மரபு விளையாட்டுகளைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்!

 செல்வம் புலனே புணர்வு விளையாட்டு என்று

அல்லல் நீத்த உவகை நான்கே

(தொல்காப்பியர்,  தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல் 11)

எனத் தொல்காப்பியர், துன்பம் போக்கும் உவகைகளில் ஒன்றாக விளையாட்டைக் குறிப்பிட்டுள்ளார். இப்பொழுது நம் நாட்டில் விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்தாலும் வல்லவர்களை உருவாக்கும் வண்ணம் போதிய கருத்து செலுத்துவதில்லை. புதிய விளையாட்டுகளில் கருத்து செலுத்தும் நாம் மனத்திற்கும் உடலுக்கும் வலுவைச்சேர்க்கும் பரம்பரை விளையாட்டுகளைப் புறக்கணிக்கின்றோம். அவ்வாறில்லாமல் மரபு விளையாட்டுகளுக்கு முதன்மை அளிக்க வேண்டும்.

  பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருவது மகிழ்ச்சிக்குரியது. இவற்றுள் ஒன்றாகப் பள்ளிகளில் மரபு விளையாட்டுகளைச் சேர்ப்பதும் ஒன்றாக இருக்க வேண்டும். பாடத்திட்டத்தில் மரபு விளையாட்டுகள் பெயர்களையும் விளையாடும் முறைகளையும்  வகுப்பிற்கேற்ப சேர்த்துக் கற்பிக்க வேண்டும்.

  கல்வி வாழ்க்கை தொடங்கும் பொழுதிருந்தே விளையாட்டுகளை ஆடும் வகையில் விளையாட்டுப் பாடங்கள் இருத்தல் வேண்டும்.

சிறுவர், சிறுமி விளையாட்டுகள்,

மகளிர் விளையாட்டுகள்

ஆடுவர் விளையாட்டுகள்

இரு பாலர் விளையாட்டுகள்

முதியோர் விளையாட்டுகள்

நீர் விளையாட்டுகள்

மனையக வியைாட்டுகள்

வீர விளையாட்டுகள்

ஆடற்கலை சார்ந்த விளையாட்டுகள்

எனப் பல வகைகளாகப் பிரிக்கலாம்.

  பழந்தமிழர் விளையாட்டுகள் என்றால் எப்பொழுதோ விளையாடிய விளையாட்டு என்று எண்ண வேண்டாம்.  பழந்தமிழர் விளையாட்டுகள் என்றாலும் கடந்த நூற்றாண்டு தொடக்கத்திலும் விளையாடப்பட்ட விளையாட்டுகள் இவை.  செக்கிழுத்த செம்மல் தமிழறிஞர் வ.உ.சிதம்பரனார் அவர்கள், தாம் ஆடிய விளையாட்டுகளாகப் பல விளையாட்டுகளைக் குறிப்பிட்டிருப்பார். அவ்வாறு கடந்த நூற்றாண்டில் பள்ளியில் சிறாருக்கேற்ற மரபார்ந்த விளையாட்டுகள் பயிற்றுவிக்கப்பட்டன.

  காலங்காலமாக நாம்ஆடிவந்த விளையாட்டுகளில்  சிலவற்றைப் பார்க்கலாம்.

  இவை மட்டுமல்ல, வீர விளையாட்டுகள் முதலான தலைப்புகளின் கீழ் நாம் பார்த்தால்  மேலும் நூற்றுக்கணக்கான விளையாட்டுகளை அறிய இயலும்.

  இவற்றுள் இளஞ்சிறார் விளையாட்டுகளைத் தொடக்கத்தில் கற்றுத்தர வேண்டும். உச்சரிப்பு விளையாட்டு, வினா விடை விளையாட்டு முதலான மொழி சார்விளையாட்டுகள், மாணாக்கர்களின் அறிவுத்திறனையும் நிறைவாற்றலையும் வளர்ப்பன. அவற்றைத் தொடக்கப்பள்ளியிலேயே கற்றுத் தர வேண்டும். மாணாக்கர்களின் அகவைக்கேற்ற விளையாட்டுகளைப் பகுத்து விளையாட்டுப் பயிற்சி அளிக்கப் பள்ளிக்கல்வித்துறை ஆவன செய்ய வேண்டும்.

  விளையாட்டு என்பது  உடற்பயிற்சிக்கானதும் பொழுதுபோக்கிற்கானது மட்டுமன்று. வாணாள் முழுவதும் சிறப்பு  தரும் கல்வியுமாகும்.

  அக்கல்வியைத் தரும் தமிழக அரசு, மரபு விளையாட்டுகளுக்கு முதன்மை அளிக்க வேண்டுகிறோம்

    ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

    எழுமையும் ஏமாப் புடைத்து. (திருவள்ளுவர், திருக்குறள் 396)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை அகரமுதல 189, வைகாசி 28, 2048 / சூன் 11, 2017

நன்றி: சிறகு மின்னிதழ், பனிவெளி வலைப்பூ, விக்கிபீடியா, http://rinakhan1990.blogspot.com/2012/10/blog-post_3.html