் அவர் துன்பப்பட்டபோது இனி இதனின்றும் அவர் பிழைப்பது அரிது என்று வைத்தியர்கள் எங்களுக்கு தெரிவித்ததேயாம். அக்காலம் முதல் கொஞ்சம் கொஞ்சம் இனி வரப்போகிற துக்ககரமான சம்பவத்திற்கு நமது மனத்தைத் திடப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முயன்று வந்தேன். ஆயினும் சிலகாலம் பொறுத்தே என் மனத்தைத் தேற்றிக்கொள்ள சக்தி பெற்றேன். அவற்றையெல்லாம் பற்றி இதைப் படிக்கும் எனது நண்பர்களுக்கு எழுதுவானேன்? இச் சந்தர்ப்பத்தில் ஓர் ஆங்கில கவி எழுதிய இரண்டு அடிகள் ஞாபகம் வருகிறது. அதன் மொழி பெயர்ப்பை எழுதுகிறேன். “சிரித்தையேல் உலகெல்லாம் சிரித்திடும் உன்னுடன், அழுதையேல் நீதான் தனியாக அழவேண்டும்” அன்று முதல் ஒரு தீர்மானம் செய்து கொண்டேன். அது என் சந்தோசத்தை உலகுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும். என்னுள்ளே என் துயரத்தை அடக்கிக்கொள்ள வேண்டும் என்பதாம்.

என் தந்தையின் தேக அசௌக்கியத்தின் காரணத்தினாலோ அப்பொழுது சுகுணவிலாச சபைக்காக தமிழ் நாடகங்களை எழுதி அவற்றில் நடித்த காரணத்தினாலோ நான் சட்டப் புத்தகங்களைச் சரியாகப் படிக்கவில்லை. இவ்வருசம் முதல் சட்டப் பரிட்சைக்கு (First Examination in Law) போனபோது நான் தேறுவேனோ என்னவோ என்று சந்தேகப் பட்டேன். ஆயினும் தெய்வாதீனத்தால் அதில் தேறினேன்.

1896-ஆம் வருசம் கடைசியில் திசம்பர் மாதம் பரிட்சையில் நாலும் சீனிவாச ஐயங்காரும் தேறினோம். அந்த பரிட்சைக்காக நாங்களிருவரும் ஒன்றாய்ப் படித்தோம் எங்கள் சடடப் புத்தகங்களை.

1897-ஆம் வருசம் சட்டப் பரிட்சையில் தேறி நாங்களிருவரும் உயர்நீதிமன்றத்தில் பயிற்சியாளராகச் சேர்ந்தோம். சீனிவாச ஐயங்கார் சேம்சு சார்ட்டுசு (James Sharts) என்பவரிடம் பயிற்சியாளராகச் சேர்ந்தார். நான் சிறுவழக்கு நீதிபதியாயிருந்து பெயர் பெற்ற இரங்கநாத சாத்திரியாரின் குமாரரான சுந்தரம் சாத்திரியாரிடம் பயிற்சியாளனாகச் சேர்ந்தேன். என் தமையனாராகிய, அச்சமயம் உயர்நீதிமன்ற வழக்குரைஞராக நடவடிக்கை நடத்திக்கொண்டிருந்த ஐயாசாமி முதலியாரின் அபிப்ராயப்படி என் துர் அதிர்ட்டத்தினால் சுந்தரம் சாத்திரியார் 4 மாதத்திற்குள்ளாக தேகவியோகமாக அவரது குமாரர் பிறகு உயர்நீதிமன்ற நீதிபதியாகிய குமாரசாமி சாத்திரியாரிடம் பயிற்சியாளனாக அமர்ந்தேன். 1897-ஆம் வருசம் முழுவதும் ஏறக்குறைய சீனிவாச ஐயங்காரும் நானும் வெவ்வேறு உபாத்தியாயர்களிடம் நீதிமன்றத்தில் நிருவகிக்கவேண்டிய விசயங்களைக் கற்க வேண்டியவர்களாய் இருந்தபோதிலும் இருவரும் ஒன்றாய் சேர்ந்து நீதிமன்றங்களைச் சுற்றி, பேசிக் கொண்டு வேடிக்கையாய் காலங்கழிப்போம். ஒவ்வொரு நாட்களில் ஏதாவது பிரிய வேண்டி யிருந்தபோதிலும் மத்தியானம் சிற்றுண்டி சாப்பிடுவதற்காக ஒருங்கு சேர்வோம். சாயங்காலங்களில் இருவரும் சுகுணவிலாச சபைக்கு ஓடிப் போவோம்!

வெளிப்படையாகக் கூறுமிடத்தில் முதல் வருசமெல்லாம் நீதிமன்றங்களைச் சுற்றி வேடிக்கைப் பார்ப்பதிலேயே கழித்தேன். 1898-ஆம் வருசம் ஆரம்பத்தில் ‘நாம் வழக்குரைஞனாக நீதிமன்ற ஆவணங்களில் பதிப்பிக்கபட்டு பதிவு(enrol) ஆகி வழக்குரைஞர் தொழிலைச் செய்ய ஆரம்பிக்கவேண்டுமே’ என்று பயந்தவனாய் 6 மாதம் சேம்சு சார்ட்டுசு அலுவலகத்தில் வி. வி. சீனிவாச ஐயங்காருடன் ஒத்துழைத்து நீதிமன்ற நடவடிக்கைகளை நடத்தும் விதங்களையெல்லாம் சற்றேறக்குறைய முழுவதும் கற்றுக் கொண்டேன். குமாரசாமி சாத்திரியார் அவர்களிடம் வித்தியார்த்தியாய் இருந்தபோதிலும் அவாது அலுவலகத்தில் நான் அதிகமாக ஒன்றும் கற்றவனன்று. இது அவர் தப்பிதம் அல்ல. என் தப்பிதம் தான் என்று நான் ஒப்புக்கொள்ள வேண்டும். 1898-ஆம் வருசம் சூலை மாதம் நான் உயர்நீதிமன்ற வழக்குரைஞனாகப் பதிவு(enrol} செய்யப்பட்டேன்.

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை